“சில மாதங்களுக்கு முன்பு இதே அரசின் சுங்கத்துறை ஈழத்தின் சில இலக்கிய நூல்களைத் தடுத்து வைத்தது. அதற்காக எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாசகர்கள் இணைந்து யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் கண்டனப் போராட்டங்களை முன்னெடுத்தோம். இன்றைக்கு விருதிற்கு முன்னால் அண்ணாந்து இருப்பவர்கள், இதற்கு முன்னால் அவற்றை வாங்கி வீட்டில் ஷோக் கேசை அலங்கரித்தவர்கள், கண்ணாடியில் குஞ்சி மயிரைத் திருத்தி விட்டி பெருமைப்பட்டுக் கொண்ட ஒரு எழுத்தாளரும் கலந்து கொள்ளவில்லை. ஒரு சொல் கூடப் பேசவில்லை. எழுதவில்லை. அன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை கறி சமைத்து உண்டு விட்டு உறங்கி விட்டார்கள். இந்தப் போராட்டம் என்றில்லை ரோல்களும் பற்றிசுகளும் இஞ்சித்தேனீரும் பரிமாறப்படும் புத்தகங்களை சகட்டுக்குப் புகழும் இலக்கிய கூட்டங்களைத் தவிர வேறு எதிலும் இப்பெருந்தகையோர் கலந்து கொள்ள மாட்டார்கள். செயல்களினால் வெளிப்படுவது என்று இதைத்தான் சொன்னேன்.
அடிப்படையில் இலங்கையில் எழுத்தாளர் என்று சொல்பவர்கள் எதையாவது ஒப்பேற்றி நூல் வடிவில் கொண்டு வந்து விட்டால் எழுத்தாளர் என்று தம்மை வரித்துக் கொள்ள முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எழுத்தாளர் என்ற அடையாளம் திருடர்கள் வாகனத்தின் நம்பர் பிளேட்களை மாற்றுவது போன்றது. சாமானியர்களிடையே இவர்கள் தாங்கள் என்ன வேலை செய்கிறோம் என்பதையே அடையாளமாகச் சொல்வார்கள். பள்ளி ஆசிரியர் என்றோ, பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்கள் என்றோ, அலுவலக குமாஸ்தாக்கள் என்றோ வெளிப்படுவார்கள். அத்துறைகளிலும் ஏதாவது செய்கிறார்களா என்றால் அங்கேயும் பிருட்டங்களை கதிரைகளுக்கு கொடுப்பதைத் தவிர எதையும் செய்வதில்லை. இலக்கியம் இவர்களுக்கு அற்ப பெருமை. பொழுது போக்கு. தான் மெய்யாக எதுவோ அதில் நிறைந்திருக்கும் சாமானியர் இவர்களை விட மேலானவர் இல்லையா?”
– யதார்த்தன்
அரச விருதுகள் தொடர்பில் யதார்த்தன் எழுதிய குறிப்பு : வாற்பேத்தை வாழ்க்கை

