என் தந்தையின் வீடு

வெளிச்சம் கொள்ள நேராத வீடுகள்
காத்திருக்கின்றன.
என் தந்தையிடமிருந்து எனக்கு
என்னிடமிருந்து இன்னொருமுறை
என் மகனுக்கு.

மகனே,
உன் தந்தையின் வீட்டை  நீ அறிவாயா?

உன்  பட்டினங்களின் பாதைகளை,
கைவிடப்பட்டவர்களுக்குப் பிளந்து வழி விடாத
நந்திக் கடலிடம் கேள்
உலோக மழை கொட்டிய இரவில்
அங்கு தான் உன்னைத் தலையில் சுமந்து வந்தேன்.

ஆனால் இப்போது
உன் பட்டினங்களிடம் திரும்பு

வீட்டைச் சுற்றி அலையும்
குருவிகளிடம் கேள்
கூடென்பது
இடமா? இருப்பா?

சுவர்ப் பிளவில் அரச மரங்கள் – வேர் விடத்
துடிக்கும் உன் வீடு.

எனவே,
உன் தந்தையின் வீடு இப்போது
ஒரு நினைவாலயம்
அது சந்தையாகும் வரை காத்திருக்காதே
சீக்கிரம் அடைந்து விடு.

வீடென்பது
கிடைப்பதா ? பெறுவதா ?

என் மகனே,
வீடென்பது பேறு.

(2013)

PC : Unknown

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *