Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

02: துதி விளி

Posted on May 18, 2024May 27, 2024 by Kiri santh

பதும்மை தன் காம்புகளை ஆடியின் முன் நின்று விரல்களால் நீவினாள். ஈரலிப்பான காற்று அறைக்குள் நுழைந்து சுற்றியிருந்த திரைச்சீலைகளைக் கைளால் சுருட்டி அலைத்தது. சாளரத்திற்கு அருகில் நின்ற மல்லிகைக் கொடி தன் நறுமணத்தை அறைக்குள் அள்ளி எறிந்தபடியிருந்தது. கூடத்தில் ஆண்களும் பெண்களும் சிரிக்கும் ஒலிகளும் யாழ்நரம்புகள் யார் யாரினதோ விரல்கள் பட்டுத் துடிப்பதும் கேட்டது. அவள் குழலை இருதோளிலும் முன்புறம் சரியவிட்டு தலையைச் சீர்பிரித்து இரட்டைப் பின்னல் போட்டுக் கொண்டாள். சிவந்த சாந்திலிருந்து ஒரு சிறு தீற்றலை நெற்றியில் ஒற்றினாள். முகம் பொலிந்து அவள் உதட்டில் குவிந்தது. தன்னைத் தானே மெய்ச்சிக் கொண்டு வலமுலையைத் தூக்கி வாயில் வைத்து உறிஞ்சி முத்தமிட்டாள். அல்குல் அவிழ்ந்து சுரந்தது. மேலாடையை தூக்கி மார்பின் மேல் போட்டுக் கொண்டு கூடத்திற்குள் நுழைந்தாள். அவள் மணிக்கதவம் திறந்த போது கதவில் சாய்ந்து நின்ற இளம் பாணன் மதுவின் மயக்கில் கீழே சரிந்தான். அவள் கால்களைத் தூக்கி அவன் வயிற்றால் கடந்து சென்று கூடத்தைப் பார்த்தபடி நின்றாள்.

இளம் பாணன் விழிகளைக் கசக்கிக் கொண்டு தன் குழலை விலக்கி இருகைகளையும் இடுப்பில் ஊன்றி ஒயிலாக நின்ற பதும்மையை அறிந்தான். நாவால் உதட்டை ஈரப்படுத்திக் கொண்டு கதவைப் பிடித்து எழுந்து நின்றான். பதும்மையின் தோளருகில் சென்று தன் உயரத்தைக் கண்களால் அளந்தான். “பெண்கள் உயரமாக இருக்கும் போது ஆண் தனது உள்ளத்தில் ஒரு பள்ளத்தைக் கிண்டிக் கொண்டு உள்ளே இறங்கி நின்று விடுகிறான் இளம் பாணனே” என்றாள் பதும்மை. “முதல் வரியிலேயே தன்னை வெல்பவளின் காலடியில் ஆண் தன் அலட்சியத்தை ஒரு மலர்க்கூடையென வைக்கிறான் தேவி” என்று சொல்லிவிட்டு மனம் இலேசான இளம் பாணன் அவள் வலமுலையில் பட்டிருந்த ஈரம் மேலாடையில் கசிந்திருப்பதைப் பார்த்தான்.

இளம் பாணன் மூங்கிலென விளைந்த தோள்கள் கொண்டவன். அவன் வாய் சொல்லை உச்சரிக்கும் பொழுது கண்கள் வேறொரு மொழியில் உரையாடிக் கொண்டிருக்கும் என்ற தோற்ற மயக்கு பெண்களுக்கு மட்டும் ஏற்படுவதுண்டு. கறுப்பும் மென் மண்ணிறமும் கலந்த விழிகளில் வெருகு ஒன்று குறும்புடன் வால் நீட்டுவது போல் எப்போதும் ஒரு அழைப்பு இருக்கும். கண்களைப் பார்த்த பதும்மை அவன் தோள்களைத் தான் அடுத்து நோக்கினாள். உடலில் பெரிதாக ஆபரணங்களில்லை. காதில் இரண்டு குழைகள். கையில் ஒரு செப்புக் காப்பு. ஆனாலும் அவன் மேனியை கருநிறம் முழுமையாக அழகூட்டியிருந்தது. வரிசையாக அடுக்கிவைக்கப்பட்ட நெற்களெனப் பற்கள். குழலில் யாரோ ஒருத்தி வைத்த காட்டு மல்லியொன்று அவனைத் துடுக்கான சிறுவன் என எண்ணச் செய்தது.

சிறிது மதுபோதை கலைய முன்னிருந்தவர்கள் இளம் பாணனுக்குத் துலங்கத் தொடங்கினர். நீண்ட கூடம். இடையிடையே அகிற்புகைச் சட்டிகள் வைக்கப்பட்டு எந்நேரமும் புகை சூழ்ந்திருந்தது. இரண்டு முதிய பெண்கள் அப்பணிக்கென அங்கும் இங்கும் நகர்ந்தபடியிருந்தனர். தூங்கும் சேவல் விளக்குகள் பத்து அடிகளுக்கு ஒருமுறை தொங்கின. அவை அசையும் சுடர்களால் நிழல்களை விளையாடிபடியிருந்தன. இளம் பாணன் நிலத்தில் அமர்ந்தான். பதும்மை புகைக்குள் புகையாக மறைந்தாள்.

யானையின் துதிக்கை வேலைப்பாடுடைய தன் மரப் புகையிழுப்பானை எடுத்து முழுவதும் சுத்தப்படுத்தினான். இடையில் சொருகியிருந்த தேவஇலையின் மலர்களை உள்ளங்கையில் வைத்து அவற்றை உற்று அறிந்தான். ஒரு காய்ந்த மலரை எடுத்து அதை வான் நோக்கி நீட்டினான். நிலவு இன்னும் இரண்டு நாட்களில் முழுதாகப் போகிறது என்று நினைத்துக் கொண்டு மலரைப் பார்த்துப் புன்னகைத்தான். ஒவ்வொரு இதழாக உதிர்த்து நகத்தால் நறுக்கி எடுத்தான். கொஞ்சம் கொஞ்சமாகக் குவிந்த மலரைக் கைகளால் அழுத்திக் கொண்டிருந்தான். சற்றுத் தள்ளியிருந்த வேறுகாடார் நடுவயது மாதொன்றின் நாடியைப் பிடித்தபடி அவளது கன்ன மச்சத்தைப் பாராட்டிச் சிரித்துக் கொண்டிருந்தார். அவரது கரடிக் கைகளை அள்ளியபடியிருந்த அந்தப் பெண் விழிகளால் துள்ளிக்
கொண்டிருந்தாள். இளம் பாணன் தன் தனிமையை எண்ணிக் கொண்டு தேவஇலை மலர்களை யானையின் துதிக்குள் இட்டு நிரப்பினான். தனக்கு மேலே தூங்கிக் கொண்டிருந்த அகலின் சுடரில் துதிக்கையை நீட்டி நெருப்பை உறிஞ்சினான். தீ புகையென உருக்கொண்டு அவனுள் நுழைந்தது. நீண்ட மூச்சை இழுத்துக் கொண்டு அருகிருந்த அன்ன ஊஞ்சலில் அமர்ந்தான். மனிதர்களின் பேச்சுக் குரல்களும் சீண்டலின் கூக்குரல்களும் அவனை எரிச்சலூட்டியது. இழுத்து ஊதிய புகையின் நெளிவொன்று பதும்மையின் முகம் போலத் தோன்றிக் கரைந்தது. கண்களை மூடி அவளை எண்ணினான். தேவஇலையின் புகை அவனுக்குத் துல்லியத்தை அருளியது. ஒவ்வொரு அணுவாக அவளின் வதனத்தை உருவாக்கினான். புன்னகை உதட்டில் அரும்பிய பொழுது விழிகளைத் திறந்தான். கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டியபடி அவனை நேர்நோக்கிப் பதும்மை நின்றபடியிருந்தாள். அவளின் இடையும் பருத்த தொடை வளைவும் அகல் வெளிச்சத்தில் மின்னியது. முகம் நெருங்கி வந்து அருகமர்ந்தாள். அவளுடலிலிருந்து எழும் நறுமணக் கலவையை அவன் நாசி உய்த்தறிய எண்ணி உள்நாக்கெனப் புரண்டு கொண்டிருந்தது.

“அதை இங்கே கொடும் இளம் பாணனே” எனப் புகையிழுப்பானைப் பிடுங்கிக் கொண்டாள். தான் சரிந்து கிடந்த கோலத்தை நாணிச் சற்று எழுந்தமர்ந்தான் இளம் பாணன். அவள் தனது சிறிய இதழ்களிடையில் துதியை நுழைத்தாள். தழல் விழித்து இமைந்தது. உள்ளே நிறைந்த புகையை மூக்கினாலும் வாயினாலும் மெல்ல இறங்கி வர அனுமதித்தாள். அவை தயங்கித் தயங்கி வெளிவந்தன. அகலேற்றும் முதுபெண்கள் அருகிருந்த அகல்களை ஏற்றி வைத்தனர். அவள் பின்னல்களை அவிழ்ந்து கொண்டை முடிந்திருந்தாள். கழுத்தில் ஒரு சிறு சர்ப்பம் சுருண்டதைப் போல முடிக்கீற்றொன்று தோள் வரை நீண்டிருந்தது. விழிக்கு மையிட்டிருந்தாள். அவள் தெய்வாம்சம் கொண்டிருந்தாள். துதியைப் பெற இளம் பாணன் கை நீட்டினான். “பாணனே, சிறு நடை வழிக்குத் துணை வர முடியுமா?” எனக்கேட்டாள். இளங் குருளையின் ஆர்வத்துடன் அவளைத் தொடர்ந்தான். அருகிருந்த சிறுகாட்டின் ஒற்றை வழியில் உள்நுழைந்தனர். நிலவு மஞ்சள் திரவத்தால் உலகை நனைத்துக் கொண்டிருந்தது. கூகையொன்று குழறியது.

அவள் பிருஷ்டங்கள் பிளந்த பலாக்கனிகளென உருண்டு திரண்டிருந்தன. இளம் பாணனின் கண்கள் அதை நோக்குவதை அறிந்தவள். “என்ன பாணனே, இப்பொழுது தான் பெண்ணுடலை முதலாய்ப் பார்க்கிறீரா. இதுவரை பாடல்களில் தான் கேட்டதுண்டா? எனக்குத் துணை வரச் சொன்னால். உம்மிடமிருந்து என்னைக் காக்க ஊரே துணைவர வேண்டும் போலிருக்கிறது” தனது சொற்களில் உள்ளோடிய குறும்பின் நர்த்தனத்தை பதும்மை தானே ரசித்தாள்.பின்னர் இதைச் சொல்லிவிட்டுப் பற்கள் விரியச் சிரித்திருக்கக் கூடாது என்று உள்நாணிக் கொண்டாள். இளம் பாணன் துதியைக் கேட்டான். கொடுத்தாள். ஆழ இழுத்து ஊதியபின் “நான் இதுவரை உலகில் அறியாத அழகியில்லை. நீதான் நான் பார்த்தவர்களிலேயே மந்தமானவள். உனது அழகுக்கு உன்னூரிலேயே சமமானவள்கள் இருக்கிறார்களே. நீ ஆடியில் உன்னை இதுவரை பார்த்ததில்லையா?”

