03: களி விளி
சாமியாடி தங்கிட தத்தரின் மகள் சுழல்விழி ஆகாயத்தின் கடைசி விண்மீன்கள் இருளுக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் அதிகாலையில் கற்கோவிலுக்குச் செல்லும் பெருவீதியால் நடக்கத் தொடங்கினாள். சூழ நின்றிருக்கும் ஒவ்வொரு நெடுவிருட்சமும் அவளின் துணை தெய்வங்கள். கைகளில் ஏந்தியிருந்த கூடையில் செவ்விரத்தைகளையும் தாமரைகளையும் இட்டு நிரப்பியிருந்தாள். குளத்தில் இறங்கி கழுத்தளவு நீர்வரை சென்று தாமரைகளைப் பறிப்பாள். தவளைகள் நீந்தி வந்து தொப்புளில் உரசினால் உந்திக் கரைக்கு ஓடிவருவாள். தவளைகள் என்றால் அவளுக்கு அச்சம். …
