விவாதத்தின் அடிப்படைகள்

“எனவே, மானுடர் எவ்வகையிலும் எங்கும் வெளிப்படுத்தியிருக்கும் அனைத்துத் துயர்களும் பொய்யே.
அன்பைநாடி, அடைக்கலம்கோரி, சினத்தைமூட்ட, பொறாமையைக் கிளப்ப, வஞ்சம் தீர்க்க, பிழையை மறைக்க, பழியை மறக்க, பொறுப்பை துறக்க என அனைத்துக்கும் மானுடர் கைக்கொள்வது துயரையே. எனவே இவ்வுலகில் பெரிதும் புனையப்பட்டது துயர்தான். புனையப்பட்ட துயருக்குள் எங்கோ ஒளிந்திருக்கிறது மெய்த்துயர், குழைத்துக்கட்டப்பட்ட மண்சுவருக்குள் விதை என”
– வெண்முரசு
ஜெயமோகன்
மானுடப் பண்பாடென்பது அதன் அனைத்து ஒத்திசைவையும் மாபெரும் விவாதங்களின் மூலமே கண்டடைந்து வளர்ந்து வருகிறது. எந்தவொரு சமூகத்திலும் ஒவ்வொரு அறிவுத்தள விவாதமும் ஓர் அருநிகழ்வு. ஈழத்தமிழ் சூழலில் நான் அவதானிக்கும் மிகப்பெருங்குறையென்பது ஒரு விவாதத்தை நிகழ்த்த முடியாது / விரும்பாது கருத்து உதிர்ப்புகளின் தொகையாக விவாதத்திற்கான நேரத்தைப் பயன்படுத்துவது. ஒரு சிகையலங்காரிப்பவர் வேலை முடிந்து வீடு திரும்பும் பொழுது கூட்டி அள்ளிக் கொட்டும் மயிரைத் தான் அவர் அத்தனை நேரமும் செலவளித்து வெட்டி ஒதுக்குகிறார். நம் விவாதங்களின் பெரும்பங்கு அத்தகைய பணியையே ஆற்றுகின்றன. ஆனால் விவாதமென்பது நெல்மணிகளை உழுது விதைத்து நீர்பாய்ச்சி களையகற்றி காவல் காத்து முற்றிச் சாய்ந்து நெற்கதிர்கள் பொலிகையில் மகிழ்ந்து அறுவடை செய்வது போன்றது. விளைச்சல் வீடு சேர வேண்டியது என்பது சுருக்கம். எந்த விவாதமும் உரையாடலும் ஒவ்வொரு அடியிலும் முன்னேறிக் கொண்டிருக்க வேண்டியது. ஆனால் பெரும்பாலான சமூகவலைத்தள மற்றும் பாமரர்களுக்கு விவாத முறைகள் பற்றிய அடிப்படைப் பயிற்சியின்மையை அறிவுத்தளத்தில் இயங்கும் வெகுசிலர் அறிவர். ஆகவே தான் சாமான்ய தளத்தில் நிகழும் அத்தைகைய விவாதங்களில் / அரட்டைகளில் அறிவுஜீவிகள் / எழுத்தாளர்கள் பங்கெடுப்பதில்லை.
அறிவுஜீவிகள்/ எழுத்தாளர்கள் என இங்கு முன்வைக்கும் பொழுது தனது துறையில், அது எதுவாக இருந்தாலும் தொடர்ந்து அறுபடாத சிந்தனைப் பங்களிப்பை செயலூக்கத்துடனும் அடிப்படை விவாத நெறிமுறைகளுடனும் முன்வைத்து உரையாடி தானும் எதிர்த்தரப்பும் அதனுடன் சேர்ந்து சமூகமும் முன்னகர உதவுபவர் அனைவரையுமே சுட்டும் சொல். அவரது பங்களிப்பே அவரின் முதன்மைத் தகுதியாக அவ. கிராம்ஷி இத்தகையவர்களை உயிர்ப்புமிகு அறிவுஜீவி (Organically intellectual) என வரையறுக்கிறார். அத்தகையவர்களுடன் ஒருவர் விவாதிக்க முனையும் பொழுது தனது தரப்பை தொகுத்து முன்வைக்க வேண்டுமென்பது முதலாவது அடிப்படையான நெறி. தன்னுடைய சிந்தனைப் பள்ளியையோ அல்லது ஆசிரியரையோ அல்லது கருத்தியல் தேர்வையோ ஒருவர் முன்வைக்கலாம். காற்றிலிருந்து நெருப்புப் பொறி வருவதில்லை. காற்று மரங்களை உரச வேண்டும். உலர்மரங்களின் உராய்வு எரியைக் காற்றுக்கு அளிக்கும். காற்று அதை ஒவ்வொரு உலர்மரத்திற்கும் தொற்றச் செய்து பின்னர் பசுமரங்களையும் எரிக்கும் காட்டெரியென மாற்றும். இங்கு உலர்மரங்கள் என்பவர்கள் ஏற்கெனவே அறிவுத்தளத்தில் பங்காற்றுபவர்கள். அவர்கள் அதை பசுமரங்களுக்கும் எரியச் செய்யும் ஆற்றல் கொண்டவர்கள். குடிகளும் பாமரர்களும் பசுமரங்கள் என வகுத்துக் கொள்ளலாம். காற்றை ஊடகங்கள் என சுட்டலாம். ஆனால் முதன்மையானது பொறிபற்றிக் கொள்ளும் அந்த முதல் மரங்களின் எதிரிணை தான். அதனைத் தோற்றுகை என விவாத மரபுகளில் சுட்டுவதுண்டு. ஒரு விவாதத்தின் அடிப்படைக் கேள்வியென்ன என்பதிலிருந்து தொடங்குவது.
அண்மையில் எழுத்தாளர் ஷோபா சக்தியின் மேல் பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுகள் ‘அதற்கமைந்த பெண்கள் குழுமத்தினால்’ அறிக்கையாக 114 பெண்களும் 2 அமைப்புகளும் கையெழுத்திடப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த வருடம் வேறொரு இளம் எழுத்தாளரின் மேல் அறிக்கையாக இல்லாமல் உதிரிக் குறிப்புகளாக வசைகளாக கேலிகளாக பாலியல் சுரண்டல் எனும் தலைப்பின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு முன்னர் இன்னொரு இடதுசாரி செயற்பாட்டாளர் மீதும் ஓர் அறிக்கையும் வசைக்குவிப்புகளும் விசாரணைகளும் தீர்ப்புகளும் நிகழ்ந்தேறின. செயற்தள, இலக்கிய தளங்களில் உள்ளவர்கள் மீதும் தொடர்ச்சியாக பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுகளை சிலர் எழுப்பி வருகிறார்கள். பெண்களின் பாதுகாப்பைப் பொதுவெளிகளிலும் அகத்திலும் உறுதி செய்ய வேண்டியதும் வளர்த்தெடுக்க வேண்டியதும் ஒவ்வொருவரினதும் கடமை. சமூக செயற்தளங்கள், கலை இலக்கிய உலகு உட்பட அதிகார நிறுவன அமைப்புகள் அனைத்திலும் நிகழ வேண்டிய பெருமாற்றத்தின் தொடக்கங்கள் இவை.