எவ்வளவு எளிமையாக தோல்விகொள்ளும் சொற்கள். ஏன் இப்படித் தன் தோல்வியை இவ்வளவு விரைவாக ஒப்புக் கொண்டேன் என சலித்துக் கொண்டான். அவள் சிரித்துக் கொண்டே” பாணனே, என்னை நான் அறிவேன். என்னையே நீங்கள் இப்படி விழுங்குகிறீரே, வேறு பெண்களைப் பார்த்திருக்க வாய்ப்பிருக்குமோ, அய்யோ, பாவமே என்று தான் கேட்டேன்”. சிறிது தூரம் பேசாமல் வந்த இளம் பாணன் பேச வாயெடுத்த போது கைகளால் அவன் வாயை மூடினாள். என்னவென அஞ்சிய பாணனின் நெற்றியில் சட்டென ஒரு வியர்வை துளித்தது. அவள் அதை நோக்கி, காதருகே சென்று, “இளம் பாணனே இரு மான்கள் அங்கே கூடியிருக்கின்றன. நம் சத்தம் கேட்டால் அஞ்சி ஓடிவிடும். பயப்படாதீர்கள் மாவீரரே, உமது வீரத்துக்கு இங்கு வேலையில்லை”.

அச்சம் தெளிந்த இளம் பாணன் முழந்தாளிட்டு அமர்ந்து மான்களை நோக்கினான். அவளும் அருகே அமர்ந்து துதியை வாங்கி இழுத்தாள். தேவ இலையின் நறுமணம் அவளின் கூந்தலின் ஈரவாசனை மேனியிலிருந்து சர்ப்பத்தின் மென்னரவத்துடன் நாசி நுழையும் சுகந்தம் எல்லாமும் இளம் பாணனைக் குலைத்துக் கொண்டிருந்தது. முன்னே மஞ்சள் வெளிச்சம் மானின் தோற்புள்ளிகள் போல் காட்டில் விழ இளங் கொம்புள்ள ஆண் மான் தனது இணையின் முதுகை நாவால் நக்கியபடியிருந்தது. இணை மான் அசைந்தும் நகர்ந்தும் மரத்தைச் சுற்றி வந்தது. மரத்தோடு அண்டியபடி இணை மான் அயரத் தன் நீள் நாவால் அதன் யோனியை நக்கியது. இணை துள்ளி அசைந்து நகர்ந்தது. பின் அசையாமல் நின்றது. இருகால்களில் ஊன்றி எழுந்து தன் உடலை இணையின் மேல் கூடியது ஆண்மான். அதன் விடைத்த ஆண்குறி புழையில் நுழைந்தது. விழி முழுதும் திறந்திருந்த இளம் பாணனின் குறி நீண்டு ஆடையில் குத்திநின்றது. தன் வாழ்வில் முதன்முறையாக இரு மான்கள் கலவி கொள்வதைப் பார்த்தவன் முழங்காலில் எழுந்து நின்றான். பதும்மை வலக் கையால் துதியை வாங்கி இடக்கையால் வாயில் நுழைத்து புகையை இழுத்து ஊதியபடி இளம் பாணனின் மேனியை நோக்கினாள். கண்களில் சிவந்த வரிகள் மோகத்தின் ஊற்றுவிரிவென ஓடியது. அவன் குறி விறைத்திருப்பதைப் பார்த்து புன்னகைத்து விட்டு மான்களை நோக்கினாள். இணை மான் துள்ளியோடியபடி இருந்தது. ஆண்மான் ஏறுவதும் துரத்துவதுமாய் அலைபாய்ந்து கொண்டிருந்தது. துதி நூர்ந்தது. இளம் பாணனின் காதருகில் வந்து மென்சூடான மூச்சுக் காதில் எறிக்க “பாணனே, தேவ இலை மலர்கள் இருக்கின்றதா?” அவன் மான்களைப் பார்த்தபடி இடையில் சொருகியிருந்த மலர் ஒன்றை எடுத்தளித்தான். அவள் தன் கரங்களுக்குள் அவற்றை நசித்து உட்தள்ளி எஞ்சியிருந்த சிறு தணலை ஊதி ஊதி மூட்டினாள். புகை மெல்லக் கசிந்து அணைந்தது.

“வாரும் பாணனே, அவை கூடட்டும். நாம் வந்த வேலையைப் பார்க்கலாம்”. எங்கிருக்கிறேன் என அறியாத இளம் பாணன் மயக்கு உதிர்ந்து நிகழுலகு மீண்டான். சிலதூரம் நடந்து நாகதேவியின் கற்கோவிலுக்கு வந்தார்கள். நெய் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. தேய்பிறை தொடங்கும் முதல்நாளில் நாகதேவிக்குப் படையலிடும் திருவிழா நடக்கவிருக்கிறது. பூசைகள் முடித்து குடிகள் நகர் மீண்டு விட்டனர். கற்கோவிலின் விளக்கொன்றில் துதியை மூட்டினாள் பதும்மை.

உள்ளே சென்றவளைச் சிலநாழி காணாமல் இளம் பாணன் கோவிலின் கதவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். எங்கும் பாம்புகளின் சிலைகள். ஒவ்வொரு பிணைச்சலும் பாம்பின் உடல். ஒவ்வொரு கல்லும் பாம்பின் மேனி. இவ்வளவு நுட்பமாகச் செதுக்கப்பட்ட கோவிலை அவன் முன்னர் அறிந்திருக்கவில்லை. பதும்மையைத் தேடியபடி உள்நுழைந்தான். திகைத்துச் சில கணங்கள் உறைந்தான்.

பிரகாரம் முழுவதும் இருள் விஷமெனப் பரவிக் கிடந்தது. விழிக்கு ஒளியே கிடைக்காமல் காற்றில் அலைபட்டுத் தவித்து நகர்ந்து கொண்டிருந்தான். சுவர்களைத் தொட்டால் பாம்பின் நெளிவுகள். தலைகளைத் தொடும் போது அதிர்ந்து உதறலெடுத்தது. மெய்யான சர்ப்பத்தைத் தான் தொட்டோமா என அஞ்சினான். ஒரு பிரகாரத்திலிருந்து சிறிய ஒளியின் கீற்று வெளிச்சமொன்று கண்ணில் உயிரென விழுந்தது. விறுவிறுவென நடந்தான். தரை கல்மெழுகு போல் குளிர்ந்து சமமாகக் கிடந்தது. கர்ப்பக்கிரகத்தின் முன் ஒரு தீப்பந்தம் மட்டும் பெருநா நீட்டி எரிந்து கொண்டிருந்தது. நாகதேவியின் பேருரு அவ்விருளைக் கவ்வியிருந்தது. தேவியின் பூரணத்தை அச்சோதியால் விளக்க முடியவில்லை. தேவியின் படிக்கட்டில் அவளை நோக்கியபடி பதும்மை அமர்ந்திருந்தாள். ஒரு நாகம் பாதியுடல் உருட்டி அமர்ந்து தலைப்படம் விரிந்திருப்பது போல் மெல்லிய ஆடலுடன் அம்மையை நோக்கியிருந்தாள். தீப்பந்தமருகில் நின்று அவளையும் நாகதேவியையும் ஓவியத்தின் வடிவில் உள்வரைந்து கொண்டிருந்தான் இளம் பாணன்.

அம்மையின் மடியிலும் மேனியிலும் மஞ்சள் கரைந்திருந்தது. நீண்ட தொங்கு விளக்கொன்றிலிருந்த ஒவ்வொரு சுடரும் வான் நோக்கி எரிந்தது. செவ்விரத்தம் பூக்கள் இறைந்து கிடந்தன. அருந்தி முடித்த பதநீர்க் கலயங்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. விழி பிதுக்கிய நுங்குக் கோதுகள் குவிந்து கிடந்தன.

துதியை எடுத்து ஊதிய பின் கீழே வைத்து விட்டு ஊழ்கத்தில் கூடினாள் பதும்மை. இளம் பாணன் அவளருகே சென்று துதியை எடுத்துக் கொண்டு பதும்மையை நோக்கியவன் உறைந்து சிலையென விழி படர்ந்தான். அவள் மேனியில் ஆடையில்லை. படிக்கட்டுகளில் மேற் துணியும் இடைத்துணியும் குலைந்து கிடந்தன. தீட்டிய மைவிழிகள் மூடியிருந்தன. தோள்களும் நீள்கைகளும் ஊழ்கத்தின் நடன முத்திரையில் அமர்ந்திருந்தன. இரு முலைக் காம்புகளும் விறைத்து உருண்டிருந்தன. வயிறும் இடுப்பும் சீரான வேகத்தில் ஏறி இறங்கி அசைந்தபடியிருந்தது. பட்டுத் துணியின் ஒளிகொண்ட கருமேனி.
கழுத்தில் ஒரு தங்க ஆபரணம் சிறுநீல இரத்தினங்களால் இழைக்கப்பட்டிருந்தது.

யோனியில் மயிர்கள் குறுங்காடென வளர்ந்து தொடையின் தொடக்கம் வரை நீண்டிருந்தன. முழங்கால் மடிவுகள் காலில் இரு யோனிகளென விரிந்திருந்தன. புருவம் நெளிய அவள் விழி திறந்தாள். இளம் பாணன் விழிகளைத் தாழ்த்திக் கொண்டான். அவள் அவனை அறிந்த பாவனையே இன்றி ஒரு கை நீட்டினாள். அவன் அவளுக்கும் அம்மைக்கும் இடையில் நின்று துதியை மலரிட்டு மூட்டியளித்தான். எழுந்து வாங்கினாள். அம்மைக்கு நேரே இருந்த மேற்துளையால் வான் நோக்கினாள். நிலவு மஞ்சட் பூரணமென ஒளிர்ந்து கொண்டிருந்தது. வாயைக் குவித்து துதியைச் சொருகி இழுத்து உள்நிறைத்தாள். தீப்பந்தம் மெல்ல அடங்கித் தன் கடைசி நாவையும் இழந்தது. தொங்கு விளக்குகள் புகை ஊதின.

நிலவின் மஞ்சட் பூரணம் சொரிந்து தேவியையும் இளம் பாணனையும் ஒருவருக்கொருவர் துலக்கியது. இளம் பாணன் தன்னை அந்த ஒளிக்கு ஒப்புக் கொடுத்துவிட்டு மேனிமலர்ந்து அவளை நோக்கினான். அவள் நிலவை நோக்கியபடியே துதியை உறிஞ்சினாள். நாகதேவியின் உடலில் இளம் பாணனின் நெஞ்சை ஒரு கையால் தள்ளிச் சாத்திய பின் அவனது வெருகு விழிகளை அளைந்து கொண்டிருந்தாள். அப்போது நின்றிருந்தது குறும்பனின் துடிவிழிகளில்லை. மயக்கில் அயர்ந்த சர்ப்பத்தின் உள்ளிருப்பை அவனுள் உணர்ந்தாள். அவன் கன்னத்தைப் பிடித்து இதழ்களைத் திறந்து துதிப்புகையை ஊதினாள். மெய் அதுவரை அறிந்ததிலேயே நிகரற்ற நறுமணமும் மயக்கும் அவனுள் நிறைந்து எழுந்தது. அவளின் இதழ்களின் சீரழகைப் பார்த்தான். துதியை ஒரு கையால் இழுத்தபடி அவன் சர்ப்பத்தைத் தடவினாள் பதும்மை. யானைத் துதியென அது நீண்டிருந்தது. நாகதேவியின் மேல் மஞ்சள் ஒளிவட்டக் குடையென நிலவு மிதந்தது. முழந்தாளில் நின்றபடி யானைத்துதியில் இதழ் குவித்து உறிஞ்சத் தொடங்கினாள் பதும்மை.

வாசித்தவர்கள் : 493

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,171)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (2,007)
  • காதலின் முன் பருவம் (1,998)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,909)
  • விடுதலையில் கவிதை (1,890)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme