தமிழ்த்தேசிய அழகியல் விமர்சனம் – ஒரு கேள்வி

தமிழ்த்தேசிய அழகியல் விமர்சனம் – ஒரு கேள்வி

‘வளர்’ காலாண்டிதழில் மூத்த எழுத்தாளர் அ. யேசுராசா அவர்கள் எழுதிவரும் பகிர்தல் எனும் தொடரில் யதார்த்தனின் முதல் நாவலான நகுலாத்தை பற்றிய சில பகிர்வுகளை எழுதியிருக்கிறார். இளம் எழுத்தாளர்களின் தொகுப்புகளைக் கவனமாக வாசித்து அதன் சொற்பிழைகள், எழுத்துப்பிழைகள் வரை குறித்து அவற்றை எழுத்தாக்கி முன்வைக்கும் அவரது பணி முக்கியமானது. அவர் குறிப்பிட்டிருக்கும் எழுத்துப்பிழை மற்றும் மொழிநடை தொடர்பிலான கருத்துகளை உளமார ஏற்கிறேன்.

எழுத்தாளராகவும் இதழியலாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அவரது பணிகளை நான் மிக மதிப்புடன் அணுகிறேன். சில இடங்களில் அவை குறித்து எழுதியும் பேசியும் இருக்கிறேன். அவரது ஒட்டுமொத்தப் பங்களிப்பை வரையறுப்பதோ அல்லது அவர் தொடர்பான முழுமையான மதிப்பீட்டை நிகழ்த்துவதோ இச்சிறு குறிப்பின் நோக்கமல்ல. அவரது அழகியல் நோக்கு தொடர்பில் தொடர்ச்சியாகப் பலராலும் மேற்கோள் காட்டப்பட்டு வரும் விடயம் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் முன்வைத்த மார்க்சிய அல்லது முற்போக்குவாத அழகியலுக்கு மாற்றான அழகியல்வாதத்தை முன்வைத்தார் என்பதே. எனது பார்வையில் அ. யேசுராசா தமிழ்த்தேசிய நோக்குநிலையிலான பார்வைகளையும் அறம் அல்லது ஒழுக்கவாதப் பார்வை கொண்ட அழகியலையும் முதன்மைப்படுத்தி பேசியும் எழுதியும் வருகிறார் என கருதுகிறேன். அறம் அல்லது ஒழுக்கம் தொடர்பிலான அவரது பார்வைகள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்பில் தொடர்ந்து பாலியல் ரீதியிலான சித்தரிப்புகளோ மானுட வாழ்வின் பிறழ்வுகளின் ஊசல்களோ அவருக்கு ஒவ்வாமையாக இருப்பதை சில இடங்களில் அவதானித்திருக்கிறேன். வளரில் வெளியாகியிருக்கும் அவரது குறிப்பிலும் அதன் தொனியை அவதானிக்க முடிகிறது.

இலக்கியம் என்பது உண்மை எனக் கருதுவது அடிப்படையில் தவறான பார்வை என்பது எனது தரப்பு. இலக்கியத்திற்குள் உண்மைகள் விவாதிக்கப்படும். ஆனால் அவை இலக்கிய உண்மைகள். மெய்யான வரலாற்றுத் தரவுகளுக்கு இலக்கியத்திற்குள் இரண்டாம் நிலைப்பட்ட முக்கியத்துவமே அளிக்கப்படும். வரலாறென்பது ஓர் ஓவியச்சட்டகம் எனும் அளவுக்கே புனைவுகளில் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு மிஞ்சி அவற்றின் விடுப்பு அல்லது புதின ஆர்வத்தினால் இது மெய்யே என வினவும் ஓர் அசரீரிக் குரல் வாசகருக்குக் கேட்கத் தொடங்கி விட்டால் அவர் புனைவை வாசிப்பதை உடனே நிறுத்தி விட வேண்டும். ஏனெனில் அது புனைவு என்றே வெளியாகின்றது. ஆக புனைவு எனும் பெயரில் என்ன விதமாகவும் வரலாறு திரிக்கப்படவோ விரும்பிய திசைக்கு இழுத்துச் செல்லப்படுவதோ இலக்கிய மோசடி அல்லது சுந்தந்திரத்தின் பெயரிலான மீறலாகவோ கருதுவது தவறு. புனைவுக்கு அச்சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் சுதந்திரம் எதனாலும் பறிக்கப்பட முடியாதது. அது அயோக்கியத்தனமான வாதம் எனச் சிலரால் சுட்டப்பட்டால் அது அவர்களின் பார்வை மட்டுமே.

