அடிப்படை வாசகர்

அடிப்படை வாசகர்

கொடிறோஸ் குறுநாவலுக்கு வாசகர்கள் எழுதிய குறிப்புகளில் ஒன்றில் வாசக வகைகள் பற்றி எழுதியிருந்தேன். அதில் எனக்கு அனுப்பப்படும் கடிதங்களில் தோன்றுபவர்கள் அடிப்படை வாசகர்கள் என்றே குறிப்பிட்டிருந்தேன். அவர்கள் கொடிறோஸ் கொடுக்கும் புனைவு இன்பம் சார்ந்த நோக்கிலேயே கதையை அணுகியிருக்கிறார்கள். அதில் ப. பார்தீயும் மாக்கியும் எழுதிய குறிப்புகள் தீவிர வாசக நிலைப்பட்டவை. ஒரு புனைவை அதன் வெளிக்கு மேல் தன் கற்பனையால் வளர்த்துச் செல்லும் எத்தனம் கொண்டவை.

அடிப்படை வாசகர், தீவிர வாசகர், தேர்ந்த வாசகர் எனும் மூன்று பிரிவுகள் வாசகர்களுக்குள் என்பதை அதில் குறிப்பிட்டிருந்தேன்.
வாசகர்களில் சாதியைப் போல ஒரு பிரிப்பு வேண்டுமா எனச் சிலர் கேட்டார்கள். ஆனால் அறிவார்ந்த விவாதங்களிலோ இலக்கியத்திலோ அவரவர் இடங்கள் வகுக்கப்பட வேண்டும். அது ஒரு குறிப்பிட்ட நாடகம் நிகழ்கையில் அவரவர் பாத்திரத்தை முழுதாக நடிப்பதைப் போல. அது ஒரு ஒடுக்குமுறை சார்ந்த பிரிப்பு அல்ல. அறிவு எத்தரப்பினராலும் ஈட்டி பெற்றுக்கொள்ளக் கூடிய காலமிது. ஆகவே கற்கமுடியவில்லை, ரசனை மேம்பட முடியவில்லை, நான் அடிப்படைகளைக் கூடக் கற்றுக்கொள்ளாமல் சமதையாக கருத்துக்களைச் சொல்வேன் என்பதை ஒரு உரிமையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அரசாங்க ஊழியர்களின் விடுமுறையைப் போன்றது அது. அவர்களுக்கு வழங்கப்படும் தனிப்பட்ட விடுப்புகள் சலுகைகள் எனவே கொள்ளப்படும். அவை உரிமையல்ல என மிகத் தெளிவாக குறிப்பிடப்படும்.
இலக்கியத்தில் கருத்துச் சொல்ல சாமானிய தரப்பிற்கு இருப்பது உரிமையல்ல. சலுகை. இலக்கியம் விவாதிக்கப்படும் இடங்களில் அத்தகைய குரல்களுக்கு ஒரு சிறுதரப்பு எனவே மதிப்பு அளிக்கப்படும்.

கொடிறோஸ் நாவலை வாசித்த வைதேகி அவர்கள் தனது முகநூலில் அதன் சித்தரிப்பு நிகழும் நுட்பத்தை பகடி செய்திருக்கிறார். நண்பர்கள் சிலர் அக்குறிப்பின் ஸ்கீரின் ஷொட்களை அனுப்பியிருந்தார்கள்.
அதில் அவர் குறிப்பிடுவது அதன் மிகையான வர்ணனை உருவாக்கும் வாசிப்புச் சலிப்பை என நான் பொருள் கொள்கிறேன். நான் ஜெயமோகனின் இலக்கிய அழகியல் பள்ளியைச் சேர்ந்தவன். ஒரு நாவலோ குறுநாவலோ தன் சித்தரிப்பு, வர்ணனை, நுண்தகவல்களால் விரிய வேண்டியது என்பதை ஏற்பவன். இலக்கியத்திற்கு வரலாறு அளவுக்கே தத்துவமும் முக்கியம் எனும் தரப்பே எனதும். ஈழத்து நாவல்களில் மு. தளையசிங்கத்தைத் தவிர புனைவெழுத்தாளர் எவரும் தத்துவார்த்த தளங்களை நோக்கி எழவில்லை. ஆகவே நான் நுட்பங்கள் பற்றியதும் தத்துவார்த்தம் பற்றியதுமான கரிசனைகளை ஒரு நாவலிடம் கோருவேன். அதே நேரம் நாவல் என்பது விறுவிறுப்பினதோ குறைத்துச் சொல்லுதலினோ கலையல்ல. அது தொகுத்துச் சொல்லுதலின் கலை. குறுநாவல் அத்தகையதொரு தொகுப்பின் பகுதியாக விரிவது.

கொடிறோஸ் தன் நிலத்தை உருவாக்குவதற்கு வழக்கமான ஈழத்து இலக்கியங்களை விட மிகையான நேரத்தையும் கவனத்தையும் கொண்டிருப்பது உண்மை தான். தர்மு பிரசாத்தும் நானும் உரையாடும் பொழுது அவர் சொன்ன ஒரு அவதானம் மிக முக்கியமானது. புனைவுகளில் ஈழத்தின் நிலம் எங்கும் விரிவாக உருவாகி வரவில்லை. இதை மேலதிக அழுத்தத்துடனேயே சொல்கிறேன். எழுதப்பட்ட நிலமே நிறுவப்பட்ட நிலம் என இலக்கியத்தில் ஒரு சொல்லுண்டு. ஆகவே நிலமும் சூழலும் மிகத் துல்லியமாக புனைவின் வாய்ப்புகளைக் கொண்டு உண்டாக்கப்படலாம். எது எதுவாகவும் கற்பனை செய்யப்படலாம். அதற்குள் உள்ள தாளம் தான் முக்கியமானது. அது ஒரு புதுக்குரலின் தாளம். ஆகவே அது பயின்ற ஏலவே உள்ள வாசிப்பை இடையுறுத்தும். ஆனால் அது வசீகரம் கொண்டது. நான் ஆழத்தில் ஒரு கவிஞன். ஆகவே என் மொழியில் இயல்பாகவே அதிகமான வர்ணனைகளும் சித்தரிப்புகளும் உண்டு. அவை நீங்கள் இதுவரை அறியாத பிறிதொரு புனைவுலகில் நிகழ்பவை. நீங்கள் தான் அங்கு வந்து அந்த ஆடலில் முழுமையாகத் திகழ்ந்து அறிய வேண்டுமே ஒழிய. நான் உங்களின் வாசிப்பினை நோக்கி சிந்திக்க கூடாது. ஒரு புதிய எழுத்தாளர் மொழிச்சூழலுக்குள் நுழையும் பொழுது அடைய வேண்டிய முதற் கவனம் அவரது மொழி குறித்ததே. இன்றிருக்கும் வெகுசில தனிநடை கொண்டவர்களில் நானும் ஒருவன் என்பது எனது நடை பற்றிய என் மதிப்பீடு.

எனது மொழியுலகை ஜெயமோகனுடன் ஒப்பிடுபவர்கள் உண்டு. சிலர் உரையாடல்களில் குறிப்பிட்டிருந்தனர். அவரது பாதிப்பு உறுதியாக என்னில் இருக்கும். ஆனால் நடையில் அல்ல. சொற்களின் தொகையில். சில இடங்களில் பார்வைகளில். சில அம்சங்களில் அதன் காட்சியமைப்பு சார்ந்த விரிவுகளில். ஆனால் அவர் எழுதிய எதற்கும் வெளிவந்த என் ஆக்கங்கள் ஈடானவை அல்ல. ஆனால் அவரை விட என் நடை தனித்தது. என்னில் இழைந்திருக்கும் கவித்துவம் எனது கவிதைகள் சார்ந்த மிக ஆழமான நீண்டதொரு வாசிப்பிலும் பயிற்சியிலும் விளைந்தது. ஆகவே என் நடையை வாசிப்பது ஒரு புதிய வாசிப்பிற்கு பழகுவது. ஒரு காட்டு யானையை பழகுவதைப் போல. ஒரு தீவிர வாசகர் புதிய நடையை விரும்பி ஏற்பார். அது அவருக்கொரு புதிய புனைவுலகிற்கான அழைப்பு. அவர்களை ஏற்றிச் செல்லும் புதிய கனவுப் புரவியொன்றின் வருகை.