மூன்று நபர்கள் மேலே வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த இப்பொறுப்புக்கூறல் பொறிமுறையை சுருக்கமாக ‘அம்பலப்படுத்தல்’ எனும் வகைமைக்குள்ளேயே நோக்க முடிகிறது. அறிக்கைகளும் உதிரிக்குறிப்புகளும் தன்னளவில் ஓர் எதிரியைக் கட்டமைக்கின்றன. அவர் குற்றவாளியெனத் தனது அனுபவத்தினாலும் அறிவினாலும் தீர்ப்பிடுகின்றன. இவை பெரும்பாலும் உடல்ரீதியிலான வன்முறைகள் என்ற வகைமைக்குள் வருபவை அல்ல. நுட்பமான அகவுலக பாதிப்புகளையும் பொருளாதார ரீதியிலான பகிர்வுகளையும் சுரண்டல் என முன்வைக்கின்றன. இவை Metoo எனும் வகையில் முன்வைக்கப்பட்டாலும் மீடூ இயக்கம் போன்று அதிகார உறவின் நிமித்தம் விருப்பின்றி நிகழும் பாலியல், பொருளாதார சுரண்டல்களை மையப்படுத்தியவை அல்ல. அனைத்துமே விருப்பின் பேரில் பரஸ்பர உறவிலிருந்தவர்கள் பற்றியதாகவே அறிக்கைகளும் குறிப்புகளும் கருதுகின்றன. ஆகவே இது உறவுச்சிக்கல் எனும் வகைமைக்குள் வருவது. உறவுச்சிக்கல்கள் நுண்மையான பல இழைகளைக் கொண்டவை. அவற்றின் ஊடும் பாவும் எளிமையாகச் சுருக்க முடியாதவை. இருவர் எனும் பொழுதே அதில் பொதுச்சமூகம் அந்தரங்க சுதந்திரத்தை அளிக்க வேண்டும். அது குறித்த நியாய உரையாடல்களில் இருதரப்புக்கும் சம சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும். இடதுசாரிய செயற்பாட்டாளர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவர் இயங்கிய அமைப்பு விசாரணை ஒன்றை நிகழ்த்தி அவரை மீள இணைத்துக் கொண்டது.
இளம் எழுத்தாளர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு அவர் தன் மறுப்பையும் மன்னிப்பையும் பதிவு செய்திருந்தார். ஷோபா சக்தியும் தனது மறுப்பை பதிவு செய்துள்ளார். இனி இவ்விவாதங்கள் எங்கு செல்லும்? மாறி மாறி ஒவ்வொரு நிகழ்வுகளாகத் தொட்டெடுத்து அந்தரங்க வெளி சமூக ஊடகங்களுக்குத் தீனியளிக்கும் வாய்ப்புடன் முன்னகரும் அபாயமுள்ளது. அதை மீறி இவ்விவாதம் கரிசனம் கொள்ள வேண்டிய சில விடயங்களைச் சுட்ட விழைகிறேன்.
இத்தகைய சிக்கல்களின் போது எனக்கு எழுதப்பட்ட கடிதங்களுக்கு நான் பதிலளித்த போது நானும் சுரண்டல்காரர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் இணைத்து வசைபாடப்பட்டேன். பாலியல் சுரண்டல் ஆதரவாளர் என மின்கம்பத்தில் கட்டி சுடப்பட்டேன். பெண்களை மதிக்காதவன், ஆணாதிக்கவாதி, மேட்டிமைவாதி, அயோக்கியன் எனப் பலபெயர்களால் அழைக்கப்பட்டேன். என்னுடைய பிரதானமான தவறு என்னுடைய விவாத எல்லைகளையும் அடிப்படைகளையும் நான் ஏற்கெனவே முன்வைத்து உரையாடிய பின்னர் அது ஏற்றுக்கொள்ளுமிடத்தில் எனது நேரத்தை ஒதுக்கியிருக்க வேண்டும். எதிர்த்தரப்பினரும் என்னைப் போலவே எதையோ உரையாடிக் கற்று முன்னேற விரும்புகிறார்கள் என எண்ணியது என் தவறு தான். நிகழ்ந்தது நேரெதிர்.
மரபான விவாத முறைகளில் சாமான்ய – விஷேச தளங்கள் என இரண்டு பிரிப்புகள் உண்டு. அன்றாட மெய்மைகளுக்கு தத்துவார்த்த விவாதங்களில் ஓரளவே மதிப்புண்டு. விஷேச தள உரையாடல்கள் அதற்கான முன் தயாரிப்புகளுடனும் முயன்று கற்று பிழைவிட்டு மீளக்கற்று தன்னை வளர்த்துக் கொள்ளும் ஆர்வத்துடனும் நிகழ வேண்டியது. சாமான்ய தள உரையாடல்களை சராசரிகளுடன் உரையாடுதல் எனச் சுட்டி அப்போது எழுதியிருந்தேன். அதற்கும் புண்பட்ட சமூகவலைத்தளவாசிகள் என்னை மேலும் கேலி செய்தார்கள். ஆனால் இன்றும் நான் அவ்வழியே பொதுவிவாதத்திற்கான அடிப்படை கட்டமைப்பை உண்டாக்கும் என நினைக்கிறேன். தச்சில்லாத மாளிகை கட்ட முடியாது என்பது சிவவாக்கியரின் வாக்கு.
அறிவுத்தள விவாதத்தைக் கோருமொருவர் அதன் ஆதரவைப் பெறுவதற்கு தன் தரப்பை முன்வைத்து எதிர்த்தரப்புடன் விவாதித்து தன் பிழைகளை ஏற்றுக் கொண்டு தன்னை பாறையில் மோதுவதைப் போல அதன் தருக்கங்களுடன் மோதவைத்து அறிதலை நோக்கியே முன்னகர வேண்டும். விவாவதமென்பது குறுகிய தனிநலன்களுக்கென தனது நேரத்தை ஒதுக்கக் கூடாது. ஒட்டுமொத்த நோக்கில் அது தவறு என்றே கருதுகிறேன்.
இரண்டு வகை விவாதப் பிரிவைப் பற்றி ஜெயமோகன் தனது கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருக்கிறார். மாற்று நம்பிக்கை, மாற்று நிலைப்பாடு ஆகியனவே அப்பிரிவுகள். இதில் மாற்று நம்பிக்கையாளர்களிடம் விவாதமோ உரையாடலோ நிகழ வாய்ப்பில்லை. என்னுடைய சொந்த அனுபவத்தில் சொல்ல வேண்டுமென்றால் கடந்த வருடம் விவாதமென நான் எழுத சேற்றுப்புதை குழியென எதிர்த்தரப்பில் நின்றிருந்தவர்கள் என்னை சில்லறை வம்புகளில் தள்ளுவதையே முதன்மை இலக்காக கொண்டு செயற்பட்டனர். ஏனெனில் நான் விவாதித்தது அவர்களின் நம்பிக்கையுடன். எந்த வகை நம்பிக்கையையும் பகுத்தறிவினால் விளக்கிவிட முடியாது. ஓரளவேனும் விளக்க முடியும் தான், ஆனால் நம்பிக்கையாளர்கள் அதை ஏற்க மாட்டார்கள். ஏனெனில் அந்த நம்பிக்கையே அவர்கள் செயலூக்கத்துடன் இயங்குவதற்கான ஆற்றலை அளிக்கிறது. இப்போது சோபாசக்தி மேல் வெளியாகியிருக்கும் அறிக்கையிலும் ஒரு மதவெறியாளரின் நம்பிகையைப் போல அவர் குற்றவாளி எனத் தீர்ப்பு எழுதப்பட்டு அதை எவராவது கேள்வி கேட்டாலோ, விவாதம் புரிய முனைந்தாலோ என்ன நடக்கும் எனும் எச்சரிக்கை குறிப்புகளுடனும் வெளிவந்திருக்கிறது. இது மாற்று நம்பிக்கை எனும் வகைமைக்குள் வரும் விவாதப் புள்ளி. இதனுடன் போரிடுவது இருப்பதிலேயே நேரவிரயத்தை உண்டாக்குவது.
