இம்மாத (ஏப்ரல்) நீலம் இதழில் வந்துள்ள ‘பெருங்காவியம்’ சிறுகதை எனக்குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது சிறுகதை அல்ல. ஏழு கன்னிமார்கள் என்னும் தொன்மத்தை மறு உயிர்ப்புச் செய்து காட்டியுள்ள அப்புனைவு கவித்துவமான மொழியுடன் கடந்த காலத்தை நிகழ்காலத்தோடு தொடர்புபடுத்தியுள்ளது. நடந்து முடிந்த ஈழத்தனி நாட்டுக்கான போர்க்காட்சிகளின் சில கீறல்களையும் மனவோட்டங்களையும் உருவகமாக எழுதிக் காட்டியுள்ள அப்பனுவல், ஈழப்போரில் நடந்த நிகழ்வுகளும் அழிவுகளும் தன்னையழித்துக்கொண்ட வீரதீரங்களும் தியாகங்களும் குமுறல்களும் பகையழித்த கொலைகளும் பெருங்கனவாகிப் போனது என்ற உண்மையைக் கோட்டுச் சித்திரங்களாகச் சொற்களில் வரைந்துள்ளது. ஆனால் இத்தனையும் எதற்காக என்று கேள்வியையும் எழுப்பி, எழுதப்படப்போகும் பெருங்காவியத்தின் சொற்களாகத் தான் நிற்கப்போகின்றன என்பதை முன்வைத்துவிட்டு அதிலிருந்து விலகிக் கொள்வதையும் செய்கின்றது. மறக்க முடியாத எல்லாவற்றையும் மறக்க வேண்டுமென்றால் எழுதப்பெற்ற சொற்களை அழித்துவிடுவதைத் தவிர வேறில்லை என்று கையறு நிலையையும் காட்சிப்படுத்தியுள்ளது.

கிரிசாந் எழுதியுள்ள இப்பனுவலைச் சிறுகதை என்ற இலக்கியவகையாகக் குறிப்பிட்டுள்ளது நீலம். சிறுகதை அல்லது நாவல் என்ற புனைவு வடிவத்தின் கூறுகளைத் தவிர்த்துவிட்டு உணர்வெழுச்சியை முதன்மையாகக் கொண்டுள்ள இவ்வகை எழுத்தைச் சிறுகதை என்ற வகைமைக்குள் குறிப்பிட்டுக் காட்ட வேண்டிய தேவையுமில்லை. இதனை வாசிக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் ஒரு நெடுங்கவிதையை வாசிக்கும் மனநிலைக்குள் என்னைத் தள்ளியது இந்த எழுத்துமுறை. அதன் பின் அதே நேர்கோட்டில் வாசித்துக் கொண்டே நீண்டது. ஒற்றை உணர்வெழுச்சித்தன்மை கொண்ட புதுவகைப் புனைவு பெருங்காவியம். நீங்களும் வாசித்துப் பார்க்கலாம்.
பேராசிரியர். அ. ராமசாமி