10: மயக்கு விளி

10: மயக்கு விளி

“போரில் நான் கொன்றவர்களை உயிருடன் எழுப்பினால் இன்னொரு அரசையே நான் நிறுவ முடியும் மூடனே” என்று ஆங்காரமாகக் கத்தியபடி தன் வெட்டுப்பட்ட குறைக் கரத்தை உயர்த்தியபடி மதுவில் உடல் நடுங்க மதுச்சாலை வாசலில் சாய்ந்திருந்தான் வாகை சூடன்.
அவனது இடக்கால் சதைகள் துள்ளியணைந்தன. “என் உடலில் பாய்ந்த அம்புகளைக் கொண்டு என் படைக்கலத்தை ஆக்கிக் கொள்வேன். வடித்த குருதியைக் கொண்டு என் அரண்மனையை மண்ணில் குழைத்துக் கட்டி முடிப்பேன்” எனச் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது அவனது வாயினால் மதுவும் ஊன்சோறும் பிரண்டு வழிந்து வயிற்றை எக்கினான். பிறகு வானை நோக்கியபடி படுத்திருந்தான். “இந்த விண்மீன்கள்..” என்று சொல்லத் தொடங்கியவன் உளம் கலைந்து சரிந்தான்.

பாணர்களும் விறலியரும் மதுச்சாலையின் உள்ளே பறைகொட்டி யாழிசைத்து குழலூதி எழுப்பும் இன்னிசை ஒவ்வொரு மதுச்சாலையின் வாசல்களிலும் சத்திரங்களின் திண்ணைகளிலும் கூடியெழுந்தது. “இன்னும் சில நாட்களுக்கு இது மண்ணல்ல. விண்” என முதுபாணர் கீர்த்த மந்திரர் இளைய விறலி அரூபிக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். “பெண்ணே, இந்த மண்ணின் அடியில் ஓடிக்கொண்டிருப்பது என்றும் வற்றாத குருதியாறு என்பதை நீ அறிக. அதன் மேல் நிகழும் களிகள் எல்லாம் அந்த ஆற்றில் குளிக்கும் விசையினால் எழுபவை” எனச் சொல்லியவர் அவளது கையிலிருந்த மூங்கில் புகையிழுப்பானைப் பறித்துக் கொண்டார். “என்னிடம் கொடுங்கள் கீர்த்தரே. உங்கள் மந்திரமெல்லாம் என்னிடம் செல்லாது. கொடுங்கள்” எனக் கோபித்துக் கையிழுத்தாள் அரூபி. “மலரே, உன்னை நான் காண எனக்கு மயக்கு விழிகள் வேண்டும். மயக்கில் உன் வடிவு ஆயிரம் தேவ கன்னிகளென ஆகின்றதை நீ அறிவாயா. மாட்டாய். தன்னழகைத் தானே அளக்கும் விழிகள் பெண்ணுக்குரியவையல்ல. அவை ஆண்களுக்குரியவை” என அரூபியின் கன்னத்தைக் கிள்ளிவிட்டுச் சிரித்தார். சுற்றிலும் இருந்த மஞ்சள் வெளிச்சமும் இன்னிசையும் சிவ இலையின் நறும் புகையும் மதுவினதும் கள்ளினதும் கலவியில் எழும் சுவை மணமும் அங்கிருந்த ஒவ்வொருவரின் மேனியிலும் ஒவ்வொன்றாக எழுந்தது.

“சொல்லொன்று அன்னத்தின் தூவியொன எங்கிருந்தோ வீழும் பொழுது அகக்கையில் பிடித்து வைத்து அதை ஊதி ஊதி விண்ணுக்கனுப்பி வானைக் கோடிகோடி அன்னங்களின் சிறகுகளாக ஆக்குவதே பாணர் பணி” என மதுச்சாலையின் நடுவிருந்த அமரும் குற்றியின் மேல் ஏறிநின்று சொல்பேசிக் கொண்டிருந்தான் பாணனொருவன். காண்பது மந்தி நாட்டியம் என அவனைக் கூவிக் கூவி உற்சாகப்படுத்தினர் கூட்டத்தினர். யாழிசைத்துக் கொண்டிருந்த விறலியொருத்தி “அன்னத்தின் தூவியை அனுப்பி என்ன செய்யப்போகிறீர் பாணரே, என்னைக் கொஞ்சம் ஊதி ஊதி மேலே அனுப்புங்கள். இந்தக் கிழப் பாணர்களின் தொல்லை தாங்கவில்லை” எனச் சொல்லி நகைத்தாள். அவள் சொல்லி நகைத்த பொழுது இடக்கன்னத்தில் ஒரு சுழிக்குழி எழுந்தது. “இதோ இதோ, பாணர்களே நாம் சேர வேண்டியது வானின் வெளியல்ல. இந்த விறலியின் குழி” என மெய்யாகவே பரவசப்பட்டு அந்தப் பாணன் பாடினான். “எங்கு விழும் ஒளியையும் நான் அவிழ்ப்பேன். ஆனால் உன் குழியின் இருளை நான் அகலாது காப்பேன் கனியே” என உச்சக்குரலில் குரல் நாண் இழுபடப் பாடினான். விறலி கூந்தலை விலக்கி குழியிருளைக் காட்டியபடி யாழின் நரம்புகளில் விரலாடினாள்.

“ஆ இதோ, இவளின் குழிக்குக் கீழே வண்டு மச்சம். ஆகா, இவள் பெண்ணல்ல மூடர்களே, அணங்கு.. அணங்கு” எனக் கிழப்பாணரொருவர் தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு சுட்டுவிரலை அவளின் கன்னக்குழியை நீக்கி நீட்டியபடி கைநடுங்கிக் கொண்டு உறுதியாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

“ஏய் கிழவா. இங்கே வா. எனக்கு உன் குருதி வேண்டும். வா” எனச் சொல்லியபடி தன் கூந்தலை இரு நீர்வீழ்ச்சிகளெனப் பிரித்துத் தோள்களில் பெருகப் போட்டு கண் மடல்களைச் சுருட்டி விட்டுக் கொண்டு புலிக் கால்களெனக் கைகளை விரித்து ஆட்டினாள் விறலி.

