Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

43: ஓயா மழை

Posted on June 26, 2024 by Kiri santh

காலை பரபரவென விடிந்து கொண்டிருப்பதை அங்கினி நோக்கியபடி உவகையில் முகம் விரிய நின்றாள். விழவுக் காலங்களில் உளம் கசப்பை அடைய முயலும் போதெல்லாம் தேன்வழுகும் பாறையில் நிற்கும் தேரையெனத் தன்னை உணர்வாள். வழுக்கிச் சென்று காமத்தின் வாயில் விழுந்து கொள்வாள். உடலை விழைவின் கலமென ஆக்குவதை அவள் தன் அத்தைகளிடமிருந்து கற்றாள். பட்டினத்தின் பரத்தையர் வீதிகளில் அங்கினியினுடையது கடைசி இல்லம். நாகதேவிக் கோவிலின் காட்டு விளிம்பில் அமைந்திருக்கிறது. அவளது இல்லத்தின் பின்புறமிருந்து ஒற்றையடிப் பாதையொன்று குறுக்காகக் காட்டை வெட்டி கோவிலுக்குச் செல்லும் ரகசிய வழி. பழங்காலத்திலிருந்தே விழவுக்குப் பரத்தையர் செல்லும் வழியது. அவ்வழியால் இல்லம் வரும் ஆட்கள் வரமுடியாது. வேறுகாடார் மட்டுமே அவ்வழி அறிந்த பிற ஆண்.

அங்கினிக்கும் வேறுகாடாருக்கும் இளவயது முதலே நட்பிருந்தது. அங்கினி காட்டுக் குளத்திற்குச் செல்லும் வழியில் மையிட்டு மதர்த்த மார்பை நிமிர்த்தி இளம் பாவையெனத் தன் அழகுடல் பொலிய நின்ற இளமைக் காலங்களில் வாட் பயிற்சி முடித்து குளத்தில் குளித்து விட்டு நீர் உலர்த்தாமல் குழல் விசிறி இளஞ் சிம்மம் போல் நடந்து வரும் வேறுகாடார் அவளைப் பார்த்து நீர்ப்பிசிறுகளை விசிறுவார். அவளைச் சீண்டுவார். வேடிக்கைக் கதைகள் சொல்லிச் சிரிப்பார். அங்கினி பழகிய சிம்மமென அவருக்கு இனிகனிகள் கொய்தளிப்பாள். வேறுகாடாரிடம் இயல்பென அமைந்திருந்த புதிர் அவளை அவிழ்க்க அழைக்கும் மந்திரமென மின்னும். அவளின் தேகத்தில் காமத்தின் ஊற்று முனைகளைத் திறந்தவர் அவர் தான். குளத்தில் கூடிக் குளிக்கையில் உள்நீச்சலில் மீனென அமிழ்ந்து இடையிலும் மென்முலைகளிலும் முத்தமிடுவார். வாயில் நீரள்ளி அவளின் மேல் உமிழ்வார். அவள் அவரது இளங் குழல்களில் தாமரைகளை அள்ளி வந்து சூடுவாள். இருவரும் நீச்சலில் தேர்ந்தவர்கள். குளத்தின் எல்லை வரை நீச்சலிட்டுத் திரும்புவார்கள். தோழர்கள் அவர்களை நகையாடும் போது அவள் என் காதலி என பதில்பகர்வார். அச்சொற்கள் நகர் தொட்டு வேறுகாடாரின் தந்தை அறிந்த போது அவருக்குத் தளைகள் இடப்பட்டன.

வேறுகாடார் ஒற்றனாகிய முதற் பணி அங்கினியின் காதலுக்காகவே. குடிகள் அறியாது வேடம் புனைவார். நாழிகைகளை அறிந்தார். நகர் விழிக்கும் நேரம். மாந்தர்கள் உலவும் பொழுதுகள். அல்லும் பகலும் எத்தனை வண்ண பேதங்கள் கொண்டவை. அவை மானுடரை எப்படி ஒழித்துக் கொள்கின்றன. இருளில் திசைகளை அறிவது எவ்விதம். தேர்ந்த பொய்களை நெய்வது எப்படி. பிறர் நம்பும் வகையில் அவற்றை இழைத்து பாவனைகளை உண்டாக்குவது எங்கனம். பொய்களுக்கிடையில் ஓடும் மெய்நுனியைத் தீண்டித் தகவல்களை உய்ப்பது எங்கனம். அனைத்தும் அவர் களவுக் காதலில் கற்றவை. அங்கினியின் மனைக்கான வீட்டின் ஒற்றை வழியைக் காட்டின் இருளிலும் அவர் விழியறியும். ஊசித் துளையால் நுழைந்து வெளியேறும் நூலென அவர் வழியை அறிவதை அங்கினி வியப்புடன் கேட்பாள். காடும் அதன் இருளும் அவர்களின் கூடல் வெளிகளாகின.

வேறுகாடார் புலிப்படை ஒற்றராகிய பின்னர் அங்கினியை அவர் தன் சேதிகளைக் கடத்தும் புறாக்களில் ஒன்றென நியமித்தார். அங்கினி அச்சேதிகளுக்காக அவர் தன்னை நெருங்குவார் என எண்ணுவாள். அவள் தன் பணி பரத்தை வேடத்தில் ஒரு ஒற்றர் என்பதால் தான் இறந்தால் தனக்கும் மாவீரர் பட்டம் கிடைக்குமா என வேறுகாடாருடன் நகையாடுவாள். ஒற்றர்கள் படையில் இருப்பதைப் படைகளே அறியக் கூடாது அங்கினி என வேறுகாடார் மறுமொழி சொல்வார். நீலருக்குத் தகவல்கள் அளித்துத் திரும்பும் பொழுது தான் பெருந் தேசப்பணி ஆற்றியதென உணர்வாள். நீலரைக் குடிகள் சந்திப்பது அரிது. அவ்வகையில் அச்சந்திப்புகளைப் பெரும் பேறென எண்ணினாள்.

வேறுகாடாருக்கும் வசுதாவுக்கும் இடையில் உள்ள காதலை மெய்யென அறிந்த ஒரே மானுடர் அங்கினி மட்டுமே. இரவுகளில் உறக்கமிழந்து மஞ்சத்தில் நாகமெனப் புரளும் வேறுகாடாரை மார்பில் கிடத்தி குழல் கோதி நெஞ்சிட்டு ஆற்றுவாள். அவரின் மெய்யான உலகை ஓரளவு அறிந்த ஒரே உயிர். அவரது அகத்தின் மேன்மைகளையும் கீழ்மைகளையும் அங்கினி தன்னகமென அறிவாள். காமம் பற்றி அதன் விழைவைப் பற்றி விடிய விடியப் பேசுவார்கள். போரையும் அதன் விழைவுகளையும் காமத்துடன் ஒப்பிட்டுச் சிரிப்பார்கள்.

ஆண்கள் போரிலிருந்து காமத்துக்கும் காமத்திலிருந்து போருக்கும் திரும்புவார்கள் என வேறுகாடார் சொல்லுவார். அங்கினி பெண்கள் காதலிலிருந்து காமத்துக்கும் காமத்திலிருந்து காதலுக்கும் திரும்புவார்கள் என்பாள். இருவரும் சந்திக்கும் ஒரு பொதுப்போர்க்களம் காமம் மட்டுமே எனச் சொல்லிச் சிரிப்பாள். பெண்புலிகள் போரில் நுழையும் பொழுது மனையை ஒருக்குவதை அகத்தால் அறிந்தவர்களெனக் களத்தை ஒருக்கி வெல்வார்கள் என நகைப்பார் வேறுகாடார். அவர்கள் கொல்வெறியுடன் போர் நுழைவதென்பது மனை குலைந்திருக்கும் சினத்துடன் எனச் சொல்லாடுவார்.

பெண்ணுடலே போர்க்களம் தான் காதலரே. அவர்கள் போர் தொடுக்கப்படும் நிலம். தன்னைக் காத்துக் கொள்ளத் தானே எழுவதால் தான் பெண்ணை பூமாதேவி என்கிறார்கள் என்பாள் அங்கினி. பெண்ணுடலுக்குக் காதலே தூய விழைவு. காதலை ஒறுக்கும் அனைத்தையும் இல்லாதொழிப்பதே புடவிப் பணியென மண்ணமைந்த பெருங்குடி பெண்குடி. காதலின் குழவியாகவன்றிக் காமம் ஒரு தூய உடல் விழைவெனப் பெண் உணர்வதில்லை என்பது அங்கினியின் வாதம்.

ஆணுடல் கொல்லும் கலன். அதற்கு உடலே தூய விழைவு. அகத்தின் விழைவென அவன் எண்ணுவது புடவியை ஆளும் கனவையே. காமம் கொண்ட மானுட வடிவம் ஆண். காதல் கொண்ட வடிவம் பெண். எனக்குக் காதல் என்பதே பெண் ஆக்கிய உணர்வு என்ற எண்ணமிருக்கிறது எனப் பதில்வாதம் புரிவார் வேறுகாடார்.

வேறுகாடார் பட்டினம் திரும்பியமை அங்கினியை இளம் பெண்ணாக ஆட வைத்தது. அவள் முலைக் காம்புகள் குறுகுறுத்தன. அல்குல் இன்கனவுகளால் நீர்ச்சுனையானது. அவரின் தொடுகைகளை எண்ணி எண்ணி மேனி மயக்குற்றுக் கிடந்தாள். அவளை விழைந்தவர்கள் அவளுள் எழுந்திட்ட கொல்காம தெய்வத்தைக் கண்டு அஞ்சினர். மோகம் மூத்து ஆயிரமாயிரம் ஆண்டுகள் காமம் பயின்று உடலென்றானவள் என ஆனாள். காலையின் பரபரக்கும் உடல்களும் இரவில் எய்யப்போகும் களிகளின் அவசரமும் அவளுக்குள் புன்னகையை வார்த்தது.

அங்கினி மெய்ப்புடன் அந்நாளை நோக்கியிருந்த போது பதும்மை குழலில் மலர்களிட்டுத் தழையாடை உடுத்தி மனை வாசல் வந்தமைந்தாள். அங்கினியில் சுடர் கொண்டிருக்கும் தீ எதுவெனக் கண்டு “அத்தை இனி மூநாளும் கொல்லரக்கியின் காம பாடங்கள் ஓய்விலாது நிகழ்க” என எள்ளினாள். அவள் தொடையில் கிள்ளியவள் “பேதையே. உடலை உடல்கள் அறியாமல் அறியும் நாட்கள் இவை. ஒன்று இன்னொன்றை அகமழித்து உடற் கூட்டென ஆகும். மண்ணடியில் விரிந்து ஒன்றையொன்று பற்றித்தழுவும் வேர்களென மானுடம் அமைவது கலவியில் என்பதை அறி. என்னுளம் ஒவ்வொரு மானுடரையும் ஒரு இனிமை என எண்ணவே விழைகிறது. ஒவ்வொரு வகை இனிமை. தேனின் கனியின் பதநீரின் கள்ளின் அப்பத்தின் கரும்பின் இனிமை. காமம் இனிமைக்கு மட்டுமே ஈடானாது” எனச் சொல்லி நகைத்தாள். “உங்களிடம் கற்றுக் கொள்ள எப்பிறப்பில் என்ன தவம் செய்தேனோ அத்தை” எனப் பதில் நகையாடினாள் பதும்மை.

