தும்பி: மீளப் பறத்தல்

தும்பி சிறார் மாத இதழ் புதிய துவக்கம்
பனிமலைகள் சூழ்ந்த லடாக் பள்ளத்தாக்குப் பகுதியில் வாழ்ந்த அச்சிறுவனுக்குப் பதினோரு வயது. அந்தக் கிராமத்தில் நூலகம் இல்லை, புத்தகக்கடை இல்லை, நன்றாகக் கட்டப்பட்ட ஒரு பள்ளிக்கூடம்கூட இல்லை. ஆனாலும் அச்சிறுவனின் மனதில் ஒரு கனவு மட்டும் நெடுநாளாகத் துடித்துக்கொண்டே இருந்தது. ‘தனது கிராமத்தில்… தனது வீட்டில் வைத்து ஒரு கதைப்புத்தகம் வாசிக்க வேண்டும்’ என்பதே அக்கனவு.
ஓர்நாள் அக்கிராமத்திற்கு ஒரு பயணி வந்து தங்கினார். அவருடைய பையில் நிறைய புத்தகங்கள் இருந்தன. ஒரு மரத்திற்குக் கீழே அமர்ந்து புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினார். யதேச்சையாக அங்கு வந்த அச்சிறுவன் புத்தகம் வாசிக்கும் பயணியைக் கண்டு வியப்படைந்தான். “எனக்கும் ஒரு புத்தகம் தர முடியுமா? நான் அதை அழுக்கில்லாமல் திருப்பிக் கொடுக்கிறேன்” என்று அவரிடம் கேட்டான். மகிழ்வுடன் அவர் ஒரு கதைப்புத்தகத்தைக் கையில் கொடுத்து அனுப்பிவைத்தார்.
வீட்டுக்கு வந்த அச்சிறுவன் தனது சகோதர்களையும் நண்பர்களையும் அழைத்து, சாக்குப்பையை விரித்து, சிறுவிளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் வைத்து அந்தக் கதையைப் படித்துக் காட்டினான். அந்தப் புத்தகம் தனக்குக் கிடைத்ததையும் ஒரு கதைபோல விறுவிறுப்பாகச் சொன்னான். மறுநாள் காலையில், அச்சிறுவன் பயணியிடம் சென்று கதைப் புத்தகத்தை அழுக்கில்லாமல் திருப்பிக் கொடுத்தான்.
ஆனால், இம்முறை அவனுடன் எட்டு குழந்தைகளும் சென்றிருந்தனர். அவர்களின் கைகளில் ஒரு தேநீர் கோப்பை இருந்தது. அதை அவர்கள் பயணியிடம் நீட்டினர். ‘கதைப்புத்தகம் தந்ததற்கான நன்றி இது’ எனத் தெரிவித்தார்கள். குழந்தைகளின் அன்பில் நெகிழ்ந்த பயணி, தேநீருக்கான நன்றியாக எட்டு கதைப்புத்தகங்களை எடுத்து குழந்தைகளிடம் கொடுத்தார். அளவில்லாத மகிழ்ச்சியோடு குழந்தைகள் வீட்டுக்குத் திரும்பி கதைப்புத்தகத்தை வாசித்து அதைப்பற்றியே பேசி வியந்தார்கள்.
அன்றிரவு அந்தப் பயணி ஒரு முடிவெடுத்தார். ஒரு யாக் எருமையை வாங்கி அதில் சில புத்தகப் பைகளைத் தொங்கவிட்டு, இமயமலைக் கிராமங்களுக்குச் சென்று குழந்தைகளுக்குப் புத்தகங்களை வழங்கும் பயண நூலகமாக ‘எருமை நூலகத்தை’ அமைத்தார். மடியில் பாலையும் முதுகில் புத்தகங்களையும் சுமந்துகொண்டு அந்த எருமை நூலகம் பனிமலைக் கிராமங்களில் துடிக்கும் சின்னஞ்சிறிய கனவுகளை நிறைவேற்றும் நோக்குடன் நடக்கத் துவங்கியது.
கிராமத்தைவிட்டு செல்வதற்கு முன்பு அப்பயணி, தன்னிடமிருந்த பன்னிரண்டு கதைப் புத்தகங்களை அச்சிறுவனிடம் ஒப்படைத்தார். அச்சிறுவன் அதைக்கொண்டு தன் வீட்டில் ‘சாக்குப்பை நூலகத்தை’ தொடங்கினான். கிராமத்துக் குழந்தைகள் அங்கு வந்து புத்தகங்களை இரவல் பெற்றுச்சென்று, வாசித்து முடித்தபிறகு கொண்டுவந்து ஒப்படைத்தார்கள். அக்கிராமத்தின் துடிக்கும் இருதயமாக அந்த சின்னஞ்சிறு நூலகம் மாறிப்போனது.
காலங்கள் கடந்த பிறகு, ஒரு தொண்டு நிறுவனம் அந்தக் கிராமத்தில் ஒரு நூலகத்தைக் கட்ட விரும்பியது. அவர்கள் அக்கிராமத்தினரிடம் கேட்டார்கள், “இங்கு ஏன் ஒரு நூலகம் தேவை?”. கிராமத்தினர் அனைவரும் ஒரே வரியைச் சொன்னார்கள், “ஒரு சிறுவன் யாரிடமிருந்தோ ஒரு புத்தகத்தை கடனாக வாங்கிவந்தான்; அது எங்களுக்குக் கடலைக் காட்டியது”. எல்லா கரங்களும் ஒன்றுசேர்ந்து கட்டுமான வேலைகளைப் பகிர்ந்துகொண்டன. கல் மேல் கல் நின்று, கண்ணீரும் சிரிப்புமாக மேலெழுந்த அந்நூலகம் ஒரு யாக் எருமையின் பால்மடியைப் போல மண்ணில் முளைத்திருந்தது.
பள்ளியைவிட்டு இடைநிறுத்தப்பட்ட சிறுமி மீண்டும் பள்ளிக்குப் போகிற அதே தவிப்புடனும் கனவுடனும் தும்பி சிறார் இதழை மீண்டும் தொடங்குகிறோம். குழந்தைகளின் கனவுகளுக்கு மரியாதையளித்து அவற்றை வளர்த்தெடுக்கும் இப்பெருஞ்செயலை ஒவ்வொரு தோல்விகடந்தும் நிறைவேற்ற வேண்டிய அகத்தவிப்புமட்டும் ஆழ்சுனைத் தண்ணீரென சுரந்துகொண்டே இருக்கிறது. அச்சு இதழாகத் தும்பி மீண்டும் மூச்சுவிட இந்நிகழ்காலம் நல்லருள் நல்குக.
இம்முறை புதிய வடிவிலும், பெரிய அளவிலும் தும்பி சிறார் மாத இதழ் மீண்டும் அச்சுப்பதிப்பாக நற்துவக்கம் கொள்கிறது. கடுமையான பொருளியல் நெருக்கடிச் சூழல் காரணமாக கடந்தாண்டு நிறுத்தப்பட்ட தும்பி இதழ், நண்பர்களின் தொடர்ந்த வலியுறுத்தலாலும் உதவிநீட்சியாலும் இச்சாத்தியத்தை எட்டுகிறது.
தும்பி இதழை மீண்டும் துவங்க, தன் உண்டியலை உடைத்துத் தொகை அனுப்பிவைத்த தூரத்துக் குழந்தை முதல், தேங்கிவிட்ட முந்தைய இதழ்களை எங்கெங்கோவுள்ள மலைக்கிராம நூலகங்களுக்கு சென்றடைய உதவிபுரிந்த தோழமைகள் வரை ஒவ்வொரு உள்ளத்தின் உறுதுணையும் இந்த உயிர்த்தெழலின் பிரதானக் காரணமாகிறது. கரங்கூப்பி கைதொழுது கண்ணீர் மல்குவதைத் தவிர பிறிதேதும் தெரியாத நெகிழ்வுத் தருணமாக இதைக் கருதுகிறோம். உள்ளத்தால் உதவிநின்ற எல்லா உயிர்களையும் இக்கணம் நிலம்பணிந்து வணங்குகிறோம்.
~
புதிய தும்பி இதழுக்கானத் தொகை விபரங்கள் பின்வருமாறு,
தும்பி (தனி இதழ்) – ரூ 150
ஆண்டுசந்தா (12 இதழ்கள்) – ரூ 1500
~
நூலகங்கள், பள்ளிகள், குழந்தைகள் என வாசிக்கும் மனங்களிடம் தும்பி சிறார் இதழைக் கொண்டுசேர்க்கும் இச்செயலுக்கு நண்பர்களின் துணையிருப்பையும் பகிர்தலையும் வேண்டுகிறோம். தமிழில் பலவண்ண அச்சு இதழாக நீடிக்கும் மிகச்சில சிறார் இதழ்களில் தும்பி இதழும் இருப்படைந்து, குழந்தைகளின் அகவுலகம் கனவும் மகிழ்வும் நிறைந்து பெருகி உயிர்ப்படைய நம் ஒவ்வொருவரின் கரங்கோர்ப்பும் அவசியமாகிறது.
“குழந்தைகளைப் பலியிடும் சடங்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக பல்வேறு வடிவங்களில் இன்னும் அது உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் நடைமுறையில் உள்ளது. நம்முடைய மிகவும் அழிவுகரமான பாவங்களின் பலிபீடங்களில் நாம் குழந்தைகளை பலியிடுகிறோம். ஆகவே, பூமியில் மிகவும் சக்திவாய்ந்த விசைகளில் ஒன்று, குழந்தையின் பிரார்த்தனை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்” என்றுரைத்த குழந்தைகள் செயற்பாட்டாளர் வெஸ் ஸ்டஃபோர்டு அவர்களின் வார்த்தைச் சத்தியத்தை திரும்பவும் ஒருமுறை மனதில் நினைத்துக்கொள்கிறோம். ஒரு கதைப்புத்தகம் ஒரு பலிபீடத்தை அகற்றும் என உளமாற நம்பி இம்முயற்சியைத் தொடர்கிறோம்.
நன்றிகளுடன்,
தும்பி சிறார் இதழ்
9843870059
www.thumbigal.com