ஏப்ரல் உயிர்மை இதழில் எழுத்தாளர் கிரிசாந் அவர்களின் “புஞ்சி மல்லி” வாசித்தேன்.
சந்தனி என்னும் இளம் பெண்ணிற்கும், கந்துல என்னும் குட்டி யானைக்கும் இடையேயான பாசத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை.
கோபித்துக் கொண்டு, காட்டில் தொலைந்து போன கந்துல குட்டியை சந்தனியுடன் நாமும் சேர்ந்து தேடுகிறோம்.
புஞ்சி மல்லி என்றால், குட்டி தம்பி என்று அர்த்தமாம். அழகு.
இருவருக்கும் இடையே உள்ள உறவை சந்தனியின் வழியாக சொல்லி இருப்பது நம்மை மேலும் கதையோடு ஒன்ற வைக்கிறது.
கடைசியாக இருவரும் ஒன்று சேரும்போது, நாமும் சேர்ந்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறோம்.
கதையை வாசித்து முடித்ததும், மகள் சாத்விகா ஒரு முறை, கோவிலில் யானைக் குட்டி ஒன்றைப் பார்த்து விட்டு, நாமும் வளர்க்கலாமா என்று கேட்டது ஞாபகம் வந்தது.
சிறப்பான வாசிப்பு அனுபவம்.
கண்ணன்
