நன்றியின் நிழல்: ஒரு குறிப்பு

நன்றியின் நிழல்: ஒரு குறிப்பு

வாழ்க்கைக்குத் திரும்புதல்

கிரிசாந்தினுடைய முதலாவது கவிதைத் தொகுதி, குமாரதேவன் வாசகர் வட்ட வெளியீடாக வந்திருக்கிறது.

முகநூலிலும் பிற ஊடகங்களிலும் நாளாந்தம் கவிதைகள் என எழுதப்படுகின்றவற்றில் எது கவிதை எனத் தேடிச் சலிக்கின்ற கவிதை மனங்களுக்கு ஆத்மார்த்தமான திருப்தி அளிக்கக்கூடிய ஒரு தொகுப்பாக வந்திருக்கிறது.

குறிப்பாக இதில் உள்ள அகம் சார்ந்த கவிதைகள், நிஜ உலகின் நிகழ்வெளியில் நின்று மனதைப் பிய்தெடுத்து ஒரு தனித்த வெளியில் மனதை மிதக்க விடுகின்ற பித்து நிலையில் எழுதப்பட்டிருக்கிறது.

அன்று அபிராமிப் பட்டர் பின்பு பிரான்சிஸ் கிருபா கவிதைகளில் இதை நான் தரிசித்து இருக்கிறேன்
இந்த நிலை எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை. கிரிசாந் தன் முன்னுரையில் சொன்னது போல கவிதையே வாழ்வாகி கவிதையே துணையாகி, பின் துணைவியாகி வாழ்கின்ற ஒருவனால் மட்டுமே இது சாத்தியமாகும் என்னை நம்புகிறேன்.
இது இத்தொகுதியில் இது நிகழ்ந்திருக்கிறது.

ஒரு சில மணித்தியாலங்களில் படித்து மூடி வைக்கக் கூடிய தொகுதியாக இது அமையவில்லை. ஒவ்வொரு கவிதையும் நீண்ட நேர வாசிப்பைக் கோருபவை.

மேலும் கவிதையின் முன்னுரையாக கிரிசாந்தால் எழுதப்பட்ட தன் வரலாறு மிகவும் வெளிப்படையாக உண்மை தன்மையாக அமைந்த பதிவு இது. பண்பாட்டின் வழி நின்று எழுதப்பட்ட ஒரு நன்றியின் நிழலாக இருக்கிறது.

தன்னை எத்தகைய சூழல் கவிஞன் ஆக்கியது என்பதை மிக உண்மையான நன்றியுணர்வுடன் எழுதியிருக்கிறார்.
துரோகமும் பொறாமையும் சூழ் உலகில் போலி உறவுகளாலும் நட்புக்களாலும் வெந்திருக்கும் மனங்களுக்கு
இம்முகவுரை ஓர் குளிர் நிழல்.

கவிதையை நேசிக்கின்ற அனைவரும் படிக்க வேண்டிய தொகுதி.

வேலணையூர் தாஸ்

TAGS
Share This