கொடிறோசின் குறைபாடுகளை ஒருவர் தர்க்கபூர்வமாக எதிர்கொள்வது இலக்கியத்தில் அவரது இடத்தை அவரே வகுத்துக் கொள்வதற்கான வாய்ப்பு. அதன் அழகியலும் வாழ்க்கை நோக்கும் இதுவரை ஈழத்து புனைவுலகில் நிகழ்ந்திராதது. அதை அவர்கள் நிரூபணமாக மறுக்கலாம். நான் விவாதங்களை மதிப்பவன். ஆனால் நம் வாசிப்புச் சூழல் பழகியிருப்பது இரண்டு வகையான முதன்மை வாசிப்புகளுக்கு. ஒன்று, ஓர் அரிதான கதையின் திகைக்க வைக்கும் திருப்பங்களும் வணிக நடைக்கான சுவாரசியமும் கொண்டவை மேலானது. இரண்டாவது நூற்றுக்கணக்கான கதைச் சுருக்கங்களின் தொகுப்பென நாவல் உருவாவது. இரண்டுமே பெரும் போக்குகள். பலரது பெயர்களும் நினைவில் எழலாம். ஆனால் நாவல் எனும் கலை சுவாரசியத்தை முதன்மை அம்சமாக கொண்டிருக்காது. அப்புனைவு உலகு அளிக்கும் நுண்மையே வாசகர்களின் முதன்மை நோக்காக அமைய வேண்டும். “இப்படி நீங்கள் சொல்வது ஒருவகையான அழகியல் பார்வை” என ஒருவர் சுருக்கமாக எண்ணிக் கொள்ளலாம். ஆனால் நுண்மையை நோக்குவதென்பதும் அதன் விரிவான தன்மைக்குள் நுழையத் தயாராவதும் அடிப்படையான இலக்கிய வாசிப்பு எனவே நான் கருதுகிறேன். அது ஒரு பொதுச்சூழலில் சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

முகநூலில் வைதேகி எழுதிய பதிவில் உள்ள பகடியில் அவர் ஒரு அடிப்படை வாசகர் எனும் புரிதலையே நான் அடைந்தேன். ஆனால் அவர் தன் வாசிப்பினால் கொடிறோசை பற்றிய தன் பார்வைகளை விரிவாக எழுதி தன் தரப்பை முன்வைப்பாராயின் அது என் நல்லூழ். அப்பொழுது அவரை ஒரு தீவிர வாசகராகக் கணக்கில் கொள்ளலாம். அல்லது அவரது தெரிவின் சுதந்திரத்தின் பாற்பட்டது அது. புனைவு பற்றிய மூத்த எழுத்தாளர்களின் புரிதல்களே அதல பாதாளத்தில் இருக்கும் சமூகத்தில் வாசகர்களிடம் இவ்வளவு கோருவது சரியா என்றால் சரிதான் என்பதே என் தரப்பு. வாசகர்கள் தங்களது அழகியல் நோக்கை சொல்லில் வெளிப்படுத்த பயின்றாக வேண்டும். அது ஒரு சமூகத்தின் அழகியல் நுண்ணுணர்வு சார்ந்தது.

இலக்கியம் குருதி கேட்கும் தெய்வம் என இப்போது சொல்லத் தோன்றுகிறது எதனால் என்று தெரியவில்லை.

TAGS
Share This