புனைவு உண்மையல்ல. நாம் நம்பும் வரலாறும் உண்மையல்ல. அவற்றுக்கிடையில் நிகழும் நாடகமும் மானுட உணர்ச்சிகள் மோதிக்கொண்டு அடையும் உச்சங்களும் அதனூடான விவாதங்களுமே முக்கியமானது. ஒருவர் இலக்கியத்தை எதற்கு வாசிக்க வேண்டும் எனும் அடிப்படை வினாவிற்கு எந்த வகையிலும் அவர் வரலாற்று உண்மையை அறிந்து கொள்ள வாசிக்க வேண்டுமென்ற மறுமொழி பத்து விடைகளில் ஒன்றாகத் தனும் வர முடியாது. வேண்டுமானால் பொருத்தமற்றதைச் சுற்றி வட்டமிடுக எனும் வினாவிற்கு ஐந்தில் ஒன்றாக வந்தால் ஒரு நீள்வட்டம் வரையலாம்.

எதை எழுதலாம், அதை எவ்வளவு எழுதலாம், எத்தனை முக்கியப்படுத்தி எழுதலாம் என்பது எழுத்தாளரின் தனி அகம் சார்ந்த கேள்வி. இலக்கியத்தில் புனைவெழுத்தாளரின் அகத்தை நோக்கியே வாசகர் உரையாடுகிறார். இருவருக்கும் இடையில் வரலாறு ஒரு கண்ணாடியைப் போன்றது. தன் ஆடிப்பாவையை நோக்கி நிற்கும் இன்னொரு ஆடிப்பாவையெனத் தன்னை உணர்பவரே இலக்கிய வாசகர்.

அ. யேசுராசாவின் பார்வைகள் அவரது வாழ்க்கை நோக்குகளுக்கு அப்பாலான மாபெரும் மானுட வெளியின் பல்வேறு களங்களை அவநம்பிக்கையுடனும் சிறு தரப்பாகவுமே தொடர்ந்து முன்வைப்பதை அவதானித்திருக்கிறேன். அவரது குறிப்பில் முதலாவதாகச் சொல்லப்பட்டிருக்கும் ஒரு யாழ்ப்பாணத்து வீடு எனும் திரைப்படத்திற்கு அவரளித்திருக்கும் மதிப்பீடே அவரைக் கவரும் ஆக்கங்களிற்கான ஒரு வகைமாதிரி உதாரணம். அது ஒருவரின் பார்வையென ஏற்றுக் கொள்கிறேன். அத்தகைய நீதிக்கதை சார்ந்த எளிமையான உரையாடல்களை விவாதிக்க இலக்கியம் தேவையில்லை எனும் தரப்பைச் சேர்ந்தவன் நான். இலக்கியம் எத்தனை பிறழ்வையும் எத்தனை கீழ்மையையும் விவாதிக்க எந்த நிபந்தனையும் இல்லை. அதை எழுத்தாளரின் தனிப்பட்ட உளவியல் சிக்கலாகச் சித்தரிப்பது கூட ஒருவகைக் காலாவதியான பார்வை. சொல்லப்போனால் அத்தகைய அகம் சார்ந்த சிக்கல்கள் அங்கு இருப்பதாலேயே அந்த நாவல் மேலும் தீவிரமாகிறது. ஆனால் அதனூடாக அவர் பொதுமானுட உணர்ச்சிகளை நோக்கி விவாதத்துடன் எழ வேண்டும். நகுலாத்தை நாவலில் அழகியல் குறைபாடுகள் உண்டென்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அ. யேசுராசா குறிப்பிட்டிருப்பவை எந்த வகையிலும் ஒரு இலக்கியத்திற்குப் பொருட்டில்லாத அளவுகோல்கள்.

நிற்க. இலக்கியத்தில் பாலியல் குறித்த விவாதங்கள் தொடர்ந்தும் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். இவை மாற்றுப் பார்வைகளின் முரண் உரையாடலின் தன்மை. ஆனால் இக்குறிப்பில் அடிப்படையான ஒரே ஒரு வினாவைக் கேட்டு அதற்கான தரப்பை விளக்க வேண்டிய தேவை தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலான அழகியல் விமர்சனத்தை முன்வைப்பவர்களுக்கு உண்டு என்பதைச் சுட்டிக்காட்ட விழைகிறேன்.

தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் உப முரண்பாடுகள் கூர்மையாக்கப்பட்டு வகைமாதிரியற்ற உதிரி நிகழ்வுகள் மையப்படுத்தப்பட்டு இலக்கியங்களை உண்டாக்குவது புத்திபூர்வமான தயாரிக்கப்பட்ட இலக்கியம் என வரையறுப்பது அ. யேசுராசாவின் தரப்பு என அவரது குறிப்பிலிருந்து தொகுத்துச் சுருக்கிச் சொல்கிறேன். தமிழ்த்தேசிய நோக்கு நிலையைத் தந்திரோபாய ரீதியாகத் தோற்கடிக்கும் திட்டம் கொண்ட இத்தகைய இலக்கியங்கள் சமநிலை தவறுகின்றன. குற்றச்சாட்டுகளை அல்லது விடுதலைப் போராட்டம் மீதான விமர்சனங்களைக் கூர்மைப்படுத்துவதன் மூலம் தமிழ்த்தேசியத்தை பலவீனப்படுத்துகின்றன என அவரது பார்வையை நான் விளங்கிக் கொள்கிறேன். அதை ஓர் அளவுகோல் எனக் கொண்டு தொடர்ச்சியாகச் சிலர் கருத்துகளைச் சொல்லி வருவதுண்டு. இதே அளவுகோல் எங்கேனும் தமிழ்த்தேசிய சார்பு நிலை கொண்ட சயந்தன், தீபச்செல்வன், குணா கவியழகன், அகரமுதல்வன், வெற்றிச்செல்வி என நீளும் பட்டியலில் உள்ளவர்களுக்கும் வைத்து விவாதிக்கப்பட்டு நான் அவதானித்ததில்லை. எங்கேனும் அவ்விதம் நிகழ்ந்திருந்தால் அவற்றை நண்பர்கள் என் கவனத்திற்கு கொணரும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

என் கேள்வி எளிமையானது, யதார்த்தனோ ஷோபா சக்தியோ விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களை அதன் வரலாற்று நெருக்கடிகளை பரந்துபட்ட பார்வையில் முன்வைக்காது விமர்சனங்களை வைப்பது தவறென்றால் விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று நியாயத்தைப் பேசும் தமிழ்த்தேசிய சார்பு நிலை கொண்டவர்கள் அதன் மீதான விமர்சனங்களைக் குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு தங்கள் புனைவுகளில் சமநிலையாக எழுதவில்லை என்பது எங்கேனும் ஓர் அளவுகோலாக வைக்கப்பட்டு எழுதப்பட்டிருக்கிறதா? நீங்கள் ஏன் நியாயத்தை மட்டும் சொல்கிறீர்கள். அதன் நடைமுறையில் விடுதலையின் பெயரில் நாம் இழைத்த பெரும்பிழைகளை ஏன் நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை? சமநிலை இன்றி திட்டமிட்ட தந்திரோபாய உள்நோக்கத்துடன் ஏன் எழுதுகிறீர்கள்? என எங்காவது அவர்கள் தமிழ்த்தேசிய சார்பு நிலை கொண்ட அழகியல் விமர்சனத் தரப்பினரால் கேட்கப்பட்டிருக்கின்றனரா?

அங்கனம் இவை எங்கேனும் எழுத்து வடிவில் கேட்கப்பட்டு இருந்தால் விவாதம் தொடரும். இல்லையேல் எந்த இடத்தில் கட்சி சார் மார்க்சியர்களும் முற்போக்குவாத அழகியல் உடையோரும் இலக்கிய அழகியல் எனும் மாபெரும் களத்தில் ஒரு சிறு தரப்பாகச் சுருங்கி இன்று குரல் வற்றியுலர்ந்து போய் உள்ளனரோ அதே பீடத்தின் அருகே தமிழ்த்தேசிய அழகியல் விமர்சனத்திற்கும் ஓர் ஆசனம் ஒதுக்கப்படும். எந்த ஒரு கருத்தியலும் ஒருபோதும் இலக்கியத்தை ஆள இயலாது. இலக்கியத்தில் கருத்தியல்கள் பிணவறைச் சோதனைக்கே கொண்டு வரப்படுகின்றன. இலக்கியம் பிரசவ வார்ட் இல்லை என்பதை மீண்டும் கவனப்படுத்த விரும்புகிறேன்.

TAGS
Share This