Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

மெல்லத் தமிழ் இனிச் சாகும்

Posted on December 11, 2023December 11, 2023 by Kiri santh

‘எழுக தமிழ்’ தமிழ் பேசும் சமூகங்களை எல்லாம் உள்ளடக்கியதா என்பது தான் எழுக தமிழ் மீது உள்ள மையவாத அரசியல். வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள், அதுவும் பூர்வீகமாக இருப்பவர்கள் என்பவர்களுக்கு மட்டுமே எழுக தமிழ்.

வடக்கில் வாழும் மலையக மக்கள் தமிழுக்கு பொருட்டில்லையா, முஸ்லிம் மக்கள்? பழங்குடியினர்? இவர்கள் எல்லாம் ஏன் தமிழுக்குள் வரவில்லை. தமிழை நாம் ஏன் பிரதேசங்களுக்குள் சுருக்குகிறோம். அனைவரினதும் விடுதலைதான் எந்த விடுதலையையும் நீடித்து நிலைக்கச் செய்யும். பெண்கள், மாற்றுப் பாலினத்தவர், சாதிய அடிப்படையில் புறந்தள்ளப்படும் தொகுதியினர் என்று வடக்கு கிழக்கில் வேறுபாடுகள் உண்டு, தமிழ் பெண்களுக்கானதில்லையா? தமிழரசியலில் அவர்களின் இடம் என்ன? ஏன் தொடர்ந்து வெள்ளாள சாதிய பின்புலத்திலிருந்தே பெரும்பான்மையான அரசியல் தலைவர்கள் வளருகிறார்கள்.

தமிழீழம் கிடைக்கட்டும் எல்லாம் மாற்றலாம் என்பது எவ்வளவு தூரம் சரியானது. சமஷ்டி கிடைக்கட்டும், அதிகாரம் கிடைக்கட்டும் என்று காத்துக் கிடக்கும் நேரமல்ல இது. வெளியாரின் வருகை இங்கே அவசியமே இல்லை. இது அகத்தில், உட்பக்கமாக நிகழ வேண்டிய மாற்றம். இதனை நாம் அழுத்தம் கொடுக்க வேண்டிய தருணமும் இதுதான்.

பெண்கள், சாதிய நிலைப்பாடுகள், குடும்ப உறவுகள் பற்றிய சமூக மதிப்பீடுகள் என்பவற்றில் வடக்கு கிழக்கில் நிகழ்ந்த முக்கியமான இரண்டு கால கட்டங்களை நாம் அவதானிக்க வேண்டும். ஒன்று விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்கள். அதில் இருந்த நெகிழ்வுத் தன்மை சில மாற்றங்களுக்கு இடம் கொடுத்தது. சில மாற்றங்களை நிகழ்த்தியும் காட்டியது. ஒரு நூறு வருட வரலாற்றில் இவ்வளவு பெருமளவான பெண்கள் திரண்டு போராடியது இங்கே தான். தலைமைத்துவங்களுக்கு வந்ததும் அப்போதுதான். குடும்பங்களை கடந்ததும் அப்போது தான்.

இதேபோல விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் இப்பொழுது உருவாகியிருக்கும் காலகட்டம் இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டம் பெருமளவான உள்ளூர் தலைமைத்துவங்களை நாம் இழந்து விட்டோம். எஞ்சியிருப்பவர்களில், மேலும் புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்களில் பெண்கள் அதிகமும் அரசியலில் ஈடுபாடு காட்ட வேண்டியதும், அதனை நாம் வளர்க்க வேண்டியதும் கடமை.

இதை நடைமுறை ரீதியில் வளர்த்தெடுக்கக் கூடிய இடங்கள் இன்னமும் உள்ளது. உதாரணம் – பாடசாலைகள், பல்கலைக்கழகம். பல்கலைக்கழகத்தில் இதனை நிகழ்த்துவதற்கு எந்த புறவய ரீதியான அனுமதியோ அதிகாரமோ தேவையில்லை. தகுதி வாய்ந்த பெண்களை அடையாளம் காணுதலும், அவர்களை தேர்வு செய்தலும், அவர்களை வளப்படுத்துதலும் செய்ய வேண்டும். அதனை நிகழ்த்துவது கஷ்டமென்றால் அரசியலில் பெண்கள் குறைவென்று பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்த யாரும் விமர்சிக்கும் தகுதி உண்டா என்பதை சற்று யோசிக்க வேண்டும்.

இப்படி அன்றாட நிகழ்வுகளில் நமது நம்பிக்கைகள் சார்ந்தும் பிரச்சினைகள் சார்ந்தும் நமக்கிருக்கக் கூடிய கருத்துக்களை விமர்சித்துக் கொள்ளக்கூடிய வெளியை நாம் உருவாக்கியிருக்கிறோமா? இணைய வெளியை விட  சாதாரண வெளியில் அது ஓரளவுக்கிருக்கிறது.

இணைய உலாவிகளில் பொதுவாக வைக்கப்படும் விமர்சனங்களில் சுய விமர்சனத்தோடான விடுதலை பற்றி பேசும் பொழுது, சிங்களவர்களுக்கோ அல்லது மற்ற இனங்களுக்கோ இதைச் சொல்லுங்கள், அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்று கேள்வி வைப்பார்கள். இது எவ்வளவு அபத்தம். நாம் நம்மை சுயபரீசீலனை செய்ய நம்மில் சில மாற்றங்களை செய்ய அவர்கள் தேவையில்லை.

இதனை இன்னும் விரிவாக உரையாட வேண்டும். எழுக தமிழ் பற்றி இன்னும் விரிவாக புரிந்து கொள்ளும் நோக்கில் ‘தமிழ் உணர்வு’ பற்றி பார்க்கலாம். காலனித்துவத்திற்கு முந்தைய நிலையில் மொழியுணர்வு இவ்வளவு தீவிரமான பாதுகாப்பு வடிவமாக எழுச்சி பெற்றிருந்ததா என்றால் அது அவ்வாறு இல்லை என்பதே பதிலாக இருக்கும். ஆனால், காலனித்துவம் ஒடுக்குமுறையாக சுரண்டலாக மாறிய போது இந்த உணர்வுகள் வலிமை வாய்ந்த உணர்வுகளாக வளர்ச்சி பெற்றன. மேலும், இந்த உணர்வுகள் மொழியினூடாகவே கடத்தப்படுகின்றது. இப்படி, இயல்பிலேயே மொழிக்கு உணர்வுபடுத்தும் ஒன்றுபடுத்தும் வரலாறு உருவாகியது.

இதனை தற்போதைய காலத்தில் எவ்வாறு உணருகிறோம். ஒரு மொழியின் மிக உச்சமான வடிவங்கள் எதையும் பொதுவாக யாரும் கண்டுகொள்வதில்லை. பத்திரிக்கை படிப்பது தான் அதிகபட்ச வாசிப்பு. முழுநேர தென்னிந்திய சினிமா, நாடகங்கள் மற்றும் நேரலை நிகழ்ச்சிகள் பார்ப்பதுதான் நமது வாழ்க்கை. இதனால், எமது மொழி ஒட்டுமொத்தமாக மாறி வருகிறது. அதனூடாக பண்பாட்டு மற்றும் சிந்தனை முறைகளில் மாற்றம் வேகமாக உருவாக்கி வருகிறது. இதனை மீட்டு எடுக்க யாரும் பெரிதாக முயற்சி செய்வதாக தெரியவில்லை. நூற்றுக்கு இருப்பது வீதம் பேர் கூட புத்தகங்கள் படிப்பதில்லை. நூலகங்களில் உயர்தர பரீட்சைகளுக்கு படிப்பதும் அல்லது பத்திரிக்கை படிப்பதும் தான் நடக்கிறது. ஆனால், இவர்களில் பலரின் மனநிலையைப் பாருங்கள். “யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டமைக்கு கடும் துயரம் கொள்வார்கள். ஆனால், அந்த நூலகத்தை ஒரு ஆயிரம் பேர் கூட ஒழுங்காக பயன்படுத்துவதில்லை. பேருக்குத் தான் “அடையாளம்”, “தமிழர் சொத்து”. பயன்படுத்தாத இந்தச் சொத்துக்கள் எப்படி இவர்களின் கௌரவம் ஆகிறதோ அதே போல் தான் மொழி உணர்வும்.

