கொடிறோஸ் – கடிதம்

வணக்கம் கிரிசாந்,
கொடிறோஸ் குறுநாவல் வாசித்தேன். மிக நேர்த்தியா எழுதி இருக்கிறீங்க. கதைக்கு உள்ளே வாழ்ந்தது போன்ற அனுபவம் கிடைத்தது. சில இடங்களில் கண்கள் பனித்தன. அம்மாவை நான் இழந்த போது எனக்கு முப்பது வயது. அவருக்கு இரத்தத்தில் கிருமி தொற்று.. நீண்ட காலம் இழுத்தடி பட்டு இறந்தா. மரண வீட்டு கடைசி கட்டங்கள் கண் முன்னால் நடந்தன. வாசித்து முடிச்ச பிறகும் மனசில தாக்கம் இருந்தது. அம்மாவின் மரணம் என்பது ஒருவருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆனால் அம்மா இறந்த பிறகு வேற பெண்களில இருந்து அம்மா நெருக்கமா வருவா என்று நீங்கள் எழுதியிருப்பது 100℅ உண்மை. அப்பிடி நிறைய பேரை பார்த்திருக்கிறன்.
உங்கள் குறுநாவலின் எழுத்து கவிதை போன்று இருந்தது. வரிகளின் அடியில் குறித்து வைத்திருக்கிறேன். இப்படி குறிப்பு போட்டு வைத்தால் அடுத்த முறை வாசிக்கும் பொழுது நெருக்கமா இருக்கும்.
ஏதோ எழுத விரும்பி வேறு எதையோ புசத்துறேன். இந்தக் கடிதத்தை உங்களுக்கு ரைப் பண்ணுவதும் அழிப்பதுமா இருந்தன். கொடிறோசை எனக்கு தந்த நண்பி, “இது உனக்கு பிடிக்கும். கட்டாயம் வாசி” என்று சொல்லி தந்தார். அவருக்கு என் கோடி நன்றிகள்.
உங்களுடைய அடுத்த படைப்புகளை ஆவலாக எதிர்பார்க்கும் வாசகன்.
எம்

