துதிக்கை ஒற்றல் – கொடிறோஸ்

துதிக்கை ஒற்றல் – கொடிறோஸ்

கொடிறோஸ் (குறுநாவல்) ஆக்காட்டியின் மூன்றாவது வெளியீடு. யதார்த்தனின் “மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்’ சிறுகதைத் தொகுப்பு, வசிகரனின் “நோவிலும் வாழ்வு’ கவிதைத் தொகுப்பை அடுத்து கிரிசாந்தின் குறுநாவல் வெளியாகிறது. முதல் இரண்டு வெளியீடுகளுக்கும் ஈழச்சூழலில் குறைவான வாசிப்பே நிகழ்ந்திருக்கின்றன. இவற்றிற்கு என்றில்லை அனேகமான ஈழப் படைப்புகளின் நிலையும் அதுதான். காரணம் ஈழ வாசிப்புச் சூழல் பல முன்முடிவுகளுடன் இருக்கின்றது. அதனால் தன்னிச்சையான வாசிப்போ அல்லது இலக்கிய ரசனை சார்ந்த உரையாடற் குழுக்களோ இங்கே உருவாக முடிவதில்லை. உதிரிகளின் அபிப்பிராயங்கள் என்ற அளவிலேயே விமர்சனங்கள் இருக்கிறன. மிகச் சிறு அரசியல் வட்டங்களுக்கு அப்பால் நிகழும் இலக்கிய வாசிப்புக் குறித்த சந்தேகமும் அவநம்பிக்கையும் எப்போதும் இருக்கிறது. அவற்றை மெய்ப்பிப்பது போலப் புனைவுகளின் அரசியல் உரையாடல்களே இங்கே மூர்க்கமாக நிகழ்கின்றன. அப்படியான வாசிப்பிற்கும் விமர்சனத்திற்கும் மட்டுமே நம் சூழல் இசைவாக்கமடைந்திருக்கிறது. அதனால் அரசியல் உள்ளடக்கம் இல்லாத, நேரடியாகக் கதை சொல்லாத அதாவது படைப்பூக்கமான சித்தரிப்புடன் கூடிய காட்சி மொழி வழி நிகர் வாழ்வனுபவமாக திரட்டியளிக்கும் படைப்புகள் வாசிக்கப்படுவதோ உரையாடப்படுவதோ இல்லை. அவற்றின் இலக்கிய நுட்பம், வெளிப்பாடு, வாழ்க்கைப் பார்வை கவனப்படுத்தப்படுவதில்லை. அவை ஏதோ இரண்டாம் நிலைப்படைப்புகள் என்ற கவனிப்பின்மை எப்போதும் இருக்கிறது. அவற்றைக் கவனப்படுத்தும் பெரு விருப்புடன் கொடிறோசை வெளியிடுகிறோம்.

தர்மு பிரசாத்

கொடிறோஸ் பதிப்புரை இணைப்பு

TAGS
Share This