“தேவி உனக்கு என் குருதியை மட்டுமல்ல. என் வம்சத்தின் குருதியையும் சேர்த்தே தருகிறேன்” என மதுக்குவளையைத் தூக்கியபடி கீர்த்த மந்திரர் கூவினார். மதுச்சாலையின் சிரிப்புகள் போதையின் குழவிகள் எனத் தவழ்ந்து எழுந்தன.

வாகை சூடன் அந்த ஒலிகளைக் கேட்டபடி சொற்கள் பிடிபடாமல் சரிந்து கிடந்தான். அவனது கைகளின் இடையில் கைகளைக் கோர்த்து அருகிலிருந்த திண்ணையில் அவனைச் சோதியன் வளர்த்தினான். “மிக்க நன்றி தோழனே. மிக்க நன்றி” எனச் சொல்லியபடி துயிலில் கவிழ்ந்தான்.

சோதியன் அவனது போர்வையை எடுத்து வாகை சூடனை மூடினான். தெருவில் ஓடிக்கொண்டிருக்கும் போதையின் புரவிகளில் ஒன்றில் பற்றியேற விழைந்தான். மூன்று மூத்த ஆல்கள் சூழ நிற்கும் அந்த மதுச்சாலையைச் சுற்றி நோக்கினான். தேவ இலை மலர்க் காட்டில் இன்று தான் கடைசி அறுவடை. காலை முதல் பணியிலிருந்தான். காய்ந்த மலர்களைக் குவியலாக்கி பிசிறுகள் நீக்கி, தனிமலர்க் கொத்துகளென நீள் மூங்கில் குவைகளில் அடைந்தனர். ஓராள் உயரத்தை விட அதிகம் வளர்ந்த தீயிலைச் செடிகளின் தனிக்காட்டைப் போன பருவத்தில் விதையிட்டிருந்தனர். யாருமறியாமல் மலரும் காமமென ஒவ்வொரு செடியும் குலைகுலையாய்ப் பூத்தன. பசும் மலர்களின் வாசனையே நரம்புகளைத் தொட்டு மயக்கியது.

பருவத்தின் இடைநாளில் தீயிலைக் காட்டைப் பரிசோதிப்பதற்கெனச் சோதியன் காட்டினுள் சென்று வழிமீள முடியாமல் ஒரு பகலும் ஒரு இரவும் அங்கே அலைந்திருந்திக்கிறான்.
அன்று தான் அரூபியை அக்காட்டின் எல்லையில் காய்ந்த மலர்களை நெருப்பில் வாட்டியபடி புன்னகையின் பெண் முகமென அவள் மேலாடையின்றி மரக்கொம்பொன்றில் படுத்திருக்கப் பார்த்தான். அரூபியினது கொங்கைகள் தாமரை இலைகள் போல் பரந்து விரிந்திருந்தன. அதில் இரண்டு மண்ணிற நீர்த்துளிகள் போல் காம்புகள் தளும்பியபடியிருந்தன. தங்க மஞ்சள் மேனி. விழிகள் உள்ளங்கையில் மீன்களெனத் துள்ளுபவை.

விழிகளில் மயக்குக் கூடி தனக்குத் தானே புன்னகையென அவிழ்ந்து கொண்டிருந்தாள். நெடுத்த பாலை மரமொன்றின் பின்னாலிருந்து அவளைப் பார்த்தபடி ஒண்டிக் கொண்டான் சோதியன். தீயிலைக் காட்டுக்குள் திடீரெனக் கொட்டும் மழைபோல இருள் தனது திரையைப் பரப்பியது. அரூபி விரிந்து படர்ந்திருந்த மரக்கொம்பிலிருந்து மெய்யான காடு தொடங்குகிறது. ஒரு காட்டு முயலை உரித்து அதனைக் கொழுதடியில் தொங்க வைத்துத் தீயில் வாட்டிக்கொண்டிருந்தாள். இடையாடைக்குள் தொடைகள் தீ வெளிச்சத்தில் மினுங்கின.

காட்டின் குளிர்ந்த பனிக்காற்று அவளின் மேனியைத் தன் கரங்களால் தொட்டளைந்து மீண்டது. மீளவும் உருவற்ற கரங்களால் அவளைத் தேடித் தேடி வருடியது. அவள் ஒவ்வொரு குளிர்ச்சுருளுக்கும் ஒவ்வொரு இழுவையாய் மூங்கில் இழுப்பானை இழுத்தாள். முயலிறைச்சி வேகிச் சுடும் பருவத்தின் மணம் சோதியனின் நாசியில் புகுந்தது. அரூபி எழுந்து கொழுதடியிலிருந்த முயலை உருவியெடுத்தாள். அதன் மீது இரண்டு பெரிய எலுமிச்சைகளின் சாற்றைப் பொழிந்தாள். சிறு கத்தியொன்றால் அதன் கால்களையும் உடலையும் பிரித்தாள். இறைச்சியிலிருந்து பிரிந்த வாசனையை மூக்கில் உறிந்தாள். முயலின் சிறுதுண்டுச் சதையை வாய்க்குள் நுழைத்தாள். மெல்ல அரைத்து விழுங்கினாள். மீளவும் சிரித்துக் கொண்டாள். அணங்கு வந்தவள் போல முயலைப் பிய்த்து உண்ணத் தொடங்கினாள். நாவினால் அதன் சதைச்சுவையைத் தடவினாள். தன் உதடுகளை கடல் திரும்பும் அலைகள் போல் மடித்துக் கொண்டு சிரித்துச் சிரித்து உண்டாள். “ம்ஹ்ம்ம்..” என்று மெல்லிய முனகலை இடைக்கிடை எழுபியபடி முயலைத் தின்று முடித்தாள். சோதியனின் வாயிலிருந்து எச்சில் ஊறி மெல்ல இதழ்களில் கசிந்து ஒரு துளி வெளியே வந்தது. அதை நாவால் சுருட்டி வாய்க்குள் போட்டுக் கொண்டான்.

கைகளை ஆடைத்துணியில் துடைத்துக் கொண்டாள். மூங்கில் குடுவையிலிருந்த குளிர்ந்த நீரால் கைகளைக் கழுவினாள். அதன் சிலிர்ப்புக்கு முகத்தைச் சுருக்கிக் கொண்டு ” ஆ” என்றாள். நீரை அருந்தினாள். அதன் குளிர் பற்களில் முட்ட வாய்க்குள் நிரம்பிய நீருடன் விழிகளைக் குவித்து மூடி விழுங்கினாள். மரக்கொம்பில் தேவாங்கெனத் தூங்கிய யாழைக் கைநீட்டி எடுத்தாள். அவள் யாழை எடுத்த போது முலைகள் குமிந்தும் விரிந்தும் கூர்ந்தும் ஆடின. வெள்ளி நீர்க் குமிழ்கள் தொடு தொடு தொடு என விளித்தன. யாழை நாண்மீட்டி ஒரு விரலால் ஒரு தந்தியைத் தீண்டினாள். காடு அமைந்து அவளுக்கெனக் காதுகளாகியது. அரூபியின் விரல்களிலிருந்து நுரைக்கும் புதுப்புனலின் வெள்ளமென இனிய கீதம் சுனைத்தது.

சோதியன் வானில் கண்சிமிட்டி மறையும் விண்மீன்களைப் பார்த்தபடி சாய்ந்து படுத்திருந்தான். துயில் ஒரு அணைப்பென அவனை ஒரு நாழிகை மூடியது. வந்த வழி மறைத்துச் செல்லும் காதலன் போல விழித்த பொழுது கீதம் சென்று மறைந்திருந்தது. அவளது நினைவுகளின் தேக்கமென உளம் நிறைந்திருந்தது. அவளையும் யாழையும் காணவில்லை. நெருப்பு இன்னமும் மூண்டு கொண்டிருந்தது. கூகையொன்று நெடுந்தொலைவில் அலறியதின் கடைசி ஒலிமிச்சம் அவன் வரை வந்து மறைந்தது. எரிசுவாலைகளில் உள்ளங் கைகளையும் உள்ளங் கால்களையும் சூடேற்றிக் கொண்டு அவள் உண்டு முடித்த முயலின் எலும்புகள் தேக்கிலையில் கிடப்பதை நோக்கினான். முயலின் கால் துண்டொன்றில் எஞ்சியிருந்த இறைச்சிகயைத் தொட்டுப்
பார்த்தான். குளிர்ந்திருந்த இறைச்சியை எலும்பில் பிடித்த படி தீ மேல் திருப்பித் திருப்பிக் காட்டினான். எஞ்சிய முயலின் சிற்றாவித் துளியொன்று எழ அதை அவளென உண்ணத் தொடங்கினான். முயலின் எலும்பைக் கடிக்கும் சோதியனின் பற்கள் அரூபியின் பற்களை அந்த எலும்பென எண்ணி சரசம் கொண்டன.

*

காவற் கோபுரத்தின் ஏணிப்படியில் ஏறியபடி நிரதை திருதை என்ற இரட்டைச் சகோதரிகள் மதுவெறியில் சண்டையிட்டுக் கொண்டனர். “நீ தான் அதிகம் குடித்திருக்கிறாய். எனக்கு இன்னொரு குவளை வாங்கிக் கொடு” என நிரதை புலம்பியபடி திருதையின் கெண்டைக் காலைப் பற்றியிழுத்தாள். “நீ குதிரை குடிக்குமளவுக்குக் குடித்துவிட்டாய் நிரதை. வா. இப்போது உனக்கு வேறு பானம் வாங்கித் தருகிறேன்” என்று சொல்லிகொண்டே காவற் கோபுரத்தில் சாற்றி வைக்கப்பட்ட மூங்கிலேணியால் ஏறி உச்சிக்கு வந்தாள் திருதை. கைகளை நீட்டி நிரதையைத் தூக்கினாள். மரங்களின் தலைகளைக் கோதிச் சுழன்ற காற்று அவர்களைத் தள்ளிக் கொண்டு சென்றது. ஏழாவது கோபுரத்தில் அலவன் நிற்பதைப் பார்த்து விட்டுத் தான் திருதை ஏறினாள்.

தூங்கு முலைகளும் கொடிக் கரங்களும் நீள் நெற்றி முகமும் காதில் சுழித்து வளையும் கூந்தலும் தாமரைத் தண்டுக்கட்டெனக் கால்களும் கொண்டவள் திருதை. நிரதையும் அவளும் ஒரே அச்சில் வார்த்த இரண்டு உருக்குப் பாவைகள். விழிகளுக்கு மை தீட்டியிருந்தார்கள். ஆடைகள் குலையக் காற்றின் உசுப்பலில் முலைகள் குளிர்ந்தவர்கள் கைகளைக் குறுக்கே கட்டிக் கொண்டு சிரித்தபடி நகரை நோக்கினர்.

நகரெங்கும் களியாட்டு கோலாகலமாய் நடந்து கொண்டிருந்தது. காவற் கோபுரத்திலிருந்து பார்த்தால் கூடங்களில் நடப்பதையும் மனைகளிலும் புறக்கடைகளிலும் பிறர் அறியா மறைவிடங்களிலும் நிகழ்பவையும் விழிக்குக் கிட்டும். “ஆ அங்கே பார் அந்தப் பெண்ணைச் சுற்றி எத்தனை பேர் நடனமாடுகிறார்கள்… இந்தக் கிழவன் என்ன வெறுங்கையால் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கிறான்” என நிரதை பார்த்தவற்றைச் சொல்லியபடியிருந்தாள். திருதை காற்றில் காணமலாகிப் போனாள். நிரதை ஓடிச் சென்று காவற் கோபுர அறைக்குள் நுழைந்தாள். திருதை வாசலின் உட்பக்கத்திலிருந்த மூங்கில் கழித் தட்டில் சாய்ந்திருந்து தீயிலை இழுப்பானை விளக்கில் மூட்ட எக்கிக் கொண்டும் மதுவின் மயக்கில் கைவிலகிக் கொண்டுமிருந்தாள்.

அலவன் தன் குழலை இருகைகளாலும் கோதிக் கொண்டு இறுக்கியபடி தலையில் வைத்துக் கொண்டு திரிபதங்கனிடம் தன் ஆண்குலையை உறியக் கொடுத்திருந்தான். மடி நக்கும் கன்றென அவனது ஆண்குறியைக் குடித்துக் கொண்டிருந்தான் திரிபதங்கன். “பதங்கா.. ஆ.. என்னைக் கொல்கிறாயாடா” எனப் பிதற்றினான் அலவன். நிரதையும் திருதையும் இவர்களின் களியைப் பார்த்தபடி மாறி மாறிப் புகையை இழுத்துக் கொண்டனர். “டேய் அலவா, நாளைக்கு முதல் நாள் திருவிழாவுக்கு நீ வருவாயா” என்றாள் திருதை. “இல்லை திருதை. எனக்குக் காட்டின் முதல் காப்பு வளைவில் நாளை பணி”என மெல்லிய குரலில் மறுமொழி சொன்னான் அலவன். ” நிரதைக்கு மது வேண்டுமாம். உன்னிடம் புதிய மதுக்குப்பிகள் இருப்பதாகச் சொன்னாயல்லவா. அதுதான் கேட்டு விட்டுப் போகலாம் என வந்தோம்” எனக் கண் சிமிட்டினாள் திருதை. “அதோ அந்த மூன்றாவது அடுக்கில் நீல நிறக் குப்பி தான் அந்தப் புதிய மது. அதனுடன் சேர்ந்து இன்னொன்றும் வந்துள்ளது. ஒரு துளி நாவில் பட்டால். உலகம் ஆயிரம் வானவிற்களாய் உடைந்து ஆடத் தொடங்கிவிடும். பார்க்கிறாயா திருதை” என ஆவலுடன் கேட்டான் அலவன்.

“என்ன அது அலவா” என நிரதை முந்திக் கொண்டு வந்தாள். “இரு ஒரு முன்னோட்டம் காட்டுகிறேன்” எனச் சொல்லிவிட்டு “பதங்கா உன் மாயத்தை எடு” என்றான். திரிபதங்கன் அருகிருந்த சிறு குடுவையிலிருந்து பெருவிரலளவு தேன்வதை ஒன்றை அனைவர் முன்னும் திறந்து வைத்தான். “ப்பூ, இவ்வளவு தானா. நாங்கள் குடிக்காத தேனா” எனப் புளிப்புக் காட்டி விரல்களைக் குவித்தும் விரித்தும் அசைத்தாள் திருதை. “இல்லை திருதை. இது காப்பிரிகள் தேசத்திலிருந்து வந்திருப்பது. ஒரு துளி நாவில் பட்டால் போதும் மயக்குத் தீர ஐந்து நாழிகைகள் ஆகும்” எனத் திரிபதங்கன் விளக்கினான். “நான் நம்பவில்லை. இங்கே கொடு. நான் முழுவதும் விழுங்கி விடுகிறேன்” என நிரதை குழந்தையைப் போல சிணுங்கினாள்.
“இரு நிரதை. தருகிறேன்” எனச் சொன்ன திரிபதங்கன் நான்காம் விரலால் தேனில் தொட்டு அவளை நாக்கை நீட்டச் சொன்னான். காவல் நாய் சோற்றுக்குக் குழைவைதைப் போல நாவளர்ந்து தாழ்ந்தது. நிரதையின் நாவில் ஒரு துளியை வைத்துச் சுழற்றி “உமிந்து கொள் நிரதை” என்றான். கண்களை மூடி உமிந்தவள் திருதையின் மேல் சரிந்து விழுந்தாள். “பதங்கா, என்ன ஆயிற்றடா இவளுக்கு. மயங்கி விட்டாளா” என்று பதறினாள் திருதை. நிரதையைப் பிடித்து மூங்கில் தட்டில் வளர்த்தி விட்டு “இன்னும் மூன்று நாழிகையில் விழித்து விடுவாள் திருதை. நீயும் சற்று ஓய்வெடு. நாங்கள் ஒரு காவல் நடை நடந்துவிட்டு வருகிறோம்” எனக் கண் இமைகளைத் தோகையைப் போல் இரண்டு முறை ஆட்டினான் அலவன். “வாள்களைக் கொண்டு போகிறீர்களல்லவா இருவரும்” எனச் சொல்லிவிட்டுத் தீயிலையை இழுத்தபடி விஷமச் சிரிப்பொன்றை உதிர்த்தாள் திருதை.

காவற் கோபுரத்தின் மூங்கில் நடைபாதையால் கரங்களைக் கோர்த்தபடி நடந்தனர் அலவனும் திரிபதங்கனும். ஒரு பெரிய வாகை மரம் இலைகளைக் கிலுகிலுத்துக் கொண்டு காற்றை வீசியது. திரிபதங்கன் மூங்கில் தட்டியில் கைகளை ஊன்றி நகரின் களியை மேய்ந்தான். பின்னிருந்து வந்த அலவன் கைகளைப் பதங்கனின் வலக்கரத்தின் இடைவழியால் நுழைத்து அவன் மார்பின் நடுவிருக்கும் குறுமயிர்கள் வளர்ந்திருந்த சிறு தோட்டத்தை அளைந்தான். அவன் செவியுடன் தனது செவியை ஒற்றிக் கொண்டு “பதங்கா, உனது வாய் ஒரு மன்மதச் சுரங்கமடா. வாயில் கரும்பை வைத்திருக்கும் ஒரே மன்மதன் நீ தான்” என்றான் அலவன். “சும்மா சொல்லாதே அலவா. முத்தினியின் கரும்பும் உனக்கு வேண்டுமல்லவா. எனக்குத் தெரியும். நீ அவளின் களி விளையாட்டுத் தோழன் என்று” என அலவனின் கிளையும் கையைப் பிடித்துக் கொண்டு பதங்கன் சொன்னான். “பதங்கா, முத்தினி என் சிறு வயது முதல் தோழி. நாங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொண்டது எங்களை அளைந்து தான். அவள் பெண்ணெனத் தன்னை அறிந்ததும் என்னை மேலும் விழைந்தாள். அவளை நானும் விழைகிறேன். நீ சொன்னால் விட்டுவிடுகிறேன்” என பற்றிய கையை இறுக்கியபடி சொன்னான். திரும்பி அலவனின் விழிகளைப் பார்த்த திரிபதங்கன் “உண்மையாக அலவா. நான் சொன்னால் விட்டுவிடுவாயா” என்றான். “ஓம் பதங்கா. நான் உன்னை மணம் புரிய இயலாது தான். ஆனால் நாமிருவரும் மணம் புரியாமல் போர்வீரர்களென இந்தக் காவல் கோபுரங்களை மனைகளாக்கி வாழலாம். போர்க்களங்களில் கை கோர்த்து சமர் புரியலாம். உடலை எவ்வளவு விழைகிறேனோ. போரையும் அவ்வளவு விழைகிறேன்” எனச் சொல்லிகொண்டு அவனது இதழ்களை மலர்க்காம்பால் தொடுவது போல் விரலால் தடவினான் அலவன். காற்று அலவனின் குழலைக் கலைத்து மீண்டும் அடுக்கிய பொழுது அவன் தேவ கணமென எதிரெழுந்து நின்றான்.

கூர் வாள் போன்ற கண்களும் நாணும் பொழுது சிவக்கும் இதழ்களும் கொத்துக் கொத்தாக அரும்பிய மென் தாடியும் ஓடும் பொழுது கொள்ளும் புரவியின் பின்னழகும் வேழத்தின் விரிமுகமும் கொண்டவன் அலவன். திரிபதங்கன் தனது குடுவையிலிருந்து தேன்வதையைத் தன் இதழ்களில் பரவிப் பூசிக்கொண்டான். நிலாவின் ஒளியில் அது மழையில் ஊறிய இரண்டு செந்தாமரை இதழ்களென நனைந்திருந்தது. அலவன் தன் இதழ்களால் அவனது இதழ்களை ஒற்றினான். மூச்சுக் காற்றுகள் ஒன்றில் ஒன்று கலந்து பிரிந்தன. அலவனின் இடையையும் பின் தோளையும் பற்றினான் பதங்கன். பதங்கனின் முகத்தை மதுக்கிணமென ஏந்திக் கொண்டு இதழ்களில் தேனைப் புரட்டினான் அலவன்.

இருவரும் காற்றில் உடலை எறிந்தனர். வீசிய காற்றில் ஒருவரை ஒருவர் வானவில்லென எண்ணிக் கொண்டனர். தேன் வதைக் கட்டிகள் மழையென இருவருக்குள்ளும் பொழிந்தது. பதங்கனின் ஆண்குலையைச் சுற்றி நாவால் கோட்டை வரைந்து கீழிருந்து மேலாய் தேனை உண்டு எழுந்தான் அலவன். வதையிலிருந்து சில துளிகளைப் பதங்கனின் குறியில் வழிய விட்டான்.
தேன் தடவிய கரும்பினைக் குழைத்து வாயில் போட்டுக் கொள்ளும் பெருவேழத்தின் வேட்கையுடன் குறியுண்டான். எதுதேன் என அறியாத வகையில் தேனும் சுக்கிலமும் வழியும் தன் வாயைத் தானே விழுங்கிக் கொண்டான். பிறகு இரு சிம்மங்கள் புணர்வது போல் காவல் கோபுரத்தின் மூங்கில்கள் அதிரப் புணர்ந்தார்கள். எழுந்து கோபுர அறைக்குச் சென்ற பொழுது விரலை வாயில் சூப்பியபடி குறண்டிக் கொண்டு படுத்திருந்த நிரதையின் மறுகையை குழந்தையின் கரமெனப் பற்றும் அன்னையெனத் துயில் கொள்ளும் திருதையைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள்.

*

மதுப்பீப்பாய்களை மணலில் உருட்டியபடி வாலிபர்கள் தீத்தலங்களை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். மதுப்பீப்பாய்கள் பெரிய மத்தளங்களெனச் செவிகளால் மணலை ஆடியாடித் தொட்டபடி முன்னோடின. பல பருவங்களைக் கொண்ட ஆண்களும் பெண்களும் ஆழியில் ஊறிய காற்றிலும் வானத்தில் கள்க்குவளையெனக் கிடந்த நிலாவையும் அள்ளிப்பருகியபடி தீத்தலங்களைச் சுற்றி தாளமிட்டபடியும் பாடல்கள் இசைத்தபடியும் களிவெறியில் மணலில் துகளென உருண்டனர். ஒளிக்கூச்சல்களில் நிழல்கள் சித்திரங்களென மரங்களிலும் அருகிருந்த உடல்களிலும் ஆடின.

குவிந்த கூந்தல்கள், பின்னிய விரிசடைகள், ஒற்றைப் பின்னல்கள், சங்குப் பின்னல்கள், காற்றில் எறியும் அவிழ் கூந்தல்கள், நரை ஒரு பின்னலென ஆகிய மாதுகள், இளங்குருத்தென கூந்தல் கொண்ட மங்கைகள், முழுவெண் குழல்கள் சரியும் கிழவர்கள், தாடிகள் நரைத்து பூங்கொத்தென வருடுபவர்கள், முகப்பருக்களால் வானமென ஆகிய கன்னங்கள், முதல் பருக்கள் முகிழ்த்த கன்னங்கள், பறைத்தோல் போன்ற கன்னங்கள், வழுக்குப் பாசிக் கன்னங்கள், சிற்பக் கன்னங்கள், கள் அப்பக் கன்னங்கள், மழைதுமித்த மணல் போல் கன்னங்கள், விசிறி போல் நெற்றிகள், கால்பங்கு நிலவு போல் நெற்றிகள், சிம்ம இறால் போல் நெற்றிகள், சிப்பி போல் உதடுகள், சிவந்த உதடுகள், மலரிதழ் இதழ்கள், மதுவண்ண இதழ்கள், குவிந்த இதழ்கள், விரிவேறிய இதழ்கள், விற் போல் இதழ்கள்.. சங்கரச் சேகரன் எதைப் பார்க்க எதையள்ள என அறியாத முத்தோடி கண்ட புதையல் போல் கடற்கரையில் பீப்பாயை உருட்டி வந்து திமிலரின் குழுவுடன் இணைந்து கொண்டான்.

சங்கரச் சேகரன் மதுப்பீப்பாயின் முன்னமர்ந்து அதை மத்தளமென அடித்துக் காட்டி கூட்டத்திற்கு வேடிக்கை காட்டினான். நீல இருளில் பரவிய புதுக்காற்று அனைவரின் முகத்திலும் விளையாட்டுத் தோழர்களைத் தொட்டு ஓடும் சிறுவனெனப் பாய்ந்து பாய்ந்து தொட்டது. குழல்களும் கூந்தல்களும் தம்மருகில் குமிந்த உடல்களில் அலைந்தன. அவை பீலிகள் போல் மேனியை முத்தமிட மது வெறியும் தீயிலைப் புகையும் கைத்தாளங்களிலும் கால் ஆட்டங்களிலும் உருவெறியைக் கூட்டின.

ஆழக்கடலின் சாகசக் கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்த முதுபடகோட்டி திமிலரின் கதைக்குச் சங்கரச் சேகரன் பக்கவாத்தியம் இசைத்துக் கொண்டிருந்தான். “நாங்கள் அந்த பென்னம் பெரிய வால் கொண்ட சுறாவைப் பிடிக்கக் கடலில் பாய்ந்தோம்” என திமிலர் சொன்னதும் ” தோம் தோம் தோம்” என மும்முறை பீப்பாயின் கன்னங்களைத் தட்டிச் சங்கரச் சேகரனும் அவனது தோழர்களும் கூட்டுப் பாட்டுப் பாடினார்கள். “அந்தச் சுறாவைக் கரையில் கொணர்ந்த போது அரசர் நீலழகனே நேரில் வந்து பார்த்தார்” எனச் சொன்ன போது “தார் தார் தார்” எனக் கூவினான் சங்கரச் சேகரன். இளம் பெண்களின் சிரிப்பொலி தான் அவனது இசைக்கச்சேரிக்கான நாணயங்கள். “பெண்கள் சிரிப்பில் மட்டும் வள்ளல்கள்” எனக் கூட்டுப் பாட்டில் இருந்த ஒருத்தன் கூவினான்.
பெண்கள் மேலும் சிதறிச் சிரித்தனர். சங்கரச் சேகரனுக்குக் கைவலியெடுக்கத் தொடங்கவும் பீப்பாயை இன்னொருவனிடம் கொடுத்து விட்டு எழுந்தான். சற்றுத் தொலைவிலிருந்த சிறுவாடியில் ஒரு அகல் மட்டும் எரிந்து கொண்டிருந்தது. பட்டினமே தெருவிலும் கரையிலும் கிடக்கும் பொழுது மனைகளும் வாடிகளும் வெறிச்சென்ற தங்குமிடங்கள் மட்டுமே.

அகலிலிருக்கும் மென்சூடான எண்ணையைக் கைகளில் தேய்த்துக் கொண்டால் இதமாயிருக்கும் என எண்ணிக் கொண்டான். குடிலை நெருங்க நெருங்கத் தீயிலையின் மயக்கு வாசம் அவனைக் கரைவலையென இழுக்கத் தொடங்கியது. நீண்ட விரல்கள் போன்ற கூர்களைக் கொண்ட வெண்சங்கொன்று வாடியின் வாசலில் கட்டப்பட்டிருந்தது. இது திமிலருடைய வாடி என்பதை அது இருந்த நேர்த்தியிலேயே கண்டு கொண்டான். சீராய்த் தொங்கும் கழிகள். கவிழ்த்து வைக்கப்பட்ட சிறு கலன்கள். பின்னிக் கோர்த்து மூங்கிலால் அமைக்கப்பட்ட வாடிக் கட்டுமானம். திமிலரின் கைவண்ணம் தான் அது. உள்ளே இருந்து தீயிலை இழுப்பது யார். அவரின் வாடியென்றால் ஆமைக் குஞ்சுகள் கூடக் கால்களை இழுத்துக் கொண்டு அஞ்சி ஒளிந்து விடுமே. யார் அதுவெனக் கழியிடை நீக்கலினால் பார்த்தான். முதுகில் நரை புரளும் கூந்தல் அவிழ்ந்திருக்க கைகள் இரண்டையும் தூண்களென ஆக்கி எழுந்தமர்ந்திருக்கும் யாரோ ஒருத்தி. வலக்கையில் இருந்து கடற்குதிரை வடிவத் தீயிலை இழுப்பானை உறிஞ்சித் தலை குனிந்து முன்னால் ஒற்றினாள். நீக்கலை மாற்றி மேலிருக்கும் இடைவெளியொன்றால் பார்த்தான். மீசை அரும்பி மூன்று நாட்களாவது ஆனதா என அறியமுடியாத வாலிபனொருவன் அவளின் முலைக்காம்புகளைச் சங்கின் வாயென மெல்லச் சுழற்றி அவன் தலையளவு கொண்ட ஒவ்வொரு முலைக்குள்ளும் மணற்குழியென முகத்தைப் புதைத்துப் புதைத்து எடுத்தான். அவள் அவனது தீராத சாகசங்களுக்கு எளிய முத்தங்களை ஒற்றியபடி தீயிலையை இழுத்தாள். சங்கரச் சேகரன் வாடியைச் சுற்றி நண்டு போல் சப்தமின்றி வந்தான். அங்கிருந்த கருக்கில் ஒரு விழியளவு இடைவெளியிருந்தது.

திமிலரின் துணைவி இருதியாள் அங்கு நின்ற வாலிபனின் ஆண்குலையைச் சாளை மீனைப் பிடிப்பது போல் தன் தடித்த கரங்களுக்குள் வைத்திருந்தாள். மதுவில் கிறங்கி நின்ற வாலிபனின் ஆண்குலை உயிர்பெறவில்லை. இரண்டு தடவை குலுக்கியவள் சாளை மீனுக்கு ஒரு மெல்லிய அடி அடித்து விட்டு அவனைக் கீழ இழுத்து அமர்த்தினாள்.

கரை வலைகளைப் பாடியபடி இழுக்கும் இருதியாளைச் சங்கரச் சேகரன் பார்த்திருக்கிறான். கடற் போரில் முன்னிற்கும் கலன் தலைவி போன்ற அங்கமும் குரலும் கொண்டவள். கால் தசைகள் இறுகி மூங்கில் துடுப்புப் போலிருக்கும். அவள் வலையுடன் இழுபடும் பொழுது முலைக்காம்புகள் கடலிலிருந்து கரைக்கு வழிதவறிய ஆமைக் குஞ்சுகளைப் வெளியே எட்டிப்பார்த்து
விட்டுப் பின் மேலாடைக்குள் ஒளிந்து கொள்ளும். அவளது நரை புரண்ட கூந்தல் இருளும் ஆழியலை விளிம்புகளும் கலப்பது போல நீண்டிருக்கும்.

வாலிபன் சுருண்டு துயின்றான். அவள் விழிகளால் அகலை நோக்கி விட்டு எழுந்து நின்று ஆடையை முழுவதும் உரிந்தாள். கடல் அணங்கின் தேகம் அவளுக்கு. தன் இடக் காலை அந்த வாலிபனின் முகத்திற்கு மேலேயிருந்த தட்டில் தூக்கிவைத்துக் கொண்டு யோனியைத் துடுப்பிட்டாள். முனகி அவள் மூச்சு மூசி விரிய அகல் நூர்ந்தது.

சங்கரச் சேகரன் கதவைத் திறந்து உள் நுழைந்தான். நிலவின் வெள்ளிக் கோடுகள் வாடிக்குள் கீலம் கீலமாய் விழுந்து கொண்டிருந்தன. அவளது பிருஷ்டத்தில் விழுந்த வெண் கீலத்தில் சிறு புல்லெனக் கரு மயிரொன்று வளர்ந்து மின்னுவது தெரிந்தது. சங்கரச் சேகரன் அந்த ஈரமணல் குன்றை ஒற்றைப் புல்லுடன் அள்ளினான். உப்பின் ஈரம் இருந்தது. இருதியாள் தலைதிருப்பி அவனை நோக்கினாள். நோக்கியவளின் விழிகளில் மயக்கு ஒரு வலையென விரிந்து கிடந்தது. சங்கரச் சேகரன் இடைத்துணியை அவிழ்த்து நிலவின் வெண் கீலங்களுக்குள் நின்றான். விழிகள் தீயிலையின் துல்லியத்தால் இருதியாளை அளந்தது. எப்படிப் பார்த்தாலும் ஒரு முழுச்சுறா அவள். எங்கிருந்து தொடங்குவது என ஒரு கணம் தயங்கி வலக்காலைப் பரத்திக் கொண்டு நின்றான். இருதியாள் திரும்பி அவனுக்கு நேரே நின்று போதை குழைத்து ஆக்கிய இளம் மங்கையின் துடிப்புடனும் கலக்கத்துடனும் அவனை விழி நோக்கினாள். அந்தப் பார்வையின் இழுவையிலேயே ஆண்குறி மூங்கில் கழியென நீண்டு கொண்டது. இருதியாள் தலையை முன்னகர்த்தி அவன் மார்பை உறிஞ்சினாள். அவன் கால்வரை அவளின் நாச்சென்று பட்டது போல் மயக்குண்டான். அவள் தன் தடித்த வலுக்கரங்களால் அவன் ஆண்குறியைப் பற்றினாள். அதை முன்னும் பின்னுமென உருவினாள். மூங்கில் கழியென நிலைத்து நின்ற அக்குறியை விழிகளால் விழுங்கிக் கொண்டு முழந்தாளிட்டு இதழ் பிரித்தாள். அவளின் வாய்க்குள் நுழைந்த ஆண்குறி பேராழிச்சுழலில் சுழன்றிறங்கி மறையும் சிறுகலன் என அவனை இழுத்துச் சென்றது. விழிகள் தேய்ந்து தேய்ந்து உதிக்க அவன் வெளிச்சம் விழுந்து கொண்டிருந்த வாடியின் மேல்முகப்பைப் பார்த்தபடியிருந்தான்.

உடல் கொண்ட கடலெனத் ததும்பியபடியிருந்த இருதியாளின் பெரு யோனிக்குள் நுழைந்த சங்கரச் சேகரன் சிங்க இறால் ஒன்றை இரண்டாய்க் கீறிப் பரத்திய சதை போன்ற அவளின் அல்குலில் அவள் துடித்து துடித்து எழும்படி புணர்ந்து கொண்டே மழைகுழைத்த மணல் குன்றுகளென குமிந்திருந்த கொங்கைகளைக் கடித்துச் சப்பி சன்னதமாடினான். வாடிக் குடில் ஆழ்கடலென மூச்சடைத்து நின்றது. புன் மீசை படர்ந்த அழலனின் விழிகள் மெல்ல மயக்கிலிருந்து மீண்டு கடலொன்று கலனைப் புணர்வதைப் போல இருதியாள் சங்கரச் சேகரனின் மேல் ஏறியிறங்கிப் புணர்ந்து முனகிச் சொக்குவதைக் கண்டான். எழுந்து சென்று தன் சாளையை இருதியாளின் வாய்க்குள் நீந்த விட்டான்.

*

பாம்பாட்டிகளும் யானைப் பாகர்களும் கூடியிருந்த சத்திரத்தின் முன்முற்றத்தில் மூண்டிருந்த தீச்சுவாலைகள் மந்திவால்களெனச் சுழன்றெழுந்தன. முதுபாம்பாட்டி ஒருவர் ஊதிய மகுடியின் மயக்கிசையின் முன் இளம் விறலி சீரணி அரைக்காலில் குவிந்தமர்ந்து சர்ப்பத்தின் மென்னசைவுடன் அரங்கி அரங்கி ஆடிக்கொண்டிருந்தாள். அவளின் முதுகில் தீயின் வெளிச்சம் பொன்னெனப் படர்ந்து இன்னொரு முகமெனப் பொலிந்திருந்தது. மகுடியின் குழல் நுனியை விட்டு விழியகலாது அதன் ஆடலுக்கு மயங்கியிருந்தாள். விழிகளில் தாபம் கற்பூரத்தில் தீயென பற்றியபடியிருந்தது. அங்குசங்களைத் திண்ணையில் ஊன்றியபடி ஒரு கையால் அதனைப் பிடித்துக் கொண்டு மதம் கொண்ட நாகமென அவளை எண்ணிக் கொண்டனர் பாகர்கள். அவளின் மார்க்கச்சை திமிறி முலைகள் சீறும் பொழுது பெட்டியைத் திறந்ததும் தலை தூக்கும் சர்ப்பமென பார்ப்பவர் விழிகள் முலைகளை நோக்கியெழுந்தன.

அணங்கு வயப்பட்டதைப் போல் அங்கிருந்த ஒவ்வொருவர் மேனியிலும் அவள் ஒரு தீயென நெளிந்தாள். ஒவ்வொரு விழிகளிலும் அவள் தன் படத்தை விரித்தாள். அங்கிருந்த பாணனொருவன் “அவளின் அசைவுக்குத் தான் அந்த மகுடி சுழல்கிறது. அவள் மகுடியை ஆட்டும் பாம்பு” என முணுமுணுத்தான். திண்ணையின் தூணொன்றில் குட்டி வேழமொன்று கயிறிடப்பட்டுக் குழை மென்று கொண்டிருந்தது.

ஆடலில் தன்னை மறந்து பின்வளைந்தவள் அலைந்து குவியும் விழிகளுக்கிடையில் அசையாமல் தீ நோக்கியிருந்த குன்ற வேலனின் கண்மடல்களைத் தொட்டு மீண்டாள். திரும்பித் தீயின் களிக்குத் தன்னைக் கொடுத்தாள். ஒவ்வொரு நாவும் தானெனெ எழுந்தாள். “இப்போது தீ அவளது நாதம்” எனப் பாணன் உள்ளெண்ணினான். குன்ற வேலனின் கண்கள் அசைந்தெழுந்து அவளில் குந்தியது. மயிலின் காலில் நெளியும் பாம்பெனக் கைகளை விரித்து அலைத்தாள் சீரணி. அவன் முகத்தில் புன்னகை போன்ற ஒன்று தோன்றி மறைவதைப் பார்த்தவள் முன் வளைந்து மண்ணில் தன் மூச்சுப்படுமளவு நெருங்கினாள். செம்மண் அவள் மூச்சுப் பட்டுப் பறக்கும் மயக்கேகியது. குன்ற வேலனின் விழிகளில் அவள் ஒரு தாபக்குளத்தைப் பொழிய எண்ணினாள். தன்னை இழந்து எழுந்து சுழன்றாள். மகுடி ஏறி வளர்ந்தது. இளம் பாம்பாட்டிகள் ஆடலில் துடித்துத் தம் மகுடிகளை எடுத்துக் கொண்டு முதுபாம்பாட்டியின் பேரிசையுடன் பிணைந்து கொண்டனர். செவிகள் உட் சுருங்கி ஒவ்வொருவரும் ஒரு சர்ப்பமாகினர். சீரணியின் மெல்லுடலில் அக்கினியின் விள்ளல் துடித்தபடியிருந்தது. அவள் பாதங்களை எடுத்து ஒரு திசையிலிருந்து இன்னொரு திசைக்குச் சுழல ஆயிரம் நாகங்களெனக் கூந்தல் விரிந்து காற்றில் பாய்ந்து பாய்ந்து திரும்பியது.

சீரணி ஆட ஆட அவளின் நிழல் ஒவ்வொருவர் உடலிலும் ஏறியலைந்தது. பித்துற்ற யானையின் மதன விழிகள் கொண்டனர் பாகர்கள். புணர் சர்ப்பங்களின் வால் நுனியெனக் கால்களை உணர்ந்தனர் பாம்பாட்டிகள். பாணர்கள் சொல்லவிந்து ஆவியென மட்டும் எஞ்சியிருந்தனர். மூங்கிலில் மூட்டியிருந்த தீயிலையைப் புகையிழுப்பானைப் பிடுங்கி இடை வளைத்து ஒரு இளம் பாகனின் தோள் மேல் வலக்காலைப் போட்டுக் கொண்டு வான் நோக்கி ஈசனின் தலை போல் நிமிர்த்தி புகையை உறிஞ்சினாள். அங்கிருந்த ஒவ்வொருவரின் ஆவியும் அதில் உள்ளேறுகிறது என்ற மயக்கு எழுந்து பரவியது. அவள் இழுத்து நெஞ்சு நிறைத்துக் காற்றில் ஊதியதும் ஆவிகள் மீள உடல்களுக்குத் திரும்பின எனப் பாணன் கண்டறிந்தான்.

அவளிடமிருந்து தாமரை மலர்களின் வாசனை பெருகியது. உடல் நுணுகி நுணுகித் தீக்குழவிகள் எழுந்தன. அவள் மேனியின் ஒவ்வொரு அணுவும் ஒரு சோதியென எழுந்தது. அவள் விழியின் ஒவ்வொரு அசைவும் அதன் நாவென நீள்ந்தடங்கியது.

தூணில் கட்டப்பட்டிருந்த இளம் வேழத்தினருகில் சென்று அதன் தலையை மெல்ல வருடினாள் சீரணி. அதன் செவியிதழ்களைப் புறத்தால் தொட்டு நடந்தாள். அதன் முன் குவிந்தமர்ந்து விழிகளை நோக்கினாள். அது தழையை அள்ளி வாயில் போட்டுக்கொண்டு துதிக்கையை நீட்டியது. நாவை மெல்லப் பிரட்டி அசைபோட்டது. அது உண்டு முடிக்கும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கிருந்தவர்களின் விழிகள் ஒவ்வொன்றும் அவளின் பின்னால் குவிந்திருந்தன. அவள் எழுந்து நின்றாள். தீயின் ஒளிக் குழைவில் சத்திரத்தின் சுவரில் அவளின் உடல் பேரோவியமென அசைந்தது. நீண்ட யானையின் துதியின் ஈர நுனியைத் தொட்டாள். கைகளை மலர்க்கொடியெனப் பின்னிக் கொண்டாள். அவளின் இளமுலைகளை துதிக்கை தொட்டுத் தொட்டு அணைந்தது. நெஞ்சோடு அதை அணைத்துக் கொண்டாள். காம்புகள் எழுந்து துடிக்கத் தலையை உயர்த்தினாள். துதிக்கை ஒரு சர்ப்பமெனக் கழுத்திலேறி வளைந்து ஊர்ந்தது.

TAGS
Share This