71: மலைமேல் பனி
ஒருவரை ஒருவர் முழுதுள்ளத்தால் ஒருமுறையாவது முழுதுவெறுக்காத காதலர்கள் புடவியில் இல்லை என எண்ணிக் கொண்டான் மாதுளன். எல்லாக் காதலின் விதையிலும் எதனாலோ தீர்மானிக்கப்பட்ட ஒருதுமிக் கசப்பும் அளிக்கப்படுவது காதல்நெறியென யாரோ குடிமயக்கில் சிற்பக் கூடத்தில் உளறிய சொற்கள் அவனை ஈக்களென வந்தறைந்து கொண்டிருந்தன. நிலவையின் அருகே நின்றிருந்த பெய்யினியின் கூந்தல் காற்றில் வளைந்து எழுந்து நூல்களென ஆடியமைந்தன. சிற்பங்களை அவனது விரல்கள் நுணுகும் தோறும் அவன் அகத்தை அவனே குடைகிறான் …