மாற்று நம்பிக்கையெனும் பெயரில் முடிவை எடுத்து விட்டு வருபவர்கள் விவாதத்திற்கோ உரையாடலுக்கோ தயாராகவிருப்பவர்கள் என நான் எண்ணவில்லை. அவர்கள் தங்களிடம் சூழல் தற்செயலென அளித்தவற்றையும் மேற்கத்தையே NGO க்கள் உருவாக்கிய பெண்ணிய விவாதங்களையும் மட்டுமே கருத்தில் கொண்டு அவற்றைத் தங்கள் நம்பிக்கைகளுக்கு ஏற்ப வளைக்கவும் ஆயுதமென மாற்றவும் முயல்வர். பாலியல் சுரண்டல் என்றோ ஒருவரை பாலியல் குற்றவாளியென்றோ தீர்ப்பிடுவது எவராலும் இயலக்கூடியது. சமூக ஊடகங்கள் அதற்கான தளங்களையும் சாத்தியங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. அதற்குப் பதிலாக ஒரு நபர் தன் ஏதோவொரு வகையான அதிகாரத்தை பயன்படுத்தி பெண்களையோ ஆண்களையோ குயர்களையோ சுரண்டுவதோ ஒடுக்குவதோ பற்றிய பொதுக்கவனத்தை உண்டாக்க அடிப்படையான கட்டமைப்புகளை உண்டாக்க வேண்டும். உதாரணத்திற்கு, அரசியல், சமூகப் பிரச்சினைகளுக்கான உண்மை கண்டறியும் குழுக்கள் போல ஒன்றை உருவாக்கலாம். அதில் பல்துறை சார்ந்த நிபுணத்துவம் கொண்ட அணியொன்று உண்டாக்கப்படலாம். அவர்கள் தங்கள் அறிகருவிகளையும் கருத்தியல் சாதனங்களையும் முன்வைத்து ஒரு விசாரணையை நிகழ்த்தி தம் குழுவை வெளிப்படுத்தி அறிக்கைகளை வலிமை சேர்க்கலாம். அதன் போது கூட இருதரப்பும் அப்பொதுக்குழுவினரால் விசாரிக்கப்பட வேண்டும். அவர்களது அறிக்கையே நம்பிக்கையை அளிக்கும். தோழமை எனும் பெயரில் நூற்றுக்கணக்கான கையெழுத்துகளை விட சமூக ஏற்பு அல்லது துறைசார் நிபுணத்துவம் கொண்ட குழு சக்தி வாய்ந்தது.
முற்சொன்ன மூன்று குற்றச்சாட்டு சந்தர்ப்பத்திலும் பொதுவிவாதத்தில் அறிவுத்தளம் எதிர்வினையாற்றும் பொழுது அபலைகளாகவும் அடங்கிக் கிடக்கும் பொழுது எல்லாம் அறிந்த அறிவார்ந்தவர்களாகவும் தங்களை முன்வைப்பதில் பெண்கள் ஈடுபாடு காட்டுகின்றனர். இத்தகைய போக்கு அநீதிக்கு எதிராகத் தங்களைக் காத்துக் கொள்ள வழியற்ற இன்னும் இந்த வரிசையில் இடம்பெறாத பெண்களையும் பற்றியது. அவர்களுக்கான முன்னுதாரணங்களும் குறித்தது. ஆகவே மிகைப்பொறுப்பு அவர்கள் மீது சுமத்தப்படுகிறது என்ற மெய்யையும் சேர்த்தே புரிந்து கொள்கிறேன். உண்மை அறியும் குழுக்களின் உதவி இத்தகைய இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் மனநிலைகள் சார் உணர்ச்சி வேகங்களைக் கடந்து சமன்வயத்துடன் இயங்க முடியும் வாய்ப்புள்ளது.
அண்மைய அறிக்கையில் வெளிப்படுவது ‘நிபந்தனையற்ற நம்பிக்கையைத்’ தங்கள் மீது கோரும் ஓர் குரல். அது எவ்விவாதக் களத்திலும் எக்காலகட்டத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல. இத்தகைய அறிக்கைகளை அல்லது விவாதத்தை முன்னெடுப்பதைப் பற்றி கடந்த வருடம் முன்வைக்கப்பட்ட பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான என்னுடைய முதற்கட்டுரையில் விரிவாக எழுதியிருந்தேன். எவரும் அவற்றைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. மீண்டும் அதே பாணி அம்பலப்படுத்தலாளர் செயலிலேயே சிலருக்கு ஆர்வமிருப்பதாகத் தெரிகிறது. மாற்று நம்பிக்கை கொண்டவர்கள் மாலைக்கண் நோய் உள்ளவர்கள் போன்றவர்கள். அவர்களுக்கு மாற்றுத்தரப்பு என்ன சொல்கிறதென புலப்படுவதேயில்லை. அவர்களது முதன்மையான கருவியென நான் அவதானித்தது ஒரு நம்பிக்கையை முன்வைப்பது, அதை நோக்கி ஆதரவைக் கோருவது, இணைய மந்தர்களினதும் அரசியல் சரிநிலைகளின் ஆதரவும் எளிதில் கிடைப்பது. அதைப் பெற்ற பின்னர் நான் நின்றுகொண்டிருக்கும் தரப்பு சரியானதே எனத் தனக்குத் தானே நம்பிக்கையை ஊட்டிக் கொள்வது.
அதன் பிறசாத்தியங்களைப் பற்றி வினவுபவர்களைத் துரோகிகளாக்குவது. மாபெரும் மானுட குல விரோதியெனச் சித்தரிப்பது. ஊகங்களின் வழி கதைகளை உண்டாக்கி பொதுவிலும் உட்பெட்டிகளிலும் காவித்திரிவது. இதன்வழி ஒரு அக அணியைத் திரட்டிக் கொள்வது. அதற்கு அந்த நம்பிக்கையை எல்லா நேரமும் அனைத்துத் தகவல்களின் வழியும் உறுத்திப்படுத்துவது. பின்னர் அதை ஒரு பொது உண்மையாகக் கட்டமைப்பது. என்னுடைய அனுபவத்திலிருந்து உதாரணத்திற்கு இத்தகையவர்களின் ஊகங்களின் தன்மையையும் அதனால் உண்டாகும் விளைவுகளையும் அதற்கான பொறுப்புக்கூறல் சிறிதுமின்றி இவர்கள் தொடர்ந்து செயற்படுவதையும் விளக்க முனைகிறேன்.
1. முதல் முறையாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த போது ஒரு கவிஞர் நானும் எனது நண்பர்கள் சிலரும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்த சிலரிடம் அவர்களிடத்திற்குச் சென்று பஞ்சாயத்து செய்து அச்சுறுத்த முனைந்ததாக ஒரு பகடியை எழுதுகிறேன் என்றோ அல்லது எவரோ உளவெனும் பெயரில் உண்டாக்கிய ஊகத்தையோ முகநூலில் பதிவிட்டிருந்தார். அதற்கு லைக்குகளும் கொமெண்டுகளும் அள்ளின. முதலில் நானும் அதை வேடிக்கையெனவே கடந்து விட்டேன். பின்னரான காலங்களில் பலரும் அதைத் தாம் உண்மையென எண்ணியதாகச் சொல்லினர். குற்றத்தை நேரடியாகச் சாட்டியவரிடம் எவ்வகையிலும் இன்று வரை நான் தொடர்பு கொண்டதில்லை. அது எனக்கு அவசியமுமில்லை. பொதுவெளி விவாதமென ஒன்று உண்டான பின் எதையேனும் அங்குதான் சொல்ல வேண்டுமென எண்ணுகிறேன். ஆனால் நான் ஒரு இலக்கிய கட்டப்பஞ்சாயத்து நடத்துவதாகப் பலரிடமும் எண்ணத்தை விதைத்தார்கள். அதை மறுக்கவோ அல்லது அதை ஒரு பகடியெனவோ அவர்கள் முன்வைக்கவில்லை. அதை ஒரு வகையில் எரிக்குத் தீனியென விட்டார்களோ தெரியவில்லை!
2. எனது புத்தக வெளியீடு டிசம்பர் மாதம் நிகழ்ந்தது. முன்னர் வேறொரு திகதி குறிக்கப்பட்டு பின்னர் புயல் காரணமாக நகரத்து நிலமைகள் சீரற்றிருந்ததால் அவ்வேளையில் நிகழ்வை நடத்துவது முறையல்ல என மாற்றுத் திகதியை வைத்திருந்தேன். அந்த நிகழ்வில் ஷோபா சக்தி உட்பட பல முக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வு தொடர்பில் ஒரே ஓர் ஒளிப்படம் நண்பர்கள் சிலர் முகநூலில் பகிர்ந்திருந்தனர். இந்தத் தற்செயலான ஷோபாவின் வருக்கைக்காவே எனது நிகழ்வு மாற்றி வைக்கப்பட்டது என்றும் ஷோபா வந்தது நிகழ்வில் என்னைப் புனிதப்படுத்தவும் குற்றங்களையவும் எனச் சொல்லி பக்கம் பக்கமாக எழுதினார்கள். மெய்யறிந்த நானோ என்ன செய்ய. ஊகங்களின் வழி புறணிகளை உண்டாக்கி அதை ஒரு மெய்யெனவே ஈற்றுவரை நம்பி மாய்வது அவரவர் தெரிவு. ஆனால் கொஞ்சங் கூட எதைப்பற்றியும் எந்த அக்கறையுமின்றி அவர்களால் இத்தகைய ஊகங்களை மெய்களாகத் திரிக்க முடிகிறது. சிந்திக்காமலே அதனைப் பலரால் காவ முடிகிறது. விந்தை தான்!
3. அந்த நிகழ்வில் வெளியான ஒளிப்படத்தை ஊரில் சந்துகளில் போஸ்ட்டர் ஒட்டும் அரசியல்வாதிகளின் தொண்டர்களைப் போல பலரும் பாரதூரமான குற்றச்சாட்டுகளுடன் காவித்திரிந்தனர். அதில் எனது நண்பனொருவனும் இருந்தான். அவனது நண்பர்களும் உறவினர்களும் அது தொடர்பில் அவனை நச்சரிக்கத் தொடங்கிய போது அவனது சகோதரியின் மூலம் குறித்த படத்தை குற்றச்சாட்டுகளுடன் முன்வைத்த பெண்ணிடம் நீக்கச் சொல்லிக் கோரியிருக்கிறார். அவர் அவனது உடலை மட்டும் ஒளிப்படத்திலிருந்து நீக்கியிருக்கிறார். அச்சகோதரி அப்பாவித்தனமாக அப்பெண்ணிடம் அதில் வேறு பெண்களும் கூட இருக்கிறார்கள். அவர்களையும் நீக்கலாமே எனக் கேட்டிருக்கிறார். அப்படி வெளியிடுவதில் அரசியல் அர்த்தமிருக்கிறது. இதைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன் எனச் சொல்லியிருக்கிறார். அந்தப் பதிவு இன்று வரை எனக்கு எவராலும் அனுப்பப்படவில்லை. பல்வேறு இடங்களில் வேறு பெண்களை பகடைகளாகவும் எந்தவிதப் பொறுப்புமின்றியும் பயன்படுத்துபவர்களிடம் என்ன பொறுப்புக் கூறலைக் கேட்கும் தகுதியிருக்கிறது எனத் தெரியவில்லை! இதற்காக வரிசை கட்டி ஒவ்வொருவராகச் சென்று பிழைபொறுக்கும்படி கோரி என்னைக் காப்பாற்றுங்கள் என அவரிடம் மண்டியிடுவதா!
4. என் மீது நிதிமோசடிக் குற்றச்சாட்டை அமைப்பின் உறுப்பினர் ஒருவர் வெளிப்படுத்தியிருந்தார். அது குறித்து எனக்கு அவநம்பிக்கையும் சலிப்பும் ஏற்பட அவ்வறிக்கையை ஒரு பொருட்டென இன்று வரை எதிர்வினையாற்றவில்லை. நிதிமோசடியாளன் போன்ற நாகரிகமான குற்றச்சாட்டாக அதை நான் கருதவில்லை. என்னைத் திருடன் என்கிறார்கள். பிறர் அதை நம்பலாம். ஆனால் நானே எப்படி நம்ப முடியும்! பின்னர் அவ்வறிக்கையை முகநூல் நீக்கியிருக்கிறது. எதனால் என நான் அறியேன். யாரேனும் ரிப்போர்ட் செய்தோ அல்லது முகநூல் தனது பில்ட்டர்கள் மூலமோ கூட அது நிகழ்ந்திருக்கலாம். ஆனால் நான் கூட்டுச் சதி செய்து பலரையும் ஏவி அந்தப் பதிவைத் தூக்கச் செய்தேன் எனவும் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானவன் எனவும் பட்டங்கொடுத்து தூற்றப்பட்டேன். அதற்கும் நான் என்ன செய்ய முடியும். அமைப்பு சார்ந்த நபர் நாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தியே அவ்வறிக்கையை எழுதியிருந்தார். ஆயிரந்தான் இருந்தாலும் அவர் மூத்தவர். நான் அதற்கான கண்ணியத்துடனே எப்பொழுதும் நடந்திருக்கிறேன் என்பது என் நிமிர்வுக்கு எனக்கு அவசியமானது. அதேவேளை, நான் அதை நீக்கச் செய்யவில்லை என ஒவ்வொருவரிடமும் சென்று தீக்குழி புகுந்து கற்பை நிரூபிக்க முடியாதல்லவா!
இவை போன்று பலநூறு ஊகங்கள் இன்று இணைய மெய்மைகளாக உண்டாக்கப்பட்டு நான் குணநலப்படுகொலை செய்யப்பட்டேன். நானாவது பொருட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டேன், ஆனால் எழுத்தாளர் தர்மு பிரசாத் குறித்த பிரச்சினை தொடர்பில் விரிவாகத் தனது கோணங்களை முன்வைத்த ஒழுக்கவாத பெண்ணியத்தின் புழுதிப் புயல் கட்டுரைக்காக அவர் ஷோபா சக்தியின் காலிடை தூங்குவது என வர்ணிக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டார். இணைய மந்தர்கள் கொண்டாடினார்கள். எல்லாக் காலங்களின் பெண்விடுதலையை முழுமூச்சாகக் கொண்டு இயங்கும் அத்தகைய மாமனிதர்களுக்கு நிச்சயமாக பெண்கள் இணைந்து ஒரு மாபெரும் நடுக்கல்லை நிறுவ வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து எனக்கில்லை. இணைய மந்தர்களின் பெண்ணிய சிந்தனைகளால் பெண்கள் விடுதலையை நோக்கி ஓரடி கூட முன்னகர முடியாது என்பதை எப்பொழுது விளங்கிக் கொள்வார்கள் என அறியேன்.
ஆகவே தான் மாற்று நம்பிக்கையாளர்களிடம் உரையாடுவதையோ அவர்களை நோக்கி ஒரு சிறு கேள்வியை எழுப்பவோ அறிவுத்தரப்பில் பலரும் அஞ்சுகின்றனர். எவரிலும் விளைந்து வளர்ந்துவிட்ட மூர்க்கத்தின் முன்னும் வஞ்சத்தின் முன்னும் எவர் சொல்லெடுக்க இயலும்? ஆணவம் விவாதங்களின் அடிப்படைகளுக்கு எதிரான குணாம்சம். அது செவி முதல் இதயம் வரை அடைத்துக்கொள்ளும் உலோகக்குழைவு. அதை வெட்டி நீக்கிச் சுத்தம் செய்யவே விவாதங்கள் நிகழ்கின்றன என நம்பும் தரப்பைச் சேர்ந்தவன் நான்.
இதைப் பெண்ணியப் பாசிசம் என வரையறுப்பது பற்றி எதிர்காலத்தில் உரையாடல்கள் நிகழலாம். ஏனெனில் எந்த விடுதலைக்கான கருத்தியலும் அதை முன்னெடுக்கும் பிரிவினரின் தன்மையால் பாசிசக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டிருக்க முடியும். அது விளைவுகளில் கடுமையான தாக்கங்களை நிகழ்த்தும். எனது புத்திக்குத் தெரிகிறது நான் மீண்டும் தேனிக்கூட்டில் கைவைக்கிறேன் என, ஆனால் என்ன செய்வது எனக்குள்ளிருக்கும் எழுத்தாளன் தன்னுடைய சொந்த மெய்மைக்கு மட்டுமே அஞ்சுபவன். ஜெயமோகன் குறிப்பிட்டது போல, எழுத்தாளராக வாழ்வது “ஒரு கெட்ட தேவதையை உபாசனை செய்வதுபோலத்தான். சொந்தத் தசையை அறுத்து பலியிடாமல் இந்த தெய்வம் கனியாது”.
இரண்டாவது பிரிவு மாற்று நிலைப்பாடு. மாற்று நிலைப்பாடுகள் தனிநபர் குறித்தவையல்ல. அவை அங்கு நிகழும் கருத்தியல் பற்றிய மாற்றுகளே. எந்தச் சூழலும் எந்தவொரு குறித்த பிரச்சினைக்கும் ஒற்றை வழியைக் கருத்தியல் தளத்தில் கொண்டிருக்காது. ஏராளமான கருத்தியல்களின் வால்களும் தலைகளும் ஒன்றைப் பிறிதொன்று கவ்வியபடியே அம்மாபெரும் சுழல் இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே அதை ஏற்றுக்கொண்ட மாற்று நிலைப்பாடு கொண்டவர்களுடன் விவாதமோ உரையாடலோ புரியலாம். உதாரணத்திற்கு, அவ்வறிக்கையில் எழுத்தாளர்களின் கலைப்பித்துகளும் பிறழ்வுகளும் எனும் பெயரில் பாலியல் சுரண்டல் நிகழ்வதாகச் சிலர் கருதுகின்றனர். அது ஒரு தரப்பு. ஆகவே அதை ஆதரிக்கும் ஏற்கும் தரப்பும் உண்டு என்பது அவர்களின் அறிக்கையிலேயே உண்டு. ஒரு எழுத்தாளர் இச்சூழலுக்கு எதிர்வினை புரியும் பொழுது அதன் மையக்கேள்வியை நோக்கியே எழுந்து செல்ல முனைவார். எத்தனை முறை எரிந்தாலும் விட்டில் பூச்சி ஒளியை நோக்கிச் செல்வதைப் போல.
எழுத்தாளரின் பிறழ்வு இயற்கையானது தானா? எனும் கேள்வியை அவர் வரலாற்றில் வைத்துப் புரிந்து கொள்ள முயல்வார். உதாரணமாக, கம்பன் தாசித்தெருக்களில் அலைந்தவன் எனச் சொல்லப்படுகிறது. அவனது மிகையான பாலியல் நாட்டம் எதன் விழைவு? அதற்காக அவனை நாம் வசைபாடுவதா? அவனது இலக்கியத்திற்கான மதிப்பு அவனது அக்குணாம்சத்தால் எந்த வகையில் பாதிப்படைகிறது? அவனை இன்று எவ்வகையில் மதிப்பிடுவது? பாலியல் ஒழுக்கத்தின் இன்றைய அளவுகோல் என்ன? என பல்வேறு கோணங்களில் தனக்குத் தான் கேள்விகளை எழுப்பிக் கொண்டு விவாதச் சூழலில் அடைபட்டிருக்கும் பல்லாயிரம் சாளரங்களில் சிலவற்றைத் திறக்கிறார். சட்டென்று விவாதக்களத்திற்குள் புதிய சில ஒளித்துண்டுகள் வந்து விழும். அதை பொதுப்போக்கில் விவாதத்தை திசைதிருப்பும் உத்தியென மூளைச்சோம்பேறிகள் விளக்கமளிப்பதுண்டு. ஆனால் மெய்யாகவே அம்மையச்சிக்கலை நோக்கி ஓரளவேனும் அத்கைய மூர்க்கமான ஒளிவேட்கை கொண்டோரே செல்ல முடியும். அது ஒரு விவாதத்தின் இறுதி அடைவுகளை நோக்கிய முக்கியமான பங்களிப்பு. ஆகவே இளையோரும் மூத்தோரும் தங்கள் தரப்புகளை முன்வைப்பது ஒரே நேரத்தில் பலநூறு சாளரங்களைத் திறந்து பேரொளியில் கூடம் நிறைந்து உண்மை துலங்கச் செய்ய உதவும். ஆனால் அச்சுறுத்தும் பெண்ணியம் எனும் வகைமையை அஞ்சுவதையும் புரிந்து கொள்கிறேன். என்னுடைய நண்பர்கள் பலரிடமும் உட்பெட்டியில் சென்று என்னைப் பற்றி பல பொய்க் குற்றச்சாட்டுகளையும் ஊகங்களையும் ஆணவத்துடன் உரையாடியவர்களை நான் பொருட்படுத்துவேனா? அவர்கள் அஞ்சுவது அந்த விழிகளற்ற ஆணவ மூர்க்கத்தை.
இத்தகைய கேள்விகளுடன் எழும் என் போன்ற ஓர் இளைய எழுத்தாளர் பாலியலையும் காமத்தையும் அதன் ஒழுக்கத்தையும் வரையறுக்காமல் இந்த விவாதத்தை முன்னகர்த்த முடியாதென்ற முட்டுச்சந்தை அடைவார். எது பாலியல் என்றால் தானே எது சுரண்டல் என வரையறுக்க முடியும். எங்களது காலகட்டத்தில் பெண்கள் காதலென வரையறுப்பது எதை? இணைத்தேர்வின் பொறிமுறைகள் எவை? விலகல் சுதந்திரம் இருவருக்கும் உண்டல்லவா?
உறவுகளில் கோரும் ஒத்திசைவு என்ன? யாரேனும் இவற்றுக்குத் திட்டவட்டமான இரும்புச்சிலை போன்ற திண்மையுடனும் மாறாத்தன்மையுடனும் ஒரு பதிலை அல்லது வரையறையை உண்டாக்க முடியுமா? ஆதாரமான கேள்விகளை நோக்கி முன்னகர்ந்து மையச்சிக்கலை உரையாடத் தொடங்குவதே குற்றமென அவர்கள் சுட்டும் தன்மைகளை விளக்க முடியும்.
மீள மீள இதே போன்ற வேறுபல கேள்விகளை கடந்த வருடம் எனதும் தர்மு பிரசாத்தினதும் கட்டுரைகளில் கேட்டிருந்தோம். எதை அவர்கள் தங்களது அடிப்படைக் கேள்வியென்றோ சிக்கலென்றோ அநீதியென்றோ முன்வைக்கிறார்களோ அதை எங்கேனும் தெளிவுபடுத்தக் கோருவது அவர்களுக்கு மேலே மீளவும் நிகழ்த்தப்படும் ‘கருத்தியல் வன்முறையாகப்’ பொருளளிப்பது வசதியான வாதம் தான். அதற்கு எந்த உழைப்பையும் ஒருவர் செலுத்தத் தேவையில்லை. எனது மூளைக்குள் ஒரு அகராதி உண்டு. அதில் சில அர்த்தங்கள் உண்டு. அதை நான் சொல்ல மாட்டேன் என முரண்டுபிடிப்பது விவாதத்தை ஒரு அட்டையின் சிறுகாலளவுக்கு கூட முன்கர்த்த முடியாது.
ஆகவே இம்முறை வெளிவந்திருக்கும் இவ்வறிக்கையையோ அல்லது எதிர்காலத்தில் வரவிருப்பவையோ குறித்து அவர்கள் எதைத் தேர்கிறார்கள் என்பதும் அம்பலப்படுத்தல் எனும் செயன்முறை விடுதலைக்கான கருவிகளில் ஒன்றென்றோ கொள்வது தெரிவுச் சுதந்திரத்தின் பாற்பட்டது. ஆனால் அடிப்படைகளுடனும் அறிவுடனும் கண்ணியத்துடனுமே எந்த நீதி கோரும் போராட்டமும் முன்னகர முடியும். ஊகங்கள் புறணிகள் எல்லாமும் உண்மையுடன் கலக்கையில் பழுதுபடுகிறது என்ற மெய்யை உணர வேண்டும். ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகளைக் கோருவது எவரும் அதற்காகத் தான். அதற்குப் பின் விவாதங்கள் அதனடிப்படையிலேயே நிகழும். ஊகங்கள் என்பவை சோப்புக்குமிழி ஊதி விளையாடுவது போன்றது. எத்தனை வேண்டுமானாலும் ஊதலாம் எவ்வளவு பெரிதாகவும் ஊதலாம். ஆனால் காற்றுப் பட்டு உடைந்து செல்பவை. ஆகவே மெய்களுடன் நீதிகோரலுக்கு முன்வருவது நீதி பற்றிய விவாதங்களில் அடிப்படையானது.
சுருக்கமாகச் சில வரையறைகளை எனது அறிவின் சேகரத்திலிருந்து முன்வைக்கிறேன். எவருக்கேனும் பயன்படுமென்றால் மகிழ்ச்சி.
* எந்த நீதிகோரலும் விவாதமென முன்னகர்ந்து நிரூபணத்தையும் உறுதியையும் கோருமென்றால் அது குறைந்த பட்ச ஆதரத்தைப் பொதுச்சமூகத்தால் கோரும். அதையளிக்கும் பொறுப்பு குற்றச்சாட்டை முன்வைப்பவர்களின் தரப்பிற்கு முதன்மையாக உண்டு. நிபந்தனையற்ற ஏற்பு ஒரு போதும் நிகழாது எனும் புரிதல் தேவை.
* விவாத எல்லைக்குள் மாற்று நிலைப்பாடுகள் நுழைந்து விடக்கூடாது என்று கோடு கீறிக் காவலிருப்பது தவறு. அனைத்துத் திசைகளை நோக்கியும் வரும் தொகுக்கப்பட்ட சிந்தனைகளைப் பொருள் கொண்டு மதிக்க வேண்டும்.
* தனது தரப்பை முன்வைக்கும் பொழுது தான் கையாண்ட அறிதல் கருவிகள் எவை? அவற்றிற்கான சிந்தனைத்தளம் எது? அதன் தற்காலத்தைய பயன்பாடு எத்தகையது? அதைப் பிற விவாதக் கருவிகளும் சிந்தனைகளும் மறுக்கும் பொழுது மேலும் கற்க வேண்டிய தேவையை ஏற்றுக் கொண்டு தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு மேலெழ வேண்டும். எதிர்த்தரப்பை வசைகள் மூலமும் கேலிகள் ஊடாகவும் அயோக்கியனாகச் சித்தரிப்பதன் மூலமும் வென்றுவிட விழையக்கூடாது. ஏனெனில் அது என்றும் நிலையான மாற்றங்களை உண்டாக்காது.
* விவாதக் களங்களில் ஒருவர் உணர்ச்சி வேகத்தில் தவறான சொற்பிரயோகங்களையோ முறையற்றோ நடந்து கொண்டிருக்க முடியும். ஒரு நூறு சந்தர்ப்பங்களை என் எதிர்த்தரப்பில் பார்த்திருக்கிறேன். ஆனால் அவை சுட்டிக்காட்டப்பட்ட பின்னரும் அவைக்கென வருந்துவதோ மன்னிப்புக் கேட்பதுவோ பொறுப்புக் கூறலோ இன்றி எனக்கு மட்டும் எல்லாம் பொறுப்பாக இருக்க வேண்டும் என்ற மனநிலையில் எந்த மெய்யான பரஸ்பர அறிதலுடனான பொறுப்புக் கூறலும் இங்கு நிகழாது.
கடந்த வருடம் ஆரம்பித்த உதிரிக் குற்றச்சாட்டுகளும் கீழ்மைப்படுத்தல்களுக்கும் இப்பொழுது அந்தியேட்டி முடிந்து விட்டது. ஆனாலும் அவர்கள் இக்காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட இளிவரல்களும் கொச்சைகளும் ஆதாரபூர்வமாக பலநூறு பேரின் சாட்சியுடன் பொதுவெளியில் என்மீதும் இன்னும் பலர்மீதும் உண்டாக்கிய தப்பெண்ணங்களும் இன்னமும் நீக்கப்படவுமில்லை. எங்கும் மன்னிப்பும் கேட்டிருக்கவில்லை. எந்தப் பொறுப்புக் கூறலுமில்லை! ஆனால் இவர்கள் முன்வைக்கும் உறவுச்சிக்கல்கள் பற்றிய கண்ணுக்குப் புலனாகாத ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு அறிவுத்தளம் ஆதரவளிக்க கோருவது எந்த வகையில் நியாயம்? அப்படி ஏதேனும் ஒரு மூடக்குழு அறிவுச்சமூகமென நின்றிருக்க முடியுமா?
நானோ அல்லது பிற எவருமோ நானறிந்த வகையில் எந்தக் குற்றம் சாட்டியவரையும் அவர்களுக்கு ஆதரவாய் அணிநின்றவர்களையும் அச்சுறுத்தவோ கீழ்மைப்படுத்தவோ ஊகங்களின் வழி புறணிகளை மெய்களாகப் புகைபரப்பவோ இல்லை என்பதை நிமிர்வுடன் சொல்லிக் கொள்வேன். இன்று அது நிகழ்ந்து ஒரு வருடம் கழிந்த பின்னர் இதை இன்னும் வலுவாகவே கூற முடியும். எங்கும் அவர்கள் ஒளிப்படங்கள் பயன்படுத்தப்படவே இல்லை. பொதுவெளியில் பகிரப்படும் தனிநபர்களின் ஒளிப்படங்களை பஸ் ஸ்ராண்ட் கழிவறையென எண்ணி பயன்படுத்துவது தவறு என்னும் அடிப்படை இங்கிதமோ நாகரிகமோ அற்ற கூட்டத்தில் நானொருவனில்லை என்ற நிமிர்வும் எனக்கிருக்கிறது. நான் மட்டுமில்லை. வழமையான கொசிப் பாலியல் கிசுகிசுக்களுக்கு அலையும் இணையவெளியோ கூட அவர்களைக் கொச்சைப்படுத்தவில்லை. இங்கு தவறிழைத்துகொண்டேயிருப்பவர் யார் என்பதை பகுத்தறிவுள்ளோர் சிந்திக்க வேண்டும்.
படித்து முன்னேறிய முதல் தலைமுறைப் பெண்களிடம் பாலியல் சுரண்டல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் நீதிகோருதலை நோக்கி நகர்வது நற்பேறே. அது பல்லாயிரம் பிற பெண்களுக்கெனத் தன்னைத் தான் எரித்துச் சுடரேற்றுவது போன்றது. ஆனால் அவர்களின் கல்வித்தகைமைகளோ அறிதல்களோ விவாதங்களில் புலப்படாமல் உளவியல் நிலமைகளும் நிபந்தனையற்ற ஆதரவு கோரலும் சலிப்பை உண்டாக்கும். அறிவார்ந்த பெண்களை நோக்கி நீ பலகீனமாய் இருக்கக் கூடாது எனச் சொல்வது தவறல்ல. உளவியல் நெருக்கடிகளுக்கு முறையான சிகிச்சைகளைப் பெற வேண்டும். அத்துடன் இணைந்து எதிர்ப்பது, போராடுவதென்பது பலவழிகளிலும் பலருக்கும் தீங்கினை விளைவிக்குமென்றால் அதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். நீதியின் இறுதி இலக்கு மட்டுமல்ல, வழிமுறைகளும் என்றைக்குமே முக்கியமானது. எதிர்காலத் தலைமுறைப் பெண்கள் இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும், அதற்கு இதை முன்னெடுக்கும் ஒருசில பெண்களாவது கற்று, சொந்த வஞ்சங்கள் கடந்து பொதுநீதியை நோக்கிச் சிந்திக்கவும் செயலாற்றவும் வேண்டும்.
அண்மையில் சின்னச் சாளம்பனில் ஒரு பெண் ஆணொருவரால் வீதியில் வைத்து நூறுக்கணக்கானவரின் முன்னே இரும்புக்கம்பியினால் அடித்து நொறுக்கப்பட்டார். அங்கு பார்த்திருந்தோர் அதைத் தடுக்கவில்லை. பெண்களை அடிப்பது மாபெரும் தவறென அறமுரைக்கும் சமூகம் ஏன் விழிதிறந்து செயலற்று நிற்கிறது? ஆனால் அந்தச் சூழலை நான் அறிவேன். அப்பகுதி எனக்குப் பரிட்சயமானது. அங்குள்ள பெண்களில் எவரோ ஒருவர் மாதமொருமுறையும் வாரங்களுக்கொருமுறையும் வன்முறைக்கு ஆளாகுவதை அறிவேன். உடல்ரீதியிலான தீவிரமான பாதிப்புகள் உண்டாக்குவார்கள். ஆனால் அழுது வடித்து மீண்டும் இணைந்து கொள்வார்கள். ஒரு பத்து வயதுச் சிறுமி தன் அம்மா தாக்கப்பட்டு முகத்தில் குருதி வழிய நின்ற போது அவளுடைய மனநிலை எப்படி இருந்ததெனக் கேட்டேன். தான் அழுது கொண்டிருந்ததாகச் சொன்னவளிடம் அப்பாவின் மீது உனக்கு அச்சம் வரவில்லையா எனக் கேட்டேன். இல்லை. அம்மா அடிவாங்குவதை நான் சிறுவயதிலிருந்தே பார்த்து வருகிறேன். பழகிவிட்டது என்றாள். என் புத்தி இன்னமும் அவள் பதிலுக்கு அதிர்ந்து கொண்டேயிருக்கிறது. இன்னும் நூறு பெண்களை உதாரணம் சுட்டலாம். நாடளவில் பல்லாயிரம் பெண்கள். நாம் உளவியல் மற்றும் உடலியல் வன்முறைகளை இயல்பாக எடுத்துக் கொள்ளும் மாபெரும் சமூகத்தின் பகுதிகள். இங்கிருந்து சுவிசுக்குச் சென்றல்ல. அருகிருக்கும் சின்னச் சாளம்பனிலோ புங்குடுதீவிலோ காரைதீவிலோ திருகோணமலையிலோ தான் நாம் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய குரல்வளையற்ற பல்லாயிரம் பெண்கள் இருள் மூலைகளில் வெறித்தபடி அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் சேர்த்து சிந்திக்கவும் பொறிமுறைகளை உண்டாக்கவும் வேண்டிய மாபெரும் பணி நம்முன் உள்ளதை உணர வேண்டும். எங்கிருந்து பிரச்சினைகளை நோக்குகிறோம் என்பதிலேயே ஒரு சிக்கலின் பல்பரிமாணம் பிடிபடும்.
முன்னேறிய பிரிவைச் சேர்ந்த பெண்கள் விவாதங்களில் அடிப்படையான கருவிகளைப் பயன்படுத்தப் பழகுதல் வேண்டும். உதாரணத்திற்கு மரபான விவாத முறைகளில் பிரமாணங்கள் என வகுப்பது. அதில் நேர்காட்சியாக ஒருவர் தன் சொந்த அனுபவத்தை முன்வைப்பது ஒரு அடிப்படை. இரண்டாவது, அனுமானம், அதை உய்த்துணர்தல் எனச் சொல்லலாம். உய்த்துணர்தல் வேறு ஊகங்களைக் கொண்டு கற்பனைகளை நம் வசதிக்கேற்ப அமைப்பது வேறு. எந்த நிகழ்வுகளின் தொகுப்பாக அந்த அனுமானத்தை வந்தடைந்தார் என்பதைச் சுட்ட வேண்டும். மூன்றாவது மூத்தோர் சொல் அல்லது உரைச்சான்று, எந்த சிந்தனை அல்லது மையக்கூற்றிலிருந்து இந்த முடிவுகளை நோக்கி நகர்ந்தார் என வரையறுக்க வேண்டும். நான்காவது ஒப்புமை. பிற ஏதேனும் ஒன்றுடன் பொருந்து வரத்தக்க ஒப்புமையுடன் தன் நியாயத்தை முன்வைத்தல். சூழ்நிலை சார் உய்த்துணர்வு அர்த்தாபத்தி என அழைக்கப்படும். அனுலப்தியும் உண்டு. இவை பழங்கால முறைகள். ஆனால் இவை ஒரு தொகுத்து முன்வைக்கும் முறைக்கான எடுத்துக்காட்டு. இத்தனையாலும் ஒருவர் தன் வாதத்தை முன்வைத்தாலும் பிறிதொருவரால் வேறு பிரமாணங்கள் மூலம் நிராகரிப்படவும் கூடும். எவர் வெல்கிறாரோ அது அக்கணத்திற்கான மெய்மை மட்டும் தான். எதிர்காலம் அதை மேலும் கூருணர்வுடன் மாற்றும்.
* விவாதமென நிகழ்பவையே இறுதி இலக்கை நோக்கிய முக்கியமான அடிவைப்புகள் என்பதை உணர வேண்டும். இணைய மந்தர்களோ அரசியல் சரிநிலையாளர்களோ அம்பலப்படுத்தலாளர்களோ இலக்கை நோக்கியவர்கள் அல்ல. அவர்களுண்டாக்கும் இருட்டு கூட்டுக்குள் இருக்கும் கம்பளிக்கு உதவலாம். வண்ணத்துப்பூச்சி கூட்டை விட்டு வெளியேறினாலே அதற்கு வானம்.
ஈற்றில் ஒருசில வார்த்தைகள். ஷோபா சக்தி ஈழத்தமிழ் சமூகத்தின் மகத்தான கலைஞன் என்பது என் மதிப்பீடு. அதற்காக அவர் எந்தக் குற்றமும் இழைத்தாரா இல்லையா என்பதை அறியேன். கலைஞரின் வாழ்வும் கலையும் வேறெனும் தரப்பைச் சேர்ந்தவன். ஆனால் அவர் குற்றமிழைத்திருந்தால் தண்டனைக்குரியவை என்றால் அவை கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். அது நான் என்றால் கூட அதுவே என் தரப்பு. எங்கும் எப்போதும் தமிழிலக்கியத்தில் பெண்ணுக்கு எதிரான வன்முறைகள் நியாயப்படுத்தப்பட்டதில்லை.
என் இலக்கிய ஆசிரியர் ஜெயமோகன் சொல்வது போல கலைஞர்கள் சமூகத்தின் முன்னுதாரண மனிதர்கள் அல்ல. அவர்கள் அதன் கூர்மையான உணர்கொம்பு. அதன் வழி அவர் ஆக்கும் படைப்புகளை அவர்களது குறைகளைக் கொண்டு மதிப்பிட முடியாது. ஆனால் அவர்கள் புரிந்தது தண்டனைக்குரிய குற்றங்கள் என்றால் அவை தண்டிக்கப்பட்ட வேண்டும். மூன்று அலைகளாக எழுந்து நீண்டு கொண்டிருக்கும் இத்தொடர்செயற்பாடுகள் தன் அறிதல் கருவிகளை வளப்படுத்தி முன்னகர வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. அவர்கள் தாங்கள் கோரும் நீதியென்ற சமூக விலக்கமோ புறக்கணிப்போ பின்நவீன தீண்டாமையோ சமூகத்தால் அளிக்கப்படாது என்ற மெய்யை உணர வேண்டும். அது நிலவுடமைக்கால நீதி. நம் காலத்தில் கோரும் நீதியைப் பற்றி ‘ஆழ்ந்து பரிசீலிப்பது’ நல்லது என எண்ணுகிறேன்.
அதற்கமைந்த பெண்கள் குழுவின் அறிக்கையில் கையொப்பமிட்டிருப்பவர்களில் பெரும்பாலானோரின் பங்களிப்பு என்னவென்பதை நானறியேன். ஆனால் வல்லமை குழுவினர் இதில் கையெழுத்திட்டிருப்பதைப் பார்த்த போது சில விடயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். முதன்மையாக வல்லமை குழுவினரின் சமூக முக்கியத்துவம் மிக அரிதானது. யாழ்ப்பாணத்தில் இன்றியங்கி வரும் முதன்மையான பெண்ணிய அமைப்பு. அவர்களது மைய நோக்கு வாழ்ந்து காட்டுதலின் ஊடாக சமூக மாற்றத்தை நோக்கி என்பதாகும். அவர்களுடன் பல தருணங்களில் இணைந்து பயணித்திருக்கிறேன். அவர்களது அமைப்பு பாலியல் வன்கொடுமைகள் நிகழும் இடங்களில் அவை நிகழ்ந்த குடும்பங்களிற்கான உடனிருப்பாகச் செய்யும் பயணம் அவற்றில் முக்கியமான ஒன்று. அத்தகைய இரண்டு பயணங்களில் நான் அவர்களுடன் சென்றிருந்தேன். இரண்டுமே என் பார்வைகளை உடனிருத்தலின் முக்கியத்துவம் பற்றி விரிவாக்கியவை.
புங்குடுதீவு மாணவியின் வீட்டிற்கு ஒருநாள் சென்றிருந்தோம். அவர்களது வீட்டில் சிலரே இருந்தனர். கழுவித் துடைக்கப்பட்டிருந்த வீட்டின் ஈரலிப்பில் அம்மாணவியின் ஒளிப்படத்தினருகில் அகல் விளக்கு மஞ்சள் ஒளி மாணவியின் முகத்தில் விழுந்து கண்ணாடிச் சட்டகம் ஒளிர்ந்து மங்கிக் கொண்டிருந்தது. அவரது அம்மா சுருக்கம் விழுந்த சுவற்றில் சாய்ந்தபடியிருந்தார். வல்லமையின் பயணிகள் அவ்வீட்டின் முன் விறாந்தையை நிறைத்து அமர்ந்திருந்தனர். அக்கணத்தில் சமூகத்திலிருந்து, முதன்மையாகப் பெண்களிலிருந்து துயரில் உடனிருத்தலின் எண்ணமும் அதன் நிகர்மதிப்பும் பெரும் எடையுடன் என்னை அழுத்தியது. எவ்வளவு முக்கியமான அருங்கணமது. அவரின் அம்மாவுக்கு அது ஒரு கண்ணீர்த் துளியின் அளவுக்கேனும் ஆறுதலாய் நம்பிக்கையாய் இருந்த அக்கணங்களை இன்னும் முக்கியமானதாய் கருதுகிறேன். அதுவே மானுடரில் தாய்மை. பிறகு அம்மாணவி புதைக்கப்பட்டிருந்த புதைமேட்டைச் சென்று பார்த்து அஞ்சலி செய்தோம். தென்னை மரங்கள் இலைகள் விரித்து நின்றன. நிழலும் வெய்யிலும் குழைந்து காற்று வீசிக் கொண்டிருந்தது. வெண்மணல் மேடொன்றில் அவர் புதைக்கப்பட்டிருந்தார். அருகில் பட்டிப்பூக்கள் ஊதா வர்ணத்தில் மலர்ந்திருந்தன. அங்கு நின்று விடுதலைக்கான பாடல்களைப் பாடினோம். அக்கணம் பிறிதொருவகை உள எழுச்சியை அடைந்தேன்.
பிறகொரு சந்தர்ப்பத்தில் ஆறு வயதுச் சிறுமி கொடுகலவி புரியப்பட்டுக் கொல்லப்பட்ட வீட்டிற்குச் சென்றிருந்தோம். அங்கேயும் கைகள் பற்றி அமர்ந்திருந்தார்கள். அவரின் புதைமேட்டினருகில் விடுதலைக்கான பாடல்களைப் பாடினோம் வெய்யில் எரிய எரிய. இத்தகைய உடனிருப்புகள் மிக மிக அவசியமானவை என்று கருதுகிறேன். இவை அவர்களின் பலநூறு பயண அனுபவங்களின் சிறு பகுதி மட்டுமே. கருத்தியல் தளத்தில் பெண்களை வளர்த்தெடுப்பதிலும் தொடர்ச்சியாக மாதாந்தம் உரையாடல்களையும் பல்வேறு பயிற்சிகளையும் அளித்து வருகின்றனர். தனிப்பெண்கள் குழுவென அன்றி ஆண்களும் இணை பயணிகளெனக் கொள்ளும் பார்வை கொண்ட விடுதலை விரும்பிகள். அவர்கள் உடனிருத்தலை தோழமையென்று கொள்பவர்கள்.
அதற்கமைந்த பெண்களின் அறிக்கையில் அவர்களது பயணிகளின் கையொப்பங்களைப் பார்த்த போது அது உடனிருத்தலின் பொருட்டென எண்ணிக் கொண்டேன். ஆனால் கருத்தியல் தளத்திலும் அவர்கள் தொடர்ந்து முன் பயணிக்க வேண்டிய எல்லைகளிலும் நான் இக்கட்டுரையில் குறிப்பிட்டிருப்பவற்றையும் இது போன்ற முன் நிகழ்வுகளில் எழுதியிருக்கும் விரிவான கட்டுரைகளையும் வாசிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் என் மதிப்பு மிக்க முன்னோடிகள் என்னும் வகையில் இதைச் சுட்டுகிறேன். கருத்தியல் மற்றும் அறிவார்ந்த தளத்தில் இத்தகைய உடனிருத்தல்கள் வழிமுறைகளைக் கருத்திலெடுக்க வேண்டும். அறிக்கையின் மீதான கேள்விகளை உசாவி அவர்களை மேம்படுத்தும் பொறுப்பும் வல்லமைக்கு இருக்கிறது.
இந்த உரையாடல்களில் நான் எவ்வளவு தூரம் பங்கெடுப்பேன் என இப்போது முடிவெடுக்கவில்லை. ஆனால் வசைபாடப்படுவேன் என்பது உறுதி. அல்லது நிராகரிக்கப்படுவேன். இரண்டிற்கும் எந்தத் தயக்கமுமில்லை. தான் சொல்ல விழைந்ததைச் சொல்ல அஞ்சுபவர் அதற்கு மேலும் ஒரு சொல்லையாவது எழுத முடியுமா என எண்ணுபவன் நான். ஆகவே இவற்றைச் சுட்டியிருக்கிறேன். ஒரு வேதப்பாடலுடன் கட்டுரையை முடித்துக் கொள்கிறேன்.
“ஒன்று சேர்ந்து பயணம் செய்யுங்கள்
சேர்ந்தமர்ந்து விவாதம் செய்யுங்கள்
உங்கள் மனங்களெல்லாம் ஒன்றாகட்டும்
முன்பு தேவர்கள்
ஒன்றாக அவி பங்கிட்டத்தைப் போல
ஒன்று கூடி சிந்தியுங்கள்
உங்கள் சங்கம் ஒற்றுமையுடையதாகட்டும்!”
*
பாலியல் சுரண்டல் பற்றியும் குற்றச்சாட்டுகள் பற்றியும் ஒரு வருடத்திற்கு முன்னர் நான் எழுதிய விரிவான கட்டுரைகளின் தொகுப்பு.
1. சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும்
2. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்றல்
தர்மு பிரசாத்தின் கட்டுரை :
ஒழுக்கவாதப் பெண்ணியத்தின் புழுதிப்புயல்
*
அதற்கமைந்த பெண்கள் குழுவின் அறிக்கை
எழுத்தாளர் ரியாஸ் குரானா இச்சிக்கல் குறித்து எழுதிய பார்வை கவனிக்க வேண்டிய பார்வைக் கோணங்களைக் கொண்டது. அதன் இணைப்பு.
ஷோபா சக்தி மீதான கண்டனமும் மறுப்பறிக்கையும் சொல்வதென்ன?
ஷோபாசக்தி விவகாரமும் மாற்றுப் பார்வைக்கான சாத்தியமும்
எழுத்தாளர் அபிலாஷ் சந்திரனின் பார்வை :
ஷோபா சக்தியைச் சூழும் கான்சல் கலாசாரவாதிகள்
ஜெயமோகன் முன்னர் எழுதிய குறிப்பொன்று மேலதிக வாசிப்புக்கென :