புலரியிலேயே மேனிகள் ஒன்றையொன்று விழியெனத் தொடுவதை நோக்கி நின்ற பதும்மை மெல்ல அங்கினியிடம் சொல்லெடுத்தாள். “அத்தை. பெண்ணென நாம் இத்தனை உடல்களை விழைவதால் பரத்தையென நின்றிருக்கிறோம். மனைப் பெண்டிர் நம்மை அஞ்சுகின்றனர். அவர்கள் கொழுநர்கள் நம்மைக் காதலிக்கின்றனர். காமத்தை விழைவெனக் கொண்டல்ல நாம் பரத்தையென வாழ்வது. அது நம் குடித்தொழில் மட்டுமல்லவா. ஆயினும் நாம் ஏன் இத்தனை களி கொண்டிருக்கிறோம். குடிகளின் பொது அறங்களை மீறும் களிப்பாலா” எனத் தீவிரமாகக் கேட்கும் குரலில் சொன்னாள்.

“பதும்மை. நாங்கள் குடித்தொழிலாகப் பரத்தையர் ஆனவர்கள் மட்டுமே. பெண் என்பது காதலின் விழைவினால் தளையுண்டது என்பதை அறிந்தவளே பரத்தமையில் தன்னை வெல்கிறாள். மனைப் பெண்டிர் நம்மை அகமறிவதில்லை. அவர்கள் கொழுநர்களின் உளங்களை எண்ணியே துன்புறுகிறார்கள். ஆண் காமத்தின் விழை விலங்கு. அவன் புடவிக் கனவுகள் கொண்டு தருக்கி நிற்கும் போதே காமத்தைப் பிறிதொன்றாக மாற்றிக் கொள்கிறான். லட்சிய புருசர்களில் ஏற்படும் காதலென்பது காமம் கடந்து நின்றிருப்பது அதனால் தான். அவர்கள் காமத்தைப் பெரும் கனவுகளுக்குத் தீயில் அர்ப்பணப் பொருளென இட்டு அமர்பவர்கள். ஆனால் அவர்கள் அரிதானவர்கள். எளிய மானுடர்கள் விழைவால் அலைபடும் தூசுக் குவியல்கள். ஆற்றுப் பெருக்கெனக் காமம் கரைபுரண்டு ஓடுகையில் அவர்கள் அதில் அமிழ்ந்து ஒட்டிக்கொண்டு கரைகிறார்கள். எண்ணும் தோறும் காமம் கோடி கோடி இதழ்கள் கொண்ட மலரென்பதை அறியாத மானுடரில்லை. அவ்வெண்ணமே குடிநெறிகளை ஆக்கியது. காட்டுப் புரவிகளுக்குப் போர்ப்பயிற்சி அளிப்பது போல் உளங்கள் அறங்களால் சேணமிடப்படுகின்றன. பரத்தைகள் காட்டுப் புரவிகளெனத் தம்மை உணர்ந்து வனம் திரும்பியவர்கள். அங்கு அவர்கள் தம் புல்வெளியைத் தேர்கிறார்கள். கிடந்து தம் முழுதாற்றலால் விசை கொள்கிறார்கள். நம்மிடம் வரும் ஆண்கள் வனம் திரும்பி காட்டுப்புரவிகளில் ஏறி விசை கொள்ளும் எளிய காற்றுகளைப் போன்றவர்கள். பெரும்பாலானவர்கள் விழுந்து புரண்டு வீழ்வது அவ்விசையாலேயே. மனைப் பெண்டிரை விட நம் விழிகளையே அவர்கள் அஞ்சுகிறார்கள். நாம் அவர்களின் ஆழங்களை ஒரு நோக்கில் அறிகிறோம். மறுநோக்கில் அவர்களின் எல்லையெனச் சுருங்கி உடல் கொள்கிறோம். அவை அவர்களைச் சிறுமை கொள்ளச் செய்யும். எந்த ஆணும் சிறுமையடைய விழையாதது பெண்ணின் முன் மட்டுமே. அவன் ஆழம் அகத்தறியும் பெண் விழைவென எழுந்தால் அவன் சிறு கலமென எஞ்சுவான்.

“நாம் இச்சைகளை வேடமிடக் கற்றவர்கள். அதிலேயே பயின்றவர்கள். என் காதலனின் மொழியில் சொன்னால் காமத்தின் ஒற்றர்கள். நம்மால் பூண முடியாத வேடமென்று எதுவுமில்லை. எஞ்சும் சில கணங்களில் நம்முள் அன்னையைக் காண்பவர்கள் பின்னர் வழிதவறியும் இங்கு வருவதில்லை. எளிய உளங்களும் காமத்தை யோகமெனக் கொண்டவர்களுமே நம்முடன் களிப்பவர்கள். நடுவில் அலைபவர்களே குடிப்பெரும்பான்மையினர். நாம் மானுட விழைவின் உச்சங்களில் ஒன்றென மண் நிகழ்ந்தவர்கள். வில்லேந்திப் போர்க்களம் புகுபவரின் அகத்தில் எழும் பேருவகையை மஞ்சத்தில் அகலேற்றுகையில் நான் உணர்ந்திருக்கிறேன். அது என் போர்க்களம். அங்கு என்னை வெல்பவர் அரிது எனக் கண்டிருக்கிறேன்.

பெண்களுடன் காமம் துய்க்கையில் அவர்கள் என் சுய இன்பத்தின் விரல்களெனவும் எனக்கென எழுந்து நானே எனைத் தொட்டுக்கொள்ளும் நாவுகளெனவும் ஆகுபவர்கள். பெண்களுடன் கலவியில் நான் அளைவது என்னுடலின் பிறகாமங்களையே. தன்னுள் ஆணின் வேட்கையை மூட்டிக் கொண்ட பெண் என்னை அச்சமூட்டிக் காமக் கனலேற்றுபவள். விருபாசிகையும் நீயும் என்னை அலைத்துக் கொல்லும் விலங்குகள். உங்கள் தொடுகைகளில் நான் அந்த ஆணை உணர்ந்திருக்கிறேன். என்னை வீழ்த்தும் சிலரில் நீங்களும் உள்ளீர்கள். அது நீங்கள் கற்றறிந்த காமமல்ல. அது உங்கள் உயிர்க்கொடை. விழைவில் ஆணென ஆகும் தோறும் நாம் அவ்விழைவை ஆளும் விழைவும் கொள்கிறோம். என்னுள் இருப்பது பெண்மையின் தனிக்குணங்கள். அவை நீர்பட்டு அணையும். அணைந்தே பெருகும். பெருகியே தன்னை உணரும். உணர்ந்தே தன்னைக் கடக்கும். உங்கள் விழைவுகள் உங்களால் ஆளப்படுபவை. நீங்கள் கனல்கள். கனல் பற்றும் பஞ்சுகளென ஆடவரும் பெண்டிரும் உம்முன் எரிவது உங்களில் சுடரும் ஆண்மையின் மெய்விழைவால்” என்றாள் அங்கினி.

“பாராட்டுகளுக்கு நன்றிகள் அத்தை. ஆனால் நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை. அறம் மீறுவதால் கொள்ளும் களிப்பா நாமுணர்வது” எனக் கெஞ்சு குரலில் மிழற்றினாள் பதும்மை.

“இல்லை பதும்மை. எளிய சொற்களில் நாம் அவ்விதம் தருக்கலாம். ஆனால் அறத்தினதும் நெறிகளினதும் பாற்பட்டு மட்டுமே மானுடர் உருக்கொள்வதில்லை. மண்ணில் அனைவரும் தருக்கி உண்டாக்கிக் கொள்ளுமளவு விரிவு கொண்டவை அறங்கள். அதை நாம் அறிவோம். ஒன்றை மீற இன்னொன்று ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கும். அச்சொற்களை அக்கணங்களுக்குச் சூடி அம்மீறலை அறமெனக் கொள்வோம். அறம் அவரவர் கையாடி பதும்மை. அதில் அவர் பார்த்துக் கொள்வது தம்மையே. இன்னும் நுணுகிச் சொன்னால் அறங்கள் அவரவர் சொந்தக் கைகளால் ஆக்கிய ஆடிகள். அடங்கும் உருக்களெனத் தம் ஆடிப்பாவைகளில் சிக்கிக் கொள்வார்களே குடிகள். அவர்களுக்கு ஆடியை ஆக்கும் மரமும் கனிமமுமெனப் பேரறங்கள் மண்ணில் எழுந்த மகத்தான கனவு கொண்டவர்களால் அளிக்கப்படுகின்றன. எளிய குடிகள் அறங்களைச் சேர்த்து உருக்கொண்ட களிமண் பாவைகள். பழைய அறங்கள் அழிந்து மானுடம் தன்னை விரித்துக் கொள்ளும் தோறும் அவர்களின் களிமண் உடல்கள் மண்ணில் வீழ்ந்து நொறுங்குகின்றன. அவ்வொலியை அவர்கள் அஞ்சுகிறார்கள்.

நாம் அறங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல பதும்மை. நம் தன்னறங்களே நாம் முதன்மையாகப் பொருள் கொள்ள வேண்டியவை. அதிலும் அவை உருவாகிய இளம் பருவம் நம்மை மரச்சட்டகங்கள் எனச் சூழ்ந்து கொள்பவை. எளிதில் விலக்கிக் கொள்ள முடியாதவை. முழுவிசையுடன் அவற்றை உடைத்து புதியதை உண்டாக்கும் அகங்களே வருங்காலங்கள் தங்களைப் பார்த்துக் கொள்ளும் ஆடிகளென்றாவார்கள். தேகம் ஒரு ஆடி. அகம் இன்னொன்று. தேகத்தினுள் தெரிபவர் நாம் என எண்ணும் தோறும் நாம் ஆண்களென ஆகிறோம். ஆடிகளில் பெண்கள் நோக்குவது அவர்கள் தேகத்தில் மிளிரும் அகத்தையே. அதனாலேயே ஆடியை நீங்காதவர்களென ஆகிறார்கள். நாழிகைக்குப் பலமுறை தம்மைப் பார்த்துக் கொள்கிறார்கள். பெண் விழையும் முதற் காமம் தன்னுடலே. தன்னுடலிலிருந்து ஆணுடலை நெருங்குந் தோறும் அவள் தன்னை இழக்கிறாள். பிறிதொரு மற்றமையை அறியும் ஆர்வம் கொள்கிறாள். அதில் அகம் பொலியும் அழகின்மையைக் கண்டு வெறுக்கிறாள். பின் அதை அகமென ஆக்கிக் கொள்ளத் தீராது முயன்று சலிக்கிறாள். முதுமனையாட்டிகளின் முகத்தோல் சுருக்கங்கள் ஆண்களின் அகமெனத் தோன்றுவது அங்கனமே.

நாம் அறம் மீறுவதால் களிகொள்ளவில்லை. ஏற்கப்பட்ட பொது அறங்கள் நம்முடலைத் தொடமுடியாத தொலைவில் வஞ்சினத்துடன் நிற்பதைக் கண்டு எள்ளி நகையாடுகிறோம். அவை நம்மை ஆள முடியாமல் துரத்துகின்றன. வசை பாடுகின்றன. நம்முடைய தேகம் நம்முடைய போர்க்களம். நம்முடைய அகம் நம்முடைய போர்க்கலன். நாம் புரியும் போர் மானுட இச்சைகளின் தொல்தெய்வங்களுடன். மானுடக் குடிகளுக்கு அறம் சமைத்தவர்களின் சொற்களுடன். நாம் வெல்வதில் களிப்பதில்லை. போரிடுவதில் களிக்கிறோம். அவ்வாறே ஆண்களை நிகரெனக் கொண்டும் பிறிதொரு கணத்தில் அவர்களையும் மீறிப் பேருருவும் கொள்கிறோம்” என்றாள் அங்கினி.

அங்கினியின் சொற்களை ஆர்வமுள்ள மாணவியெனக் கேட்டுக் கொண்டிருந்த பதும்மை “ஆண் எதிர் நிலையில் மட்டுமே நின்றிருக்க முடியுமா அத்தை. அவன் காதலனாகப் பெண் கொண்டாடும் நிகர் உயிராக ஆக முடியாதா” என மீண்டும் தீவிரமாகக் கேட்டாள்.

“இயலாதென எதுவும் மண்ணில் இல்லை பதும்மை. ஆண்களில் அரிதாகக் காதல் நிகழ்ந்து கொண்டு தானிருக்கிறது. ஆனால் அவை பெண் காதலின் பிம்பங்களை ஆடியெனத் திருப்பிக் காட்டுவதால் தான்.

ஆண்களின் சொந்தக் காதல்கள் அவர்கள் மட்டுமே. ஆண்கள் அனைவருள்ளும் தானொரு மாபெரும் வீரனென்றோ வெல்லப்பட முடியாதவன் என்றோ உயர்ந்தவன் என்றோ எண்ணம் முனையளவும் இல்லாதவர் இல்லை. ஆண்கள் தம்மையே முதன்மையாகக் காதலிக்கின்றனர். அக்காதலை அவர்கள் நாளும் பொழுதும் நெய்யூற்றி வளர்க்கின்றனர். ஆண்களின் இந்தத் தற்பிரேமை அவர்களை விசைகொள்ளச் செய்வது. அதனாலேயே நான் எனத் தருக்கி நிற்கிறார்கள். காதல் சரணடைவது. முற்றளிப்பது. ஆண் தனது அவிழும் ஆடையின் சிறுநுனியெனத் தன் அகங்காரத்தைப் பற்றியிருப்பவன். அவனால் முழுநிர்வாணம் கொள்தல் இயலாது. அக்கணம் அவன் முழுதாக வெளிப்பட்டு விட்டால் யோகியென ஆகிவிடுவான். காமத்தில் யோகிகள் முழுநிர்வாணம் கொள்வது அதனாலேயே. யோகிகளைப் புணரும் பொழுது அவர்கள் நம்மைக் காதலில் திளைக்க வைப்பதை நான் அறிந்திருக்கிறேன் பதும்மை. இதுவரை உன்னிடம் சொல்லியதில்லை. அதுவோர் மாயக் கனவு. நான் கொண்ட கலவிகளில் முதன்மையானது. கலவியை யோகமெனக் கொள்பவரின் காமமே பெண் காதலை தன்னுள் முழுது வார்க்கும் குவளையென ஆக்கிக் கொள்வது. அக்காமத்தை மறப்பது பரத்தையராலும் இயலாது” எனச் சொல்லி நகைத்தாள்.

“பாவி அத்தை. என்னிடம் கூட நீ சொல்லவில்லை தானே. யாரென்று சொல் அத்தை. நான் அக்காமத்தை அறிய விழைகிறேன். சொல்லில் என்றாலும்” என விழிகள் முழுவிரிவு கொள்ள முன்னெழுந்தாள் பதும்மை.

“இன்று ஏதோ உனக்கு இதைச் சொல்ல வேண்டுமென எண்ணமெழுகிறது பதும்மை. இதை எக்கணத்திலும் நீ யாரிடமும் பகிரக் கூடாது” என அவள் பதில் வாக்குக்குக் காத்திருப்பவளென அவள் விழிகளை நோக்கினாள் அங்கினி. “உறுதியாக அத்தை. உன் மீது ஆணையாக. நீயிடும் பீடிகைகளால் நெஞ்சு பதறுகிறது. இரு. எதற்கும் தீயிலையைப் பற்ற வைத்துக் கொள்கிறேன்” என்றவள் எழுந்து மாட்டின் கொம்பு போன்ற துதியை எடுத்து வந்து தேவ இலை மலர்களை அடுக்கி மூட்டினாள். ” வா. அத்தை. அறைக்குள் செல்வோம். இங்கு எப்பல்லி கேட்டு வாக்குரைக்குமோ தெரியாது” எனச் சொல்லி எழுந்தாள். இருவரும் சிரித்தபடி பதும்மை தன் அறையைத் திறந்து சென்று சாளரத்தால் விழுந்த ஒளிக் கம்பிகளால் நடந்து மஞ்சத்தில் அமர்ந்தாள். அவளது தழையாடை மலர்கள் மஞ்சத்தில் உதிர்ந்தன. அங்கினி கொம்பை உறிஞ்சிய பின் புகையைக் காலங்களென விரித்து ஊதினாள். விழிகளில் நெடுங் காலம் சென்று நிகழ்ந்த பேரின்பத்தை அகவிழியால் தொடுபவளின் பெருங்கனவு விரிந்தது. தழைந்து சுவரில் சாய்ந்து கொண்டு உடலைத் தளர்த்தினாள். இடக்கையைத் தலைக்குக் கொடுத்துத் தூக்கியபடி சயன நிலையில் அக்காட்சிகளை அகத்தில் மீளக் கண்டாள்.

“நான் அப்போது இளமையின் முதல் மதர்ப்பில் களி கொண்டிருந்தேன். வெகுசில ஆடவரே என் மெய் தீண்டியிருந்தனர். வேறுகாடார் நெடும் பயணங்கள் சென்று கொண்டிருந்தார். பல பருவங்கள் அவரை நான் பார்க்கவேயில்லை. அவரை நான் காண்பது இனி நிகழப்போவதில்லை எனத் தோழியர் சொல்லினர். எங்கோ ஒரு கணத்தில் அவர் பிறிதொரு பெண்ணில் தன் அகத்தை ஒப்படைத்து விட்டார் என உளம் எண்ணத் தொடங்கியது. நான் களிகளில் ஈடுபட்டுக் காலங்களைக் கரைத்துக் கொண்டிருந்தேன். என் மேனி முழுவிசையில் கலவியை அறிந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு மேனியிலும் அது என்னிடம் தோற்று அடங்கும் குரூர திருப்தியில் அகம் மிதந்திருந்தேன்.

நாகதேவி கோவிலுக்குப் பூரணை நாட்களில் சென்று வருவது என் வழமையாக இருந்தது. அந் நாட்களில் என்னுள் காமம் பித்தென எழுவதுண்டு. ஆழியின் பெருக்கலைகளை நெஞ்சில் கேட்பதுண்டு. அப்படியொரு நாள் நிலவு வானில் தோன்றவில்லை. காற்று எங்கிருந்தோ விரட்டிய கனமழை மேகங்கள் குளிரையும் அள்ளி வந்து சேர்ந்தன. கோவிலின் இருட் பிரகாரத்தில் அகலை ஏந்தியபடி நான் சென்றேன். மென்மழை பொழியத் தொடங்கியது. பிராகரத்திலிருந்து நாகதேவியின் கருவறைக்குச் செல்லும் வழியெங்கும் மழைச்சாரல்கள் முத்தங்களெனப் பெய்து கொண்டிருந்தது. மேனி நடுக்குற்று மெய்ப்புல்கள் எழுந்தன. இருட் பிரகாரத்தின் கல்லரவுகள் விழிகொண்டு என்னை நோக்குகின்றன என மயக்கு எழுந்தது. கோவிலே ஒரு நெடுஞ் சர்ப்பமாகி அதன் வயிற்றில் அகப்பட்டது போல் உணர்ந்தேன். மனை திரும்பி விட விழைந்தேன். கருவறையிலிருந்து எழுந்து வந்த தீயலை வெளிச்சம் என்னை அதை நோக்கி இழுத்தது. கால்களை புற்களில் மிதித்து நகர நகர அவ்வெளிச்சம் வா வா என அழைப்பது போலிருந்தது.

மேகங்கள் நீர்க்கல்கள் என மண்ணை அறையத் தொடங்கிய போது அடிகளை வேகங் கொண்டு வைத்துக் கருவறை முன்னே சென்றேன். அன்னையை நோக்கியபடி பேருருவம் ஒன்று ஊழ்கத்தில் அமர்ந்திருந்தது. விரிகருங் குழல்கள் தோள்களில் ஊழகத்திலென ஆடாதமைந்தன. மூச்சு அவ்வுடலில் எழுகிறதாவென அஞ்சினேன். அது மானுடரா எனவும் எண்ணமெழுந்து நெஞ்சைப் பிசைந்தது. எதுவோ ஓர் எண்ணம் உளம் விரட்ட மெல்லப் படியேறி அவர் முன்னே சென்றேன். அவரை அக்கணம் யாரென அறியேன். மூடிய விழிகளில் கனிவின் புன்னகையைக் கண்டேன். அது நான் ஆண்களில் விழித்த பார்வைகளில் கூட கண்டதில்லை. அவர் விழிகளின் பீலிகள் நுண்கரங்களென அமைந்திருந்தன. முறுக்கிக் கட்டிய வில் போல் தோள்களும் கற்சிற்பியொருவன் தெய்வங்களைக் கனிந்து கனிந்து ஆக்கியதுமென உடல் வாகு கொண்டிருந்தார். ஆடைகளற்று வெற்றுடலில் நீறுகொண்டிருந்தார். அவர் ஆண்குறி கொல்வேல் விடைப்பென எழுந்து நின்றது. கைகள் ஊழ்க முத்திரையில் நிலை கொண்டிருந்தன. ஆண்குறியை நோக்கினேன். இன்று வரை நான் கண்ட குறிகளில் பெரியதும் நிகரற்ற அழகும் கொண்டிருந்தது. ஒரு கணம் அது என்னை விழி நோக்குவதாய் உணர்ந்து மேனியெங்கும் மின்கதிர்கள் ஆடின. உடல் மின்னெனத் துடித்துக் கொண்டிருந்தது. அக்கணம் நான் அங்கு என்ன செய்கிறேனெனெ அகம் விழித்த போது அங்கிருந்து ஓடிவிட எண்ணினேன். ஆனால் கால்கள் தரையில் ஊன்றப்பட்டு விட்டவை போலவோ அல்லது சாபத்தால் கட்டுண்டவை போலவோ நகர மறுத்தன. மேனியில் பொழிந்த மழை நீர் வெளியிடையில் வியர்வை பூத்தது. என் மார்புகள் அவரை நோக்க நோக்க விரிந்து என்னை விடப் பெரியவையாய் ஆவதாய் எண்ணி இருமார்ப்புக்கும் குறுக்காய் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றேன். உடல் உளைவெனச் சில நொடிகள் ஆகியதைக் கண்டு சோர்ந்து கைகளைத் தளைய விட்டேன். அவரது மூடிய விழிகளையே நோக்கி நின்றேன்.

ஒரு பொற்கணத்தில் அவர் விழிதிறந்தார். என்னைக் கண்ட துணுக்குறல் அவர் விழிகளில் எழவில்லை. ஆனால் அவர் நோக்கிய அக்கணம் அவர் என்னைத் தீண்டினார் என மேனி நடுங்கியது. ஒரு சொல்லும் நாவெழாது விம்மி நின்றேன். காற்று மூசியடித்து அன்னையின் மேற்துளையால் நீர் வழிந்து பெருகி என்னை நனைத்தது. நனைந்த நீர் பெருகி அவரது கால்களை நனைத்தன. அவர் எழுந்தார். என்னை விட இருமடங்கு பேருரு. திரும்பி நடந்து மழைப்பெருக்காடும் வெளியில் சென்று நின்று விருட்சமெனக் கரங்களை விரித்து மழை நின்றார். மின்னல்கள் வானில் வெட்டி உதிர்ந்தன. விழிகள் கயிற்றால் கட்டியிழுக்கப்படுபவளைப் போல அவரையே நோக்கினேன். என் நோக்கு அகமும் புறமும் அகலாது அவரையே உற்றது. மழையின் தாளத்தில் புற்களில் கால்களை ஊன்றி விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து ஆடினார். விரிசடைகள் பித்துற்றவையெனச் சுழன்றன. தேகம் தழலென மழைநீரில் துடிதுடித்தது. நீறு கரைந்து ஓடியது அவருடலில். எக்கணம் என்னை உந்தியது என அறியேன். மழையின் அழைப்பைக் காதுற்றவளென மண்ணிறங்கினேன். மேனி இக்கணம். இது தான் நீ பிறக்கும் கணம் என உரைத்ததென ஆடைகளைக் களைந்தேன். மேனியில் மழை தொட்ட போது அவர் நாத்தொட்டதென நடுங்கினேன். முலைகளை அவர் அளைவதெனக் காற்றை விரட்டினேன். புற்தரை நழுவியது. ஆடியபடி காற்றில் முளைத்தெழுந்தேன். அவர் என்னை அறியாதவரென அவர் பெருக்கில் ஆடியிருந்தார். நானும் அவரை அழிந்து ஆடலெனப் பின்னியெழுந்தேன். மழைக்கும் எனக்கும் ஆடலில் போரெனக் களித்துச் சிரித்தேன். குழை சேற்றில் வழுக்கி நீரில் விழுந்து கூத்தாடினேன். ஆனால் மேனி ஒவ்வொரு கணமும் அவரை நோக்கியிருந்ததை அகமுணர்ந்த போது மகிழ்ச்சித் திவலைகளை வானம் கொட்டுகிறதென எண்ணினேன். அகம் முழுதும் ஆடல் பித்தை அள்ளி விசிறியது.

இடிகொட்டி வானம் துடித்த கிளைக் கணமொன்றில் தவறி விழுந்த அமுதத் துளியொன்று மானுடரின் நாவில் தொட்டது போல் அவர் தேகத்தில் முட்டி நின்றேன். அவர் ஆடலில் திளைத்து வானெழும் கணத்தில் அவரைப் பற்றி வானெழுந்தேன். மண்ணில் அவர் சுழன்ற போது மழையின் கரங்களென அவர் கழுத்தைப் பற்றினேன். ஈசனும் அம்மையுமென ஒரு கணம் அகம் துள்ள அவரை இழுத்து ஆடினேன். அப்பேருரு ஒரு மலர்க்காம்பென என் கைகளில் ஆட ஆட என் அகம் வெல்லும் கணங்களின் உவகை கொண்டாடியது. அவரைத் தரையில் வீழ்த்தி உடலை உடலால் அளைந்தேன். பித்தாடி முத்தமிட்டேன். அவர் விழைவின் கனிவென முத்தமிட்டார். அம்மென் முத்தங்கள் என் பெருக்கை மென்னுநுனிகளாக ஆக்கியது. ஒவ்வொரு கணமும் விரியும் காலமெனத் தோன்றியது. முத்தத்தை அன்று தான் அறிந்தவளென அவர் இதழ்களை இதழ்களால் தடவினேன். அதில் நீறு வாசம் கரைந்து மணத்தது. அதில் போதை கொண்டவளென ஆகிய போது மழைப்பெருக்கின் இடைகள் துலங்கின அவர் விழிகளைத் தயக்கமின்றி நோக்கினேன். விழைவு நாகங்களென அவர் விழிகளில் மின்னியது. என் முலைகளை அருந்தக் கொடுத்தேன். உள்ளிருந்து தின் தின்னென அகம் கூவியது. அவரோ சொல்லுக்கு நா பழகும் குழவியென நாவைப் பிரட்டி மெல்லத் தொட்டார். காமத்தில் வேகம் நம்மை விசையூட்டிப் பித்தேற்றுவது. மென்மையோ பித்தேற்றிச் சித்தமழிப்பது. அவர் நுண்கரங்களென விரல்களை என் உடலில் தொட்டுத் தொட்டு உரசினார். கற்கள் உரசி மூண்ட முதற் தீயெனக் காமம் என்னை அணைத்தது. அவர் குறியை நோக்கினேன். மண்ணெழுந்த லிங்கமென அதனை வாயிலிட்டேன். என் தொண்டை வரை புதைத்து அதை விழுங்கி விடத் துடிப்பவளென மெல்ல மெல்ல நாதொட்டு அவரை அறிந்தேன். குறியில் சுக்கில மணம் எழுந்தது.

என்னை மதவேழமென உணரும் அகத்தை அச்சிறு அங்குசத்தால் அவர் அடக்கினார். என்னைப் புரட்டி முலைகள் புல்லில் அழுந்த அல்குலில் லிங்கம் நுழைத்தார். என் வாழ்நாட்கள் ஒருகணத்தில் தோன்றி மறைந்தன. அடுத்த நாழிகை நான் மாண்டுவிடுவேனோ அஞ்சும் வண்ணம் என்னைப் புணர்ந்து கழுத்தைக் கவ்வினார். நான் முனகல்களின் உச்ச நரம்புகளில் துடித்தேன். அவை எனக்கே யாரோ ஒலிப்பவை போல் கேட்டன. அரை நாழிகை புணர்ந்து என்னைத் திருப்பி நேர்நோக்கி மீண்டும் என்னுள் நுழைந்தார். அவர் விழிகளில் மிதந்த கனவில் நானும் ஒரு பருக்கையென ஒட்டிக் கலவியில் பிதற்றினேன். அகம் சொற்களை மறந்து ஓசையென்றாகியது. ஒலிகள் ஒன்றை விட்டு இன்னொன்றில் தாவி இதற்கு இது தான் பொருளா என மயங்கி வேறொன்றுக்குத் தாவின. அல்குல் மதனம் சீறும் பேராழிச்சுழலெனக் குவிந்தது. அவரோ குன்றா விசையில் நீர்ச்சுழி நுழைந்தார். மேலுமொரு நாழிகை பெயர்ந்தது என்பதை எங்கனம் அறிந்தேன் என வியக்கிறேன். அவர் படுத்திருந்து என்னைத் தலையமர்த்தி யோனியை நாவால் வருடினார். திளைத்து வழிந்த யோனி திகைத்து நின்று அவர் நாவைப் புணர்ந்தது. வாயில் முளைத்த குறியென என்னைப் புணர்ந்தது. மேனி நிமிர்ந்து முலைகள் கல்லாகிக் கனத்துக் கரைந்தேன். இச்சையில் எல்லா வாயில்களையும் ஓங்கி ஓங்கி அறைந்து உடைத்தேன். எழுந்து அவரின் குறியில் அமர்ந்து அவரைப் புணர்ந்தேன். பெருங்களி என்னில் ஆடலென எழுந்தது. காதின் குழையில் தூங்கிய சிறுமணிகளின் ஒலியென அக்கணங்களைக் கேட்டேன். காலம் விசையிழந்து அசையாமல் நிற்கையில் அவற்றின் விதிகளை மீறி அசைவு கொண்டவளென உணர்ந்தேன். ஒரு கணம் புரவியைப் புணர்கிறேன் என்றும் வேழத்தைப் புணர்கிறேன் என்றும் சிம்மத்தைப் புணர்கிறேன் என்றும் மெய்ப்புக் கொண்டேன். ஆண். முழுமுற்றான ஆண். விழைவு கனிந்த தொல்மரத்தில் ஆடும் ஊஞ்சலென ஏறியமைந்தெழுந்து இடைவிடாது ஆடினேன். வழுக்கும் காலமென யோனி மலர்ந்திருந்தது. அதை உறைக்கும் கோலென அவர் குறி என்னில் அமைந்தது. அவர் விழிகளுக்கு அப்பாலென நின்றிருந்தார். எனது விழைவுகளைத் தண்சிரிப்புடன் நோக்கினார். அவர் மார்பைக் களைந்து மயிர்களை அள்ளியிழுத்தேன். மார்க்காம்புகளில் நாவால் துவண்டேன்.

ஒற்றைக் கரத்தால் என் பின் தலை பற்றியபடி அவர் நெஞ்சில் ஒரு கரத்தைப் புரவியின் முதுகைப் பற்றுபவளெனப் பிடித்துக் கொண்டு புணர்வின் ஒலிகளற்ற உதட்டசைவால் மழையை வாழ்த்தினேன். காலங்களை வாழ்த்தினேன். காதலை வாழ்த்தினேன். விழைவை வாழ்த்தினேன். எத்தனை காலம் புணர்ந்தேன் என எண்ணம் மறந்தது. அவர் குறி துடிப்பதை அறிந்தேன். எழுந்து வாயில் சுவைத்து சுக்கிலம் குடித்தேன். நீற்றின் சுகந்தமென சுக்கிலம் வாய்நுழைந்தது. தாகம் தாகமென அகம் குடித்தது. மழை ஓயப்போவதில்லை எனப் பெருகியது. என்னை மார்பில் போட்டபடி மழையில் கிடந்தார். நான் நடுங்கித் துடிக்கும் உடலை அவரில் போட்டபடி மழையில் கரைந்து அவரில் வழிந்தேன். அவர் மூச்சு ஏறி இறங்கிய போது மலையில் மிதக்கும் முகிலென ஆனேன். அவர் என் முதுகை விழியற்றவனின் தொடுகையெனத் தொட்டணைத்தார். அக்கணம் என்னுள் காதல் தன்னை ஒரு பெருக்கொளியெனக் காட்டியது. இவ்வுடல் எனது கலம். இவர் என் கடல் எனக் கண்டேன். காதல் ஒரு பயணம் பதும்மை”

அங்கினி கனவு கலைந்து விழிப்பவளெனப் பதும்மையை நோக்கினாள். அவள் உதட்டில் என்றுமிலாத ஒளியொன்று சூடியிருந்தாள். “அவர் யாரென அறிந்தேன் அத்தை. நீ கொடுத்து வைத்தவள் தான்” என நகைத்தாள். பின் அவளை இறுக்கி அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டுக் “கள்ளி” எனப் பாராட்டி இரு கன்னங்களியும் கிள்ளினாள். அங்கினி எழுந்து வீழ்ந்து கொண்டிருந்த மூச்சை நிதானப்படுத்தி கண்களைச் சில நொடி மூடினாள். உதட்டில் அக்கனல் ஓவியமென மின்னியது. அவள் வதனம் பொலிந்து பூத்தது. காமத்தின் கொற்றவையொருத்தி அவளில் எழுந்து தன்னைச் சிரித்தாள்.

வாசித்தவர்கள் : 429

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,171)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (2,007)
  • காதலின் முன் பருவம் (1,998)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,909)
  • விடுதலையில் கவிதை (1,890)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme