ஈழத்தமிழிலக்கியம் எனுந் தேர்!

ஈழத்தமிழிலக்கியம் எனுந் தேர்!

சென்னையில் 08.01.2026 தொடக்கம் 21.01.2026 வரை இடம்பெறவிருக்கும் புத்தகக் கண்காட்சியில் ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் பலரது புத்தகங்கள் வெளியாக இருக்கின்றன என்பதை பார்த்தேன். உள்ளபடியே மகிழ்ச்சியான செய்தி. ஓர் இலக்கியச் சூழலின் மையவிசை தொடர்ந்து உரசலில் இருக்க வேண்டியது. ஒவ்வொரு புத்தகமும் எழுத்தாளரின் ஆணவமோ நிறைவோ வெளிப்படும் ஒன்று. கலைக்கு அத்தகைய தன்மைகளே இருப்பதாகத் தோன்றுகிறது. இப்புதிய நூல்கள் மேலும் பலரைச் சீண்டும், இயங்கச் செய்யும், மூர்க்கமாக எதிர்வினையாற்றச் செய்யும். அது நல்லது. ஒரு சூழல் அப்படித் தான் இயங்க முடியும். ஒருவரை இன்னொருவர் உற்சாகமூட்டிக் கொள்ள முடியும்.

இன்னும் பல நூல்கள் இம்முறை அங்கு கிடைக்கக் கூடும். என் கண்ணுக்கெட்டியவரை சில நூல்களை இதில் பட்டியற்படுத்தியிருக்கிறேன்.

* தர்மு பிரசாத்தின் முதற் குறுநாவலான ‘சிறகை’யை கருப்பு பிரதிகள் வெளியிடுகின்றது.

* சயந்தனின் நான்காவது நாவலான ‘திசை ஒன்பது’ தமிழினி வெளியீடாக வர இருக்கின்றது.

* ஷோபாசக்தியின் தொகுப்பில் இந்த நூல் கருப்பு பிரதிகளில் கிடைக்கும்.

* நட்சத்திரன் செவ்விந்தியனின் முதற்சிறுகதைத் தொகுப்பான ‘முகாமுகம்’ காலச்சுவடு வெளியீடாக வர இருக்கின்றது.

* டானியல் ஜெயந்தனின் சிறுகதைகள் சங்குவான் எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. காலச்சுவடு வெளியீடாகக் கிடைக்கின்றது.

* சஞ்சயன் செல்வமாணிக்கத்தின் பயணக் கட்டுரைகள் காலச்சுவடு வெளியீடாகக் கிடைக்கின்றது.

*தமயந்தியின் சிறுகதைத் தொகுப்பான ‘ஏழு கடல் கன்னிகள்’ இரண்டாம் பதிப்பு இம்முறை வெளியாகின்றது.

*ஆசி கந்தராஜாவின் நெடுங்கதைகள் ‘திரிவேணி சங்கமம்’ காலச்சுவடு வெளியீடாகக் கிடைக்கின்றது.

*தொ. பத்தினாதனின் சிறுகதைகள் ‘நாளையும் நாளையே’ எனும் தலைப்பில் காலச்சுவடு வெளியீடாக வர இருக்கின்றது.

* இளங்கோவின் சிறுகதைத் தொகுப்பான ‘நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்’ டிஸ்கவரி புத்தக வெளியீடாக கிடைக்கும்.

* உலகப் புகழ்பெற்ற சில எழுத்தாளர்கள் பற்றிய இளங்கோவின் கட்டுரைகளின் தொகுப்பு ‘எழுத்தெனும் மாயக் கம்பளம்’ எனும் தலைப்பில் காலச்சுவடு வெளியிடுகின்றது.

* மிஸ்ரா ஜாப்பரின் கவிதைத் தொகுப்பு ‘தாகத்தின் சுழல் காற்று’ காலச்சுவடு வெளியீடாக கிடைக்கின்றது.

* தீபச்செல்வனின் நேர்காணலிகளின் தொகுப்பான ‘எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன்’ யாவரும் பதிப்பக வெளியீடாகக் கிடைக்கின்றது.

* தீபச்செல்வனின் அரசியல் கட்டுரைகளின் தொகுப்பொன்று ‘இப்போதும் இங்கே இரண்டு தேசங்கள் தான்’ எனும் தலைப்பில் யாப்பு வெளியீடாகக் கிடைக்கின்றது.

* தமிழ்நதி தேர்ந்தெடுத்த தீபச்செல்வனின் கவிதைகளது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு ‘நினைவில் நாடுள்ளவன்’ எனும் தலைப்பில் டிஸ்கவரி பதிப்பக வெளியீடாகக் கிடைக்கின்றது.

* தீபச்செல்வனின் நாவலான ‘சயனைட்’ டிஸ்கவரி பதிப்பக வெளியீடாகக் கிடைக்கின்றது.

* புனைவுகள் தொடர்பான கருணாகரனின் கட்டுரைத் தொகுப்பு ‘மாற்று விசாரணைக் கமிஷன்’ எனும் தலைப்பில் பூபாளம் பதிப்பக வெளியீடாக வெளியாகிறது.

*கருணாகரனின் சிறுகதைகளின் தொகுப்பான ‘தாகி’ களம் புதிது வெளியீடாகக் கிடைக்கின்றது.

*த. அஜந்தகுமாரின் கவிதைகளினது தொகுப்பு ‘அழலுறு நிலத்தின் தணற் சொற்கள்’ எனும் தலைப்பில் யாவரும் பதிப்பக வெளியீடாக வர இருக்கின்றது.

* நோயல் நடேசனின் அனுபவக் கட்டுரைகள் ‘நாலுகால் சுவடுகள்’ எனும் தலைப்பில் காலச்சுவடு வெளியீடாகக் கிடைக்கின்றது.

*வாசுமுருகவேலின் நாவலான ‘மணிபல்லவம்’ நீலம் பதிப்பக வெளியீடாக கிடைக்கின்றது.

* சாத்திரியின் நாவலான ‘ஆயுத எழுத்து 2’ திலீபன் பதிப்பக வெளியீடு.

*தில்லையின் நாவலான ‘தாயைத் தின்னி’ தாயதி பதிப்பக வெளியீடாகக் கிடைக்கும்.

* சுதாராஜின் நூல் ‘கப்பல் கடல் தேசம் வீடு’ திராவிடியன் ஸ்டாக் வெளியீடாக கிடைக்கும்.

* ப. தெய்வீகனின் சிறுகதைத் தொகுப்பான ‘மாயச்சூது’ நூல்வனம் வெளியீடாக கிடைக்கும்.

TAGS
Share This