நமது மக்களுக்கு மொழியை பற்றி கிஞ்சித்தும் அக்கறை கிடையாது ஆனாலும், மொழி வளர வேண்டும் என்றால் என்ன செய்ய? சிங்களவர்கள் தேவையில்லை. கொஞ்ச நாள் இப்படியே விட்டாலே இவர்கள் தமிழை விட்டுவிட்டு வேறு வேலை பார்க்க போய் விடுவார்கள்.

ஆகவே, போலியான இந்த உணர்வு பேச்சு மொழியாக தமிழ் இன்னமும் இருப்பதாலேயே தொடர்கிறது. மொழியைக் கொண்டாடத் தெரியாத இந்த பெரும்பான்மை, எப்படி மாற்றுக் கருத்துக்களை ஏற்கும், சிந்தியுங்கள் என்று சொன்னால் ஆத்திரம் தானே கொள்ளும்.

எழுக தமிழுக்கு ஐந்தாயிரம் பேரோ பத்தாயிரம் பேரோ வந்தார்கள் என்று சண்டைபிடித்து விட்டு மொழிப்பெருமை குலப்பெருமை கூவி விட்டு வீட்டில் படுத்திருந்து நாடகங்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சொல்லுங்கள் இந்த மொழிப்பற்றாளர்களில் எத்தனை பேர் மொழியை அறிந்திருக்கிறார்கள், அதன் அறிவை பயன்படுத்தியிருக்கிறார்கள். தமிழ் மொழி ஒரு விவாத மொழி, அதனை சரியாக புரிந்து கொள்பவர்கள் விவாதங்களை ஒரு நாளும் தனிநபர்களுக்குள் சுருக்கிக் கொள்ள மாட்டார்கள், நண்பரொருவர் அடிக்கடி சொல்லுவார், “உங்களிடம் கருத்தியல் வறுமை உள்ளபோது தனிமனித தாக்குதல் தான் ஒரே ஆயுதம்”.

இதனை தான் இணைய விவாதங்களில் அவதானிக்க முடிகிறது, தனிமனிதனை அளவிடக் கூடாதென்று சொல்லவில்லை. உங்கள் மொழி உங்களுக்கு குறைந்தபட்ச நாகரீகத்தை கூட சொல்லித் தரவில்லையென்றால் எதற்காக தமிழ் எழவேண்டும்?

முதலில் மொழியுணர்வை அன்றாட வாழ்வில் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பாருங்கள். ஒரு பாடசாலை தமிழ் விழாவை பாருங்கள், கொக்க கோலாவும், பிரியாணிச் சோறும் சாப்பிட்டுக் கொண்டு தமிழை எப்படி வாழ வைப்பதென்று விழா எடுப்பார்கள். தாடி வைத்த, மீசை வைத்த புலவர்கள் வாழ்ந்த மொழி, அது நமது அடையாளம். காலனித்துவம் வழங்கிய மழிக்கப்பட்ட தாடியும் மீசையும் இன்று ஒழுங்கின் அடையாளமாக உள்ளது. தாடி வளர்த்தால் பாதி பேருக்கு வேலையில்லை. அரசாங்கத்திற்கு அத்தனையும் மழித்துக் கொடுக்க வேண்டும்.

இதையெல்லாம் ஒரு தலையாய பிரச்சினை என்று கூறவில்லை. ஒவ்வொரு சின்ன விடயங்களிலும் எப்படி நாம் கவனங்களை இழந்திருக்கிறோம். நமது அடையாளங்களை மாற்றியிருக்கிறோம், மறந்திருக்கிறோம் என்று பார்க்க எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது.

இதையெல்லாம் விட காணாமல் போனவர்களின் பிரச்சினை பெரிது. அரசியல் கைதிகளின் விடுதலை பெரிது. காணிப் பிரச்சினை பெரிது. மீனவர் பிரச்சினை பெரிது. அரசியல் தீர்வு பெரிது. ஆனால், அதேவேளை இதையெல்லாம் நாம் அடைவதற்குப் பயன்படுத்தும் நம்மை ஒன்றுபடுத்தும் மொழியும் உணர்வும் கூட பெரிது தானே? அதனை ஒழுங்கு படுத்தும்போது இந்த உணர்வு பலமடையும். உதாரணமாக – ஒரு கருத்தைப் பார்ப்போம்,  சாதாரண விடயமாகக் கருதப்படும் விடயமொன்றில் ஒரு எதிர்ப்பை ஏற்படுத்தினால் அது எவ்வாறான பாதிப்பை நிகழ்த்த முடியுமென்று, அது ஒரு செய்தியை சொல்லுமென்று.

“தரம் ஆறு தொடக்கம் பதினொன்று வரையிலிலுள்ள வரலாறு பாட புத்தகத்தை எடுப்போம். அதில் உள்ள வரலாற்றை அதில் ஒவ்வொரு இனத்திற்கும் உள்ள பக்க ஒதுக்கல்களை உள்ளோடும் அரசியல் குறைபாடுகளை பார்த்தால் இப்படியொரு வரலாற்றை மாணவர்களுக்கு கற்பிப்பதன் மூலம் வரலாற்றுணர்வற்ற தலைமுறைகளை நாம் உற்பத்தி செய்யப் போகிறோம், இதனை எதிர்த்து இத்தகையதொரு வரலாற்றை மாணவர்களுக்கு கற்பிக்க முடியாதென்று ஆசிரியர் சங்கம் மறுக்க முடியாதா? புறக்கணிக்க முடியாதா? இது வடக்கு – கிழக்கு தமிழர்களுக்கு மட்டும் உள்ள பிரச்சினை இல்லை. முஸ்லிம்கள் வரலாறும் அவ்வாறே, மலையக வரலாறும் அவ்வாறே. பழங்குடி வரலாறும் அவ்வாறே.

எல்லோருக்கும் சிங்கள வரலாறுதான் கற்பிக்கப்படுகிறது, அதனூடாகவே மற்ற வரலாறுகள் புரிந்து கொள்ளப்படுகிறது. எல்லா வரலாற்றுப் புத்தகங்களின் முன் அட்டைகளும் எந்த அடையாளங்களை சுமந்து நிற்கின்றன?

இப்படியான உணர்வுகளை, வரலாறுகளை, ஞாபகங்களை கடத்துவது ஆபத்தானது. அதனை எதிர்த்தால் அது ஒரு வலிமையான செய்தியல்லவா? வடிவமல்லவா? அந்த உணர்வை மாணவர்களுக்கும் கடத்த முடியும், அதுவே ஒரு எழுச்சியான மன நிலையை ஏற்படுத்தும்.

இது செய்யக் கடினமான ஒன்றுதான், கட்டுரையாளர் குறிப்பிட விரும்புவது இப்படி அன்றாட வாழ்வில் கட்டியெழுப்பப்படும் பல்வேறு எதிர் மன நிலைகளிலிருந்து நம் தலைமுறைகளை காப்பாற்ற சமஷ்டிக்கோ,  அதிகாரத்திற்கோ காத்திருக்கத் தேவையில்லை. அதனை அடைந்து கொள்வதற்கான எதிர் வடிவமாகவே கூட இந்த மன நிலைகளை பயன்படுத்த முடியும்.

(2016)

(www.maatram.org)

PC: செல்வராஜா ராஜசேகர்

வாசித்தவர்கள் : 362

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,145)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (1,988)
  • காதலின் முன் பருவம் (1,962)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,895)
  • விடுதலையில் கவிதை (1